மனிதர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை தொழில்நுட்பம் என்பது வளர்ச்சி கண்டுள்ளது. அது பன்மடங்கு வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது. இந்த அசுர வளர்ச்சியானது பல சாதகங்களையும் பாதகங்களையும் கொண்டுள்ளது.
அந்த வகையில் மக்களின் பாதுகாப்பு கருதி, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஓடிபி அடிப்படையிலான ஏடிஎம் வித்டிராவலை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருந்தது.
ஆனால் இந்த திட்டமானது இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரையில் மட்டுமே நடைமுறையில் இருந்து வருகிறது.
24 மணி நேரமும் OTP மூலம் பணம் எடுக்கும் வசதி
ஆனால் இந்த வசதியினை தற்போது 24 மணி நேரமும் செயல்பாட்டில் இருக்கும் என எஸ்பிஐ அறிவித்துள்ளது. இந்த சேவை விரிவாக்கமானது செப்டம்பர் 18 முதல் அனைத்து எஸ்பிஐ ஏடிஎம்களிலும் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. இது ஏடிஎம் மோசடிகளை குறைக்க வழிவகுக்கும். அதோடு மக்களின் பணமும் பாதுகாப்பாக இருக்க இந்த நடைமுறை வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும்
இனி எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் வாடிக்கையாளர்கள் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது, அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். இந்த ஓடிபி நம்பரை பயன்படுத்தித் தான் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வேண்டி இருக்கும். ஆக இனி வாடிக்கையாளர்கள், சரியான மொபைல் நம்பர் இருந்தால் மட்டுமே 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியும்.
மோசடிகள் குறையும்
எஸ்பிஐயின் இந்த சேவை விரிவாக்கம் வாடிக்கையாளர்கள் தங்களை மோசடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உதவும். இதன் மூலம் உங்களது ஏடிஎம் கார்டினை யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. எல்லாவற்றையும் விட உங்களது ஏடிஎம் கார்டினை குளோனிங் செய்தாலும் கூட, ஏடிஎம்மினை பயன்படுத்தி பணம் எடுக்க ஓடிபி வேண்டும். ஆக தவறான முறையிலும் உங்களது ஏடிஎம்மினை பயன்படுத்த முடியாது.
ஓடிபி கொடுத்த பின்பு தான் பணம் எடுக்க முடியும்
இந்த ஓடிபி எண் என்பது பரிவர்த்தனைக்கு முன்பு கணினியால் உருவாக்கப்படும், ஒரு எண் ஆகும். வாடிக்கையாளர்கள் பெற நினைக்கும் தொகையினை திரையில் பதிவு செய்த பின்பு, ஏடிஎம் திரையில் உங்களது ஓடிபியினை கேட்கும். அப்போது தான் உங்களது பதிவு செய்யப்பட்ட நம்பருக்கு வரும். ஓடிபியை பதிவு செய்த பின்பே உங்களது தொகையினை நீங்கள் பெற முடியும்.
வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு முக்கியம்
இந்த திட்டம் குறித்து எஸ்பிஐ-யின் சில்லறை மற்றும் டிஜிட்டல் வங்கியின் எம்டி சிஎஸ் செட்டி, வாடிக்கையாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில் வங்கி எப்போதும் முன்னணியில் உள்ளது. இந்த ஓடிபி திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள், பாதுகாப்பான பரிவர்த்தனையினை மேற்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என கூறியுள்ளார்.
இதை சரியாக செய்து கொள்ளுங்கள்
வாடிக்கையாளார்கள் பலர் வங்கியில் கொடுத்த மொபைல் எண் ஒன்றாக இருக்கும். ஆனால் அதனை மாற்றி விட்டு பயன்பாட்டில் வேறு நம்பரை பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் உடனடியாக சென்று உங்களது வங்கிக் கிளையில் புதிய மொபைல் நம்பரை கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள். அப்போது தான் ஏடிஎம்மில் இனி பணம் பெற முடியும். வங்கி மோசடிகளில் பலரும் ஏமாறுவது இப்படி தான். ஏனெனில் மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வந்தாலாவது நம்மால் மோசடியினை தடுக்க வாய்ப்புகள் இருக்கும். ஆனால் அதுவும் இல்லை என்றால், பாதிப்பு நமக்கே.. '
உண்மையில் எஸ்பிஐ-யின் இந்த திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல விஷயம் தான்.