வாசிங்டன்: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்களுக்கு வரிச் சலுகை அளிப்பதில்லை என அமெரிக்கா அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னமும் வெளியிடப்படவில்லை
அமெரிக்காவின் GSP - Generalized System of Preferences வர்த்தகத் திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்கி இருக்கிறார். இந்த நீக்கம் வரும் ஜூன் 05, 2019-ல் இருந்து அமலுக்கு வருகிறதாம்.
இப்படி இந்தியாவை GSP - Generalized System of Preferences வர்த்தகத் திட்டத்தில் இருந்து நீக்கப் போவதாக கடந்த மார்ச் 2019-லேயே சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது இந்தியாவைப் பட்டியலில் இருந்து நீக்கியே விட்டார் ட்ரம்ப்.
எழும் கேள்விகள்
சரி இந்த GSP - Generalized System of Preferences வர்த்தகத் திட்டம் என்றால் என்ன..? இதனால் இந்தியாவுக்கு என்ன நன்மை கிடைத்துக் கொண்டிருந்தது..? இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதால் இந்தியாவுக்கு என்ன நட்டம்..? இனி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் மாற்றம் இருக்குமா..? எல்லாவற்றையும் விரிவாகப் பார்ப்போம்.
GSP - Generalized System of Preferences
ஜனவரி 01, 1976-ம் ஆண்டு இந்த GSP - Generalized System of Preferences கையெழுத்தானது. இந்த திட்டத்தில் 129 வளரும் நாடுகள் இருந்தன. இந்த 129 நாடுகளில் இருந்து 4,800 பொருட்களை, அமெரிக்க அரசு விதித்திருக்கும் இறக்குமதி வரி செலுத்தாமல், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யலாம். இது தான் GSP - Generalised System of Preferences.
ஜிஎஸ்பி கொடுக்கும் நாடுகள்
அமெரிக்கா மட்டுமின்றி ஆஸ்திரேலியா, பெலாரஸ், கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐஸ்லாந்து, ஜப்பான், கஜகஸ்தான், நியூசிலாந்து, நார்வே, ரஷ்யா, சுவிட்சர்லாந்து, துருக்கி ஆகிய நாடுகள் இந்த GSP - Generalized System of Preferences திட்டத்தின் கீழ் பல நாடுகளுக்கு இறக்குமதி வரியில் தள்ளுபடி கொடுத்திருக்கிறார்கள். இவர்களை GSP - Generalised System of Preferences Donor என்று அழைக்கிறார்கள்.
GSP வரலாறு
General Agreement on Tariffs and Trade (GATT) 1994 பற்றிப் படித்திருப்பீர்கள். இந்த ஒப்பந்தப்படி உலக வர்த்தக அமைப்பில் (WTO) இருக்கும் அனைத்து நாடுகளும் ஒருவருக்கு ஒருவர் MFN - Most Favoured Nation ஸ்டேட்டஸ் கொடுத்துக் கொள்ள வேண்டும் என்றது. அதாவது உலகில் உள்ள எல்லா நாடுகளும் எங்களுக்கு பிடித்தமான நாடுகளே. ஆக எந்த பாகுபாடும் இல்லாமல் தங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் யாருக்கு வேண்டுமானாலும் தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்வேன் எனச் சொல்வது தான் இந்த Most Favoured Nation ஸ்டேட்டஸ்.
வளரும் நாடுகளுக்கு
மேலே சொன்னது போல Most Favoured Nation பட்டியலில் இருக்கும் நாடுகளுக்கு உலக வர்த்தக அமைப்பு (WTO) சொல்லும் படி வரிகளை சீராக விதித்து அனைத்து நாடுகளோடு பாரபட்சம் இன்றி நடந்து கொள்ள வேண்டும். இதைத் தாண்டி வளரும் நாடுகளுக்கு இறக்குமதி வரியில் இருந்து விலக்கு கொடுக்க வேண்டும் என்பதால் இந்தியாவை அமெரிக்காவின் Most Favoured Nation பட்டியலில் இருந்து நீக்கி, GSP - Generalized System of Preferences பட்டியலில் சேர்த்துக் கொண்டது அமெரிக்கா.
பெரும்பயன்
பட்டியலிடப்பட்டிருக்கும் 129 நாடுகளில் அமெரிக்காவுக்கு 1,900 பொருட்களை ஏற்றுமதி செய்து பெரும் பயனாளியாக இந்தியா இருந்து வந்தது. ஒரு ஆண்டில் சுமார் 5.6 பில்லியன் டாலர் (560 கோடி டாலர்) மதிப்பிலான பொருட்களுக்கு 190 மில்லியன் டாலர் (19 கோடி டாலர்) இறக்குமதி வரி செலுத்தாமல் இன்று வரை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்தோம். இனி இந்த 19 கோடி டாலரையும் செலுத்த வேண்டும்.
என்ன பிரச்னை
இந்தியாவுக்கு 1976-ம் ஆண்டில் இருந்து GSP - Generalized System of Preferences வர்த்தகத் திட்டத்தின் கீழ் கொடுத்த வந்த இறக்குமதி வரிச் சலுகையை திரும்ப பெற்றுக் கொள்ளும் அமெரிக்கா.
என்ன ஆகும்..?
இனி இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு அமெரிக்க அரசு விதித்திருக்கும் இறக்குமதி வரிகளை முழுமையாக, நையா பைசா பாக்கி இல்லாமல் செலுத்தியே ஆக வேண்டும். அப்படிச் செலுத்தினால் தான் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய முடியும்.
இறக்குமதி வரி
ஒரு இந்தியர் தன் பொருளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறார். இந்தியர் பொருளை ஒருவர் அமெரிக்காவில் இறக்குமதி செய்வார். அப்படி இறக்குமதி செய்யும் போது, அமெரிக்க அரசு விதித்திருக்கும் இறக்குமதி வரிகளைச் செலுத்தாமல் இருக்க இந்த GSP - Generalized System of Preferences வர்த்தகத் திட்டம், இடம் கொடுத்தது. இனி இந்தியப் பொருட்களை, அமெரிக்காவில் இறக்குமதி செய்பவர், அமெரிக்க அரசின் இறக்குமதி வரிகளை செலுத்தியே ஆக வேண்டும்.
ஏன் இந்த கோபம்..?
அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்தியாவின் சந்தை இன்னும் முழுமையாக திறக்கப்படவில்லை என கைகளில் நெட்டி முறித்துக் கொண்டே கோபப்படுகிறார் டிரம்ப். குறிப்பாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ கருவிகள், பால் பொருட்களுக்கு, இந்தியாவில் விதிக்கப்படும் வரிகளை, இதுவரை கொஞ்சம் கூட குறைத்துக் கொள்ளவில்லை. அதனால் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை மிக அதிகமாகவே இருக்கிறதாம். இதனால் இந்தியாவில் மருத்துவ சாதனங்கள் மற்றும் பால் பொருட்களை இறக்குமதி செய்ய விரும்புபவர்கள், அமெரிக்காவை விடுத்து விலை குறைவாக கொடுக்கும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்கிறார்களாம். இந்த கடுப்பில் தான் அமெரிக்க தன் GSP - Generalized System of Preferences வர்த்தகத் திட்டத்தில் இருந்து இந்தியாவை நீக்கி இருக்கிறார்கள்.
இந்தியா தரப்பு
"இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு தொழிற்சாலைகளுக்கான மூலப் பொருட்கள், இடைநிலை உற்பத்திப் பொருட்கள், ரசாயனங்கள் போன்றவைகள் தான் அதிகம் ஏற்றுமதி ஆகின்றன. அமெரிக்காவின் தன் GSP - Generalized System of Preferences பட்டியலில் இருந்து நம்மை (இந்தியாவை) நீக்கியதில் நமக்கு ஒன்றும் பெரிய பாதிப்பு இல்லை" என வணிகத் துறைச் செயலர் அனூப் வாதவான் மார்ச் 2019-லேயே, ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லி இருக்கிறார்.
எற்றுமதி குறையுமா..?
ஆம். இப்போது பொருளின் அடிப்படை விலை, ஏற்றுமதியாளரின் செலவுகள், லாபம் போன்றவைகளை எல்லாம் சேர்த்து இதுவரை 100 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து வந்தார்கள் என்றால் இனி சராசரி இறக்குமதி வரியான 3.3 சதவிகிதத்தையும் சேர்த்து 103.3 ரூபாய்க்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். இதனால் கொஞ்சம் வாடிக்கையாளர்கள் இந்தியாவை விட குறைவான விலை கொடுக்கும் நாட்டை நோக்கிப் போகலாம்.
எப்போதில் இருந்து அமல்
இந்த அறிவிப்பு இன்னும் முறையாக இந்தியா அரசுக்கு தெரியப்படுத்தவில்லை. அமெரிக்க அதிபர் அதிகாரபூர்வமாக கையெழுத்து போட்டு இந்தியாவுக்கு தெரியப்படுத்தி 60 நாட்களுக்குப் பின் தான் இந்திய இறக்குமதிகளுக்கு அமெரிக்காவின் இறக்குமதி வரி வசூலிக்கப்படும் எனச் சொல்லி இருந்தார்கள். மார்ச் 2019-ல் இந்தியா உடனான GSP - Generalized System of Preferences வர்த்தகத் திட்டத்தை ரத்து செய்வதாகச் சொல்லி வந்தவர்கள். கடந்த ஏப்ரல் 2019 முதல் வாரத்தில் இந்தியாவுக்கு முறையாகத் தெரியப்படுத்தி இருக்கிறார்களாம். ஆக இப்போது வரும் ஜூன் 05, 2019 முதல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து இந்தியப் பொருட்களுக்கும் கூடுதல் வரி செலுத்த வேண்டி இருக்கும்.
அமைச்சர் ஜெய்சங்கர்
இந்த பழி வாங்கும் நடவடிக்கைக்கு, இந்தியா பின் வாசல் வழியாக ஈரான் உடன் கச்சா எண்ணெய் வாங்க பேசிக் கொண்டிருப்பதும் ஒரு முக்கிய காரணமாகப் பார்க்கிறார்கள், சர்வதேச அரசியல் மற்றும் வர்த்தக அனலிஸ்டுகள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, புதிய பிரதமர் மோடி, தன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை மலை போல் நம்புகிறாராம். ஏற்கனவே அமெரிக்காவுக்கான இந்திய தூதராக இருந்த ஜெய்சங்கர், அமெரிக்காவின் இந்த GSP - Generalized System of Preferences வர்த்தகத் திட்டத்தில் இந்தியாவை மீண்டும் சேர்த்து இந்தியாவுக்கு அந்த 19 கோடி டாலர் செலவை மிச்சப்படுத்தி, இந்தியாவின் நிதி நிலையையும், அந்நிய செலாவணி கையிருப்பையும் பாதுகாப்பாரா..?