பொதுவாக அரசின் சேமிப்பு திட்டங்கள் என்றாலே அதற்கு மக்களிடத்தில் முக்கியத்துவம் உண்டு.
ஏனெனில் கணிசமான வருவாயுடன் பாதுகாப்பும் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக பல சலுகைகளும் உண்டு. இதனால் அரசின் சேமிப்பு திட்டங்களுக்கு எப்போதும் மக்களிடத்தில் ஒரு தனி இடம் உண்டு.
சரி நடப்பு ஆண்டு முடிய இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், நடப்பு ஆண்டில் சிறந்த அரசின் சேமிப்பு திட்டங்கள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.
என்னவெல்லாம் பார்க்கபோகிறோம்
இதுவரையில் எந்த சேமிப்பு திட்டம் நல்ல லாபம் கொடுத்துள்ளது. எந்த திட்டத்தில் யாரெல்லாம் முதலீடு செய்யலாம்? வயது தகுதி என்ன? குறைந்தபட்சம் எவ்வளவு முதலீடு செய்ய வெண்டும். அதிகபட்சம் எவ்வளவு செய்ய வேண்டும். முதிர்வு காலம் எவ்வளவு? நீங்கள் முதலீடு செய்த தொகையினை பாதியில் எடுக்க முடியுமா? எந்த திட்டத்திற்கெல்லாம் வரி சலுகை உண்டு? என பலவற்றையும் பார்க்கலாம்.
அரசின் தேசிய சேமிப்பு திட்டம்
அரசின் (NPS) எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டமானது ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் நிர்வகிக்கப்படும் நீண்டகால ஓய்வூதிய திட்டமாகும். இந்த திட்டத்தினை பொறுத்த வரையில் 100 சதவீதம் பங்கு முதலீடு இல்லை. இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 8 - 10% ஆகும். இந்த திட்டத்தில் நுழைவு வயது 18 வயதாகும். குறைபட்ச முதலீடு என்பது டயர் 1 நகரங்களில் 500 ரூபாயாகும். டயர் 2 நகரங்களில் 250 ரூபாயாகும். இதில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு என்பது இல்லை. முதிர்வு வயது என்பது 60 வயதாகும். இதில் இடையில் டயர் 2 நகரங்களில் இடையில் பணம் எடுக்க அனுமதி உண்டு. இதில் சில வரிசலுகையும் உண்டு.
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்
பெற்றோர்களுக்கு தங்களது பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பாதுகாக்காவும், சேமிக்கவும் ஊக்குவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது தான் சுகன்யா சமிர்தி யோஜனா திட்டம். இந்த திட்டத்திற்கு வட்டி விகிதம் 7.6% ஆகும். பெண் குழந்தையின் பிறப்பு முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும், இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தினை தொடங்க முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும்.
இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் வைப்பு ஒவ்வொரு ஆண்டும் 1000 ரூபாய் தேவைப்படுகிறது. இதே ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சுகன்யா சமிரிதி திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் படி அதிகபட்சமான 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
நீண்டகால நோக்கங்களுக்காக, அதுவும் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நிச்சயம், இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு. இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.
இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 பங்களிப்புகள் இருக்கலாம். அதாவது 12 தவணைகளாக உங்களது தொகையை நீங்கள் செலுத்திக் கொள்ளலாம். உங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கி முதிர்வு அடைந்துவிட்டால், 15 வருடத்தின் நிதியாண்டின் முடிவில் க்ளைம் செய்து கொள்ளலாம்.
உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 5வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம்.
அரசின் தேசிய சேமிப்பு பத்திரம்
என்.எஸ்.சி. எனப்படும் தேசிய சேமிப்பு பத்திர திட்டம்(National Savings Certificate), நாட்டில் உள்ள அனைத்து அஞ்சலகத்திலும் பெறக்கூடிய திட்டமாகும். இது ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு முதலீட்டு திட்டமாகும். தேசிய சேமிப்பு பத்திரம் என்பது பாதுகாப்பான மற்றும் அதே வேளையில் ரிஸ்க் குறைவாக கொண்ட திட்டமாக கருதப்படுகிறது.
அனைத்து இந்திய குடிமக்களும்(Resident Individual) இத்திட்டத்தில் முதலீடு செய்ய தகுதியுள்ளவர். குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (SCSS ).
அரசின் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் (SCSS ). இது அரசின் திட்டம் என்பதால் மிக பாதுகாப்பானதாக பார்க்கப்படுகிறது. 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாகும். இந்த சேமிப்புத் திட்டத்தினை ஓய்வூதிய சலுகைகள் கிடைத்த ஒரு மாதத்திற்குள் கணக்கு திறக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உண்டு. இந்த சேமிப்பு திட்டத்தில் சேர ஒரு நபர் 55 வயது அல்லது 60 வயது, அதற்கு மேற்பட்டவராக இருக்கவேண்டும். 50 வயதுக்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற பாதுகாப்பு பணியாளார்களும் இந்த சேமிப்பு திட்டத்தில் இணைய தகுதியானவர்கள் தான்.
அரசின் இந்த சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையில் இருக்கலாம். எனினும் பணியில் இருந்து ஓய்வுபெற்றபோது பெறப்பட்ட தொகைக்கு மேல் இருக்கக் கூடாது. இந்த பணம் ஒரு வைப்புத் தொகையாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். வைப்பு தொகை வரையறுக்கப்பட்டிருந்தாலும், ஒரு நபர் பல எஸ்சிஎஸ்எஸ் கணக்குகளை தொடங்கிக் கொள்ள முடியும்.
இந்த சேமிப்பு திட்டத்திற்கு காலாண்டுக்கு ஒரு முறை அரசு வட்டியை மாற்றியமைக்கிறது. கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 7.40% ஆக இருந்தது. இந்த SCSS திட்டத்தின் முதிர்வுகாலம் 5 ஆண்டுகள் தான். இருப்பினும் இந்த திட்டத்தினை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும். மூத்த குடி மக்களுக்கான இந்த சேமிப்பு திட்டத்தில் வரி சலுகைகளும் உண்டு. இது 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம்.