சீனாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனமான அலிபாபா மீது சீன அரசு தற்போது மோனோபோலி வழக்கு விசாரணை நடத்தி வரும் நிலையில் தனது மிகப்பெரிய கனவுத் திட்டமான பொழுதுபோக்கு துறை வர்த்தகத்தைக் கைவிட முடிவு செய்துள்ளது.
அலிபாபாவின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் சீன அரசின் அடுத்தடுத்து விதிக்கப்படும் தடைகளும், நெருக்கடியும் தான் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆன்ட் குரூப் ஐபிஓ மற்றும் அதன் வர்த்தக வளர்ச்சியைப் பல வழிகளில் முடங்கியுள்ள சீன அரசு தற்போது அலிபாபா வளர்ச்சியை முடக்க வேண்டும் என்றும் அதன் அடுத்தடுத்த வளர்ச்சி திட்டங்களைக் குறிவைத்துக் கட்டுப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அலிபாபா நிறுவனம்
மோனோபோலி வழக்கு மூலம் சீன அரசு அலிபாபா நிறுவனத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ள நிலையில், எண்ட்டெயின்மென்ட் துறைக்குள் நுழைந்து பெரிய அளவிலான வர்த்தகத்தை அடைய வேண்டும் எனத் திட்டமிட்டு இருந்து அலிபாபா நிறுவனம் அதிர்ச்சி அளிக்கும் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
XIAMI மூடல்
பொழுதுபோக்கு துறைக்குள் நுழைய வேண்டும் எனத் திட்டமிட்ட அலிபாபா 2013ஆம் ஆண்டு XIAMI என்கிற பிரபலமான மியூசிக் செயலி நிறுவனத்தைக் கைப்பற்றியது. அலிபாபா கைப்பற்றலுக்குப் பின் மில்லியன் டாலர் முதலீட்டில் இந்நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் சேவை வளர்ச்சி அடைந்தது.
இந்த நிலையில் எவ்விதமான நிதிநெருக்கடியும் இல்லாத போது இந்தச் செயலியை வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி முதல் முழுமையாக நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
அலிபாபாவின் இசை வர்த்தகப் பிரிவு
இதுகுறித்த அறிவிப்பை அலிபாபாவின் இசை வர்த்தகப் பிரிவு சீனாவின் மிகவும் பிரபலமான சமுக வலைதளமான வெய்போ தளத்தில் தெரிவித்தது. XIAMI செயலி சக போட்டி நிறுவனங்களுக்கு இணையாக வர்த்தகத்தைப் பெறவில்லை என்றாலும் சீன இசை வர்த்தகச் சந்தையில் சுமார் 2 சதவீத வர்த்தகத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அலிபாபா - ஆன்ட் குரூப்
2020ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் அலிபாபா குழுமம் தனது நிதியியல் வர்த்தகப் பிரிவான ஆன்ட் குரூப்-ஐ தனது ஹோல்டிங் நிறுவனத்துடன் இணைத்து ஒரு வங்கியைப் போலவே செயல்படத் திட்டமிட்டது. இதனால் வங்கிகள் கடைப்பிடிக்க வேண்டிய அனைத்து கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி மீண்டும் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டது.
மோனோபோலி வழக்கு
ஆனால் அதற்குள் சீன அரசு இந்நிறுவனத்தின் மீது மோனோபோலி வழக்கு விதித்து மொத்த நிறுவனம் மற்றும் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்து நிறுவனத்தின் மதிப்பைப் பெருமளவில் குறைத்துள்ளது. அலிபாபா நிறுவனத்தின் பங்கு மதிப்பு சீனா, அமெரிக்கா பங்குச்சந்தையில் கடந்த 3 மாதத்தில் பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டுள்ளது.
வர்த்தகத் தடை
டிசம்பர் மாதம் சீன மத்திய வங்கியான People Bank அலிபாபாவின் ஆன்ட் குரூப் நிறுவனத்தைச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டும், விதிமுறைகளுக்குப் பணிந்து பேமெண்ட் சேவைகள் அளிக்கும்படி எச்சரித்துள்ளது.
இதன் மூலம் ஆன்ட் குரூப்-ன் நுகர்வோர் கடன் மற்றும் சொத்து மேலாண்மை வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தி அதன் வளர்ச்சியைக் குறைத்துள்ளது.
பாவம் அலிபாபா
சீன அரசின் இந்தக் கட்டுப்பாடுகள் அலிபாபா மற்றும் ஆன்ட் குரூப் நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சியை முடக்கும் வகையில் உள்ளது. இதனால் சீனாவின் மிகவும் லாபகரமான நிறுவனங்கள் நெருக்கடியில் தள்ளப்படும் என முதலீட்டாளர்கள், டெக் வல்லுனர்கள், சக டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் கருத்துத் தெரிவிக்கிறது. ஆனால் சீனாவில் அரசை எதிர்த்து எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிக்க முடியாது.