பவானி : ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள குப்பிச்சி பாளையம் என்றாலே அது பஞ்சு மெத்தை தான். இந்தியா முழுவதும் உள்ள மக்களை பஞ்சு மெத்தையால் தூங்க வைக்கும் இவர்களால், வர்த்தக பிரச்சனையால் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை என்றும் கூறுகிறார்கள்.
இப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பஞ்சு மெத்தை தலையனை, பொம்மைகள் என உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களும், இதை குடிசைத் தொழிலாக செய்யும் பல பல நூறு குடும்பங்களும் உண்டு.
ஏன் தங்களின் அடிப்படை வாழ்வாதாரமே இது தான் என்று கூறும் இவர்கள், ஒரு காலத்தில் ஒஹோவென்று கொடிகட்டி பறந்து கொண்டிருந்த வர்த்தகம், தற்போது படுத்த படுக்கையாகிவிட்டது என்றும் கதறுகிறார்கள்.
இலவம் பஞ்சு மவுசு குறைந்து விட்டது?
ஒரு காலத்தில் மக்கள் இலவம் பஞ்சு மெத்தை என்றாலே, மக்கள் ஒடோடி வருவார்கள். ஆனால் இன்று செயற்கை மெத்தைகளின் சொகுசு வாழ்க்கைக்கு பழகி விட்டார்கள். இதனால் நாளுக்கு நாள் இலவம் பஞ்சு மெத்தையின் மவுசும் குறைந்துவிட்டது. எங்களின் வாழ்வாதாரமாக கருதப்பட்ட இலவம் பஞ்சுகள், தற்போது நாளுக்கு நாள் இப்படி, எங்கள் கண் முன்னே வீழ்ச்சி கண்டு வருவது மிக வேதனையளிக்கிறது என்றும் புலம்புகிறார்கள்.
பஞ்சுக்கு மவுசு?
நம்ம ஊர் மக்களுக்கு இதன் மவுசு பெரிய அளவில் தெரியாவிட்டாலும், இன்றளவிலும் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். எனினும் முன்பு போல வர்த்தகம் இல்லை என்பதே 100 சதவிகித உண்மை என்றும் கூறுகிறார்கள். கடந்த ஆண்டு சரியான மழையின்மையால் மரங்கள் காய்ந்து போயின, இதனால் உற்பத்தி குறைவாகவே இருந்தது. இது ஒரு புறம் எனில் நடப்பு ஆண்டில் மழையால் காய்களை பறித்து கொண்டு வந்தாலும், அவற்றை பதப்படுத்த இயலவில்லை. ஆக மொத்தம் எங்கள் தொழிலுக்கு இடையூறுகள் என்பது தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது.
இலவம் பஞ்சு காய் விலையும் அதிகரிப்பு
எங்களின் அடிப்படை மூலதனமே இந்த இலவம் பஞ்சு தான். ஆனால் கடந்த ஆண்டு உற்பத்தி குறைவால், வரத்து மிக குறைவாகவே இருந்தது, இதனால் இலவம் காய்களின் விலையும் அதிகரித்து விட்டது. நல்ல தரமான காய் 1 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகி வருகிறது. அதிலும் முன்னர் எல்லாம் ஏக்கர் கணக்கில் பயிரிடப்படும் இலவம் காய், தற்போது அழிவை நோக்கி உள்ளது. ஏரி ஓரங்களில், வயல் ஓரங்களிலும், மட்டுமே காணப்படுகிறது. இதனால் தற்போது இலவம் காய்களை வெளியில் இருந்து தான் வாங்குகுகிறோம் என்றும் கூறுகிறார்கள்.
இலவம் பஞ்சு காய் உற்பத்தி குறைவு?
குறிப்பாக பொள்ளாச்சி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இலவம் காய்கள் உற்பத்தி செய்யப்பட்டது, ஆனால் தற்போது மக்கள் செயற்கை மெத்தைகளுக்கு மாறியுள்ளதால், மக்கள் தென்னை சாகுபடிக்கு மாறியிருக்கிறார்கள். குறிப்பாக இலவம் காய்களை ஏக்கர் கனக்கில் பயிரிடும் சேத்துமடை, பெரியபோது, கோபாலபுரம், சமத்தூர், கோட்டூர் போன்றவற்றில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தனித்தோப்புகளாக இலவங்காய் மரம் வளர்க்கப்பட்டன. ஆனால் தற்போது இலவம் காய்களுக்கு மவுசு குறைந்துள்ளதால் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. போகிற போக்கில் விளைந்த காய்களே அதிகம். இதன் விலையும் அதிகரித்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.
இலவம் காய் - செலவு அதிகம்
இத்தொழிலை பொறுத்த வரை, மரத்தில் காய்பறித்தல், சேகரித்தல், காய்களை மூட்டைகளாக பிடித்து லாரியில் ஏற்றுதல், காய்களில் இருந்து பஞ்சை தனியாக பிரித்தெடுத்தல், பஞ்சை அரவு செய்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்களுடைய வாழ்வாதாரமாக இலவம் பஞ்சை கொண்டிருந்தனர். இதற்காகவே பல மில்கள் பொள்ளாச்சியிலும் இருந்தன. ஆனால் தற்போது இத்தொழிலில் லாபம் குறையவே, அதிக லாபத்துக்காக தென்னை சாகுபடிக்கு விவசாயிகளும் மாறியுள்ளனர். இருக்கும் சிலரும் விலையை அதிகம் படுத்தியுள்ளனர். இது தவிர எதற்கெடுத்தாலும் கூலி என்ற நிலையில், வேலையாட்களின் சம்பளமும் அதிகரித்துள்ளது. இதனால் செலவினங்கள் மிக அதிகரித்து விட்டன என்றும் கூறுகிறார்கள்.
பல ஆயிரம் பேர் வேலையிழப்பு
இலவங்காய் மரத்தின் சாகுபடி பரப்பு வெகுவாக குறைந்ததுள்ள நிலையில். இதை நம்பி இருந்த தொழிலாளர்களும் வேலை வாய்ப்பை இழக்க நேரிட்டுள்ளது. இருக்கும் சிலரும் கூலி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் இத்தொழில் மேலும் நலிவடைந்து வருகிறது. இந்த நிலையில் இலவம் காய்கள் தனிதோப்பாக இல்லாமல், வேலி ஓரங்கள் மற்றும் வரப்புகளில் மட்டுமே மரங்கள் வளர்க்கப்படுகின்றன. இதனால் குறைந்த அளவு காய் பறிக்க அதிக சம்பளம் கொடுக்க நேரிடுகிறது. இதனால் வேலையும் குறைந்துள்ளது, இதனால் பலர் வேலை இழந்துள்ளதாகவும், சிலர் வேறு வேலை தேடி வெளியூர்களுக்கு செல்லும் அவல நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இலவம் காய் விலை எப்படி?
பொதுவாக இலவங்காய் விளைச்சல் குறைவால், ஆயிரம் காய்க்கு 700 - 1200 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. பின்னர் இதைக் காய வைத்து உடைத்து, கொட்டைகளை நீக்கி, பஞ்சாகவும் விற்பனை செய்யும் இவர்கள், சொந்தமாக மெத்தை, தலையனை என உற்பத்தி செய்து வருகிறார்கள். இதன் விலை அந்த அளவுகளை பொறுத்தும், தரத்தினை பொறுத்தும் உள்ளதாகவும், பொதுவாக தலையணை என்றால், 80 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை கூட இருக்கிறது. மெத்தைகள் அதன் அளவுகளும், தரத்தினை பொறுத்தும் மாறுபடும் என்றும் கூறுகிறார்கள்.
புது புது யுக்தி?
களையிழந்து வரும் எங்களது தொழிலை மேம்படுத்த நாங்கள், தற்போது மெத்தையோடு சேர்த்து, மரக்கட்டில்களும், இது தவிர கண்னை கவரும் பொம்மைகளும் தயாரிக்கிறோம். இதற்காக பெங்களுரிலிருந்து வாங்கி வரப்பட்ட முலதனங்களை கொண்டு, உள்ளூர் பெண்களை வைத்து தைத்தும், உற்பத்தி செய்தும் வருகிறோம். இங்கு 500க்கும் மேற்பட்ட கடைகள் இருக்கிறது என்றாலும், இதை நம்பி 10,000 குடும்பங்களுக்கு மேல், பிழைத்து வருகிறோம். பெரிய அளவில் படிப்பறிவு இல்லாததால் ஏற்றுமதி பற்றி தெரியவில்லை என்றும் கூறும் இவர்கள், தற்போது இவர்களின் இளைய தலைமுறையால், எழுந்து நிற்க தொடங்கியுள்ளோம் என்றும் கூறுகிறார்கள்.