கொரோனா வைரஸ், நம் உலகின் மீது பன்முனைத் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கிறது. அந்த தாக்குதலையே சமாளிக்க முடியாமல் தவிக்கிறோம். அதற்குள் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம், ஒட்டு மொத்த உலகத்தையும் கதிகலங்க வைத்திருக்கிறது.
"I cant Breath,.." எனும் வாசகம் நம் மனதை என்னவோ செய்து கொண்டு இருக்கிறது. அதற்கு அமெரிக்கர்கள் தங்களால் முடிந்த வரை வீதிக்கும் வந்து பதில் கேட்கத் தொடங்கிவிட்டார்கள்.
அதன் ஒரு பகுதியாகத் தான் அலெக்ஸிஸ் ஓஹனியன் (Alexis Ohanian) தன் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்.
யார் இவர்
அலெக்ஸிஸ் ஓஹனியன் (Alexis Ohanian) என்கிற பெயரை நாம் அதிகம் கேள்விப்படாமல் இருக்கலாம். ஆனால் செரினா வில்லியம்ஸ் என்கிற பெயரையும், ரெட்டிட் (Reddit) என்கிற சமூக வலைதளத்தையும் நாம் கேள்விப்பட்டு இருப்போம். செரினா வில்லியம்ஸின் கணவர் மற்றும் ரெட்டி கம்பெனியின் நிறுவனர் & இயக்குநர் குழுவில் ஒரு முக்கிய இயக்குநர் தான் நம் அலெக்ஸிஸ் ஓஹனியன். இவர் ஒரு வெள்ளையர்.
ராஜினாமா
அலெக்ஸிஸ் ஓஹனியன் திடீரென ரெட்டிட் என்கிற, தன் 15 வருட சமூக வலைதள கம்பெனியின் இயக்குநர் குழுவில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக தன் சமூக வலைதள பக்கங்களின் வழியாகச் சொல்லி இருக்கிறார். அதோடு தன் இடத்தை ஒரு கருப்பினத்தவருக்கும் கொடுக்குமாறும் கோரிக்கை வைத்து இருக்கிறார்.
சத்தியம்
அலெக்ஸிஸ் ஓஹனியன் வைத்திருக்கும் பங்குகள் வழியாக ஏதாவது லாபம் வந்தால், அந்த லாபத்தை கருப்பினத்தவர்களுக்காக செலவிடுவேன். குறிப்பாக இன வெறுப்பைக் குறைக்கும் விதத்தில் செலவிடுவேன் எனவும் சொல்லி இருக்கிறார். இதற்கு சமூக வலைதளங்களில் அலெக்ஸிஸ் ஓஹனியனை கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.
1 மில்லியன் டாலர்
அதோடு அலெக்ஸிஸ் ஓஹனியன் நின்றுவிட்டாரா என்றால் இல்லை. ஒரு படி மேலே போய் Colin Kaepernick என்கிற விளையாட்டு வீரரின் Know Your Rights Camp-க்கு 1 மில்லியன் டாலரைக் கொடுத்து இருக்கிறார். சரியான விஷயத்தைச் செய்ய நிறைய காலம் ஆகிவிட்டது எனவும் ஒரு வீடியோ போஸ்டில் சொல்லி இருக்கிறார்.
மகளுக்கு பதில் சொல்லணும்
கருப்பின மக்களின் வாழ்வுரிமை பறி போய்க் கொண்டிருந்த போது நீ என்ன செய்தாய்? என என் கருப்பு மகள் (Black Daughter) கேட்டால், நான் பதில் சொல்ல வேண்டும். என உருக்கமாக தன் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார். ஆம் அலெக்ஸிஸ் மற்றும் செரினாவுக்கு 3 வருடத்துக்கு முன் திருமணமாகி ஒரு கருப்பு குட்டிச் செல்லமும் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கிறது.
ரெட்டிட் தரப்பு
மக்களுக்கு எப்படி குரல் கொடுப்பது என ரெட்டிட் பல வழிகளைத் தேடிக் கொண்டு இருப்பதாக, ரெட்டிட் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக இருக்கும் ஸ்டீவ் ஹஃப்மேன் (Steve Huffman) ப்ளாகில் சொல்லி இருக்கிறார். அலெக்ஸிஸ் ஒஹனியனின் இந்த ராஜினாமா + கொரிக்கையால் அமெரிக்கா பேசிவிட்டார். ரெட்டிட் தன் தரப்பில் பேசி விட்டது. ஆனால் இன்னும் பேச வேண்டிய அதிபர் பேசாமல் இருக்கிறரே..!
மனிதம் மலரட்டும்
கொரோனாவால் சிதைந்த அமெரிக்கா, இப்போது ஜார்ஜ் ஃப்ளாய்டால் மீண்டும் ஒன்று சேர்ந்து கொண்டு இருக்கிறது. அவருக்கான அமெரிக்க வீதிகளில் போராடிக் கொண்டு இருக்கிறது. ஒரு சமத்துவமான உலகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இப்போதாவது மனிதம் மலரட்டும், இன வெறி ஒழியட்டும்.