அமெரிக்காவுக்கு சீனாவுக்கு இடையிலான பதற்ற நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இந்த நிலையில், ஆகஸ்ட் 15 அன்று அமெரிக்காவின் மூத்த அதிகாரிகள் மற்றும் சீனா மூத்த அதிகாரி முதல் கட்ட ஒப்பந்தத்தினை பற்றி ஆய்வு செய்வார்கள் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த ஆய்வானது ஆகஸ்ட் 15 அன்று வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த இரு நாடுகளிடையே பிரச்சனை புகைந்து கொண்டு இருக்கும் நிலையில், இந்த கூட்டமானது மேற்கொண்டு இந்த உறவில் சமாதான போக்கினை ஏற்படுத்துமா? அல்லது விரிசலை அதிகப்படுத்துமா? என்று தெரியவில்லை.
அமெரிக்கா சீனா இடையே பேச்சு வார்த்தை
ஆக உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளிடையேயான இந்த பேச்சு வார்த்தையானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் சீனாவின் துணை பிரதமர் லியு ஹீ உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பல தரப்பட்ட பேச்சு வார்த்தகளுக்கும் பின்பு, கடந்த பிப்ரவரி 15ல் போடப்பட்ட இந்த ஒப்பந்தம் போடப்பட்டு, ஆறு மாதம் ஆன நிலையில் இந்த ஆய்வானது செய்யப்படுகிறது.
முதல்கட்ட ஒப்பந்தம்
எனினும் இது குறித்து அமெரிக்க பிரதிநிதி அலுவலகமும், அமெரிக்க கருவூலமும் எதுவும் தெரிவிக்கவில்லை, மாறாக வோல் ஸ்ட்ரீட் ஜெர்னல் தான் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. நடப்பு ஆண்டு தொடக்கத்தில் கையெழுத்தான இந்த முதல் கட்ட ஒப்பந்தமானது, விவசாயம் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள், எரிசக்தி மற்றும் சேவைகள் உள்ளிட்ட பலவற்றை 2017ஐ விட, அமெரிக்க பொருட்கள் கொள்முதலை 200 பில்லியன் டாலர்களாக அதிகரிக்க சீனா உறுதியளித்தது.
இலக்கினை விட சீனா பின் தங்கியுள்ளது
உலகளாவிய அளவில் பரவி வரும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள சீனா, அதன் முதல் ஆண்டு இலக்கை 77 பில்லியன் டாலர் அதிகரிப்பதை அடைவதற்கு தேவையான வேகத்தினை விடவும் பின் தங்கியிருக்கிறது. சொல்லப்போனால் விவசாய பொருட்களின் இறக்குமதியானது 2017ம் ஆண்டினை விட குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கலாம்
ஆக முதல் கட்ட ஒப்பந்தத்தின் படி அடைய வேண்டிய இலக்கிற்கு 50% பின் தங்கியே இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் 5% எனர்ஜி தயாரிப்புகளை மட்டுமே பெய்ஜிங் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த முதல் கட்ட ஒப்பந்தத்தில் அதன் இலக்கு 25.3 பில்லியன் டாலராகும். ஆக இதனை பற்றி நன்கு அறிந்த அதிகாரிகள், இந்த முதல் கட்ட ஒப்பந்தத்தினை அமல்படுத்துவதனை தாண்டியும், சில பிரச்சனைகள் குறித்து விவாதிக்கலாம் என்றும் நம்புவதாக கூறியுள்ளனராம்.
ஏற்கனவே திட்டமிட்டது தான்
இந்த விவாதமானது அமெரிக்கா சீனா இடையேயான பிரச்சனை அதிகரித்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் வந்துள்ளது. உண்மையிலும் இயற்கையாகவே விவாதிக்க நிறைய விஷயங்கள் உள்ளது. இந்த சந்திப்பு குறித்தான திட்டம் ஏற்கனவே இருந்தது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.
டிரம்ப் எச்சரிக்கை
கொரோனா வைரஸினை தோற்றுவித்தது சீனா தான். எனவே வர்த்தக ஒப்பந்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதாக டிரம்ப் ஏற்கனவே அச்சுறுத்தியிருந்தார். அதோடு ஹாங்காங்கில் அதிகரித்து வரும் சீனாவின் ஒடுக்குமுறை தொடர்பான பிரச்சனையும் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் சீனாவின் மிகப்பெரிய பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கினை வாங்குவது குறித்தும் சர்ச்சை எழுந்துள்ளது.
டிக் டாக்கிற்கு தடை
ஒரு வேளை மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக் டாக்கினை வாங்கினால், கணிசமான தொகையினை அமெரிக்கா கருவூலத்திற்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். அப்படி இல்லை எனில் டிக் டாக்கினை செப்டம்பர் 15-க்குள் சரியான ஒப்பந்தம் போடப்படவில்லை எனில், அமெரிக்காவில் தடை செய்யப்போவதாகவும் கூறியிருந்தார்.
இது அதிகாரப்பூர்வமான திருட்டு
ஆனால் இதற்கோ சீனா டெய்லி வெளியிட்ட ஒரு செய்தியில், இது அமெரிக்காவின் திட்டமிட்ட தந்திரமாகும். இந்த செயல்முறையானது அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட திருட்டுக்கு சமம் என்றும் கூறியிருந்தது. அமெரிக்காவின் இந்த திட்டமிட்ட செயலை சீனா ஏற்காது, இதற்கு பதிலடி கொடுக்க ஏராளமான வழிகள் உண்டு என்றும் வெளியிட்டது.