சீனாவின் டிக்டாக் செயலி மக்களின் தனிநபர் தரவுகளைத் திருடுகிறது, மக்களுக்குப் பாதுகாப்பானதாக இல்லை என்று இந்தியாவில் தடை செய்யப்பட்டது. அமெரிக்காவிலும் இதேபோன்ற பிரச்சனை இருந்தாலும் பல மாற்றங்களைச் செய்து தொடர்ந்து இயங்கி வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் டிக்டாக் நிறுவனத்தில் நடந்த கூட்டத்தில் இருந்து கசிந்த சில தரவுகள் பூதாகரமாக வெடித்து டிக்டாக்-ன் செயல்பாடுகள் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
டிக்டாக் தடை
அமெரிக்காவில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோர்களில் இருந்து TikTok அகற்றப்பட வேண்டும் என்று ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷனில் உள்ள குடியரசுக் கட்சி ஆணையர், ஆப்பிள் மற்றும் கூகுள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வாதிட்டுள்ளார்.
டிம் குக் மற்றும் சுந்தர் பிச்சை
ஆப்பிள் CEO டிம் குக் மற்றும் ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோருக்கு பிரெண்டன் கார் (Brendan Carr) வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக் எதிர்ப்பாளர்கள் மத்தியில் மீண்டும் எதிர்ப்பு அதிகரித்துள்ளது.
டிக்டாக் மீட்டிங்
டிக்டாக் நிறுவனத்தின் கூட்டத்தில் இருந்து கசிந்த 12க்கும் அதிகமான பதிவுகள் அமெரிக்க டிக்டாக் வாடிக்கையாளர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. சீன நிறுவனமான டிக்டாக் அமெரிக்க டிக்டாக் பயனர்கள் அதாவது வாடிக்கையாளர்கள் பற்றிய தனிப்பட்ட தரவுகளை மீண்டும் மீண்டும் ஆக்சஸ் செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சீன ஊழியர்கள்
டிக்டாக்-கின் அமெரிக்க ஊழியர்கள், அமெரிக்கப் பயனர்களின் தரவு எவ்வாறு உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் சீனாவில் உள்ள தங்கள் சக ஊழியர்களிடம் தான் கேட்க வேண்டிய நிலை உள்ளது எனவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியா அமெரிக்கா
இந்தியா-வில் டிக்டாக் தடை செய்யப்பட்டாலும் அமெரிக்காவில் பல பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து இயங்கி வருகிறது. அமெரிக்க இளைஞர்கள் மத்தியில் பெரும் ஈர்ப்பை உருவாக்கிய செயலியான டிக்டாக் அமெரிக்க மக்களின் தனிநபர் தகவல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகச் செனட்டில் உறுதியளித்திருந்தாலும், டிக்டாக் சீனாவிலும், சீன ஊழியர்கள் கட்டுப்பாட்டில் தான் தரவுகளை வைத்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரெண்டன் காரி கடிதம்
"டிக்டோக் என்பது மேலோட்டமாகத் தோன்றுவது இல்லை" என்று ஆப்பிள் CEO டிம் குக் மற்றும் ஆல்பாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை ஆகியோருக்கு பிரெண்டன் காரி கடிதம் எழுதியுள்ளார். "இது வேடிக்கையான வீடியோக்கள் அல்லது மீம்ஸ்களைப் பகிர்வதற்கான ஒரு பயன்பாடு மட்டுமல்ல. அது செம்மறி ஆடு வேடத்தில் அமெரிக்கர்களின் தனிப்பட்ட மற்றும் முக்கியமான தரவுகளைச் சேகரிக்கிறது. டிக்டாக் அதிநவீன கண்காணிப்புக் கருவியாகச் செயல்படுகிறது." என்றும் தெரிவித்துள்ளார்.