இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வீடியோ KYC மூலம் வங்கிக்கணக்கு திறக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கிளைக்கு செல்லாமல் ஆன்லைனில் எஸ்பிஐ கணக்கை தொடங்கலாம்.
இதுகுறித்து எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் முழு விபரங்களையும் பதிவு செய்துள்ளது.
எஸ்பிஐ டிஜிட்டல் சேமிப்பு கணக்கு
வீடியோ KYC மூலம் வங்கி கிளைக்கு செல்லாமல், எஸ்பிஐ டிஜிட்டல் சேமிப்பு கணக்கை ஆன்லைனில் பயனர்கள் திறக்கலாம். இதுகுறித்த முழு விபரங்களை தற்போது பார்ப்போம்.
எஸ்பிஐ இன்ஸ்டா பிளஸ் சேமிப்பு கணக்கு
எஸ்பிஐ வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்க கிளைக்கு வரவேண்டும் என்ற அவசியம் இல்லை. கணக்கு தொடங்க ஆதார் விவரங்கள் மற்றும் பான் கார்டு இருந்தால் போதும். எஸ்பிஐ வங்கியில் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு தொடங்கிய பின் வங்கி வாடிக்கையாளருக்கு ரூபே கிளாசிக் கார்டு வழங்கப்படும்.
மொபைல் வங்கி
ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர்களுக்கு இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி மூலம் 24*7 வங்கி வசதி கிடைக்கும். மேலும் எஸ்எம்எஸ் வசதி, எஸ்பிஐ விரைவு மிஸ்டு கால் வசதி, இன்டர்நெட் பேங்கிங் சேனல் மூலம் கணக்குகளை மாற்றும் வசதி ஆகிய வசதிகள் கிடைக்கும்.
காசோலை கிடையாது
மேலும் இந்த கணக்கிற்கு காசோலைப் புத்தகம் வழங்கப்படாது. அதேபோல் வங்கி கிளையில் டெபிட்/வவுச்சர் பரிவர்த்தனை அல்லது கையெழுத்து அடிப்படையிலான பிற சேவைகள் எதுவும் அனுமதிக்கப்படாது. ஆனால் அதே நேரத்தில் வாடிக்கையாளர் தாங்கள் தேர்வு செய்த கிளைக்கு சென்று விண்ணப்பித்தால் அதன்பின்னர் காசோலைப் புத்தகம் மற்றும் பாஸ்புக் வழங்கப்படும்.
எஸ்பிஐ கணக்கு தொடங்குவது எப்படி?
எஸ்பிஐ இன்ஸ்டா பிளஸ் சேமிப்புக் கணக்கை தொடங்குவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம். முதலில் YONO விண்ணப்பத்தை டவுன்லோடு செய்ய வேண்டும். பின்னர் புதிய சேமிப்பு கணக்கு என்பதை கிளிக் செய்யவும். இப்போது "வித்அவுட் கிளை விசிட்" விருப்பத்தை கிளிக் செய்யவும். அதன்பின் உங்கள் பான் எண் மற்றும் ஆதார் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட ஓடிபிஐ பதிவு செய்தால் உங்களுக்கான எஸ்பிஐ வங்கிக்கணக்கு தயார்.
வீடியோ KYC
எஸ்பிஐ வங்கியில் வங்கிக்கணக்கு தொடங்கியவுடன் YONO செயலியில் சென்று வீடியோ KYC செயல்முறையை முடிக்க வேண்டும். நீங்கள் தரும் தகவல்கள் அனைத்தும் வங்கி அதிகாரிகளால் சரிபார்த்த பிறகு உங்கள் கணக்கு செயல்பாட்டு வரும்.