நியூயார்க்: தனது தேர்தல் பிரசார செலவுக்காக தன்னுடைய சொந்த தொண்டு நிறுவனத்திலிருந்து வந்த பணத்தை தவறாக பயன்படுத்தியதால், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு நியூயார்க் நீதிபதி 2 மில்லியன் டாலர்களை அபராதமாக விதித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் "டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்" என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது இந்த அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தனது தேர்தல் செலவுகளுக்கு டிரம்ப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கானது அரசியல் ரீதியிலான பழிவாங்கல் நடவடிக்கை என்று டிரம்ப் கூறினார்.
மேலும் எதிர்க்கட்சியினரால் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு "டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்" அறக்கட்டளை மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நியூயார்க் கோர்ட்டில் பெண் நீதிபதி சாலியன் ஸ்கார்புல்லா முன்னிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை சில நாட்களுக்கு முன்பு நடந்தது. இந்த நிலையில் நிதி மோசடி தொடர்பான டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த வழக்கில் டிரம்புக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.14 கோடி) அபராதம் விதித்துள்ளது அந்த நாட்டு நீதி மன்றம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் டிரம்ப் அபராதமாக செலுத்தும் பணம், அவருடன் தொடர்பில்லாத 8 தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் எனவும் நீதி மன்றத்தில் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
டிரம்ப் இந்த தீர்ப்பு குறித்து தொடர்ந்து எதிர்த்து போராடுவேன் என்று கூறினாலும், அவரது வழக்கறிஞர்களும், அரசும் பல மாதங்களாக, இந்த பிரசனைக்காக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது ஜனாதிபதி டிரம்புக்கு மிகப்பெரிய அடி என்று கூறப்பட்டாலும், அவரது பிரபஞ்சத்தில் இது ஒரு சிறிய அடியாகவே கருதப்படுகிறது. இது சட்ட ரீதியாக டிரம்பிற்கு பெருத்த பின்னடைவாகவே கருதப்படுகிறது.