உலகிலேயே அதிகச் சந்தை மதிப்புக் கொண்ட நிறுவனமாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம் சீன அரசுடன் ரகசியமாகச் சுமார் 275 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைச் செய்துள்ளது, இது மட்டும் அல்லாமல், சீனாவின் பொருளாதாரம் மற்றும் டெக்னாலஜி வளர்ச்சிக்கு ஆப்பிள் முதலீடு செய்யவும், அதன் மூலம் தனது நிறுவன வர்த்தகத்தை மேம்படுத்தவும் ஒப்பந்தம் செய்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல் சீனாவில் எந்தொரு அமெரிக்க நிறுவனத்திற்கும் பெரிய அளவில் வர்த்தகம் இல்லாத நிலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு நீண்ட காலமாகச் சீனாவில் மிகப்பெரிய வர்த்தகச் சந்தை உண்டு என்பதை மறுக்க முடியாது. தற்போது இந்த வரிசையில் டெஸ்லா சீனாவில் ஆதிக்கம் செய்து வருகிறது.
ஆப்பிள்
அமெரிக்க நிறுவனமான ஆப்பிள் சீனாவில் செய்யும் வர்த்தகம் மற்றும் சேவைகள் குறித்துச் சீன அரசு 2016ல் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது. இதனால் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
சீன உள்நாட்டுப் பொருளாதாரம்
இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரிகளும், சீன அரசு அதிகாரிகளும் தொடர்ந்து ஆலோசனை செய்து வந்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தால் சீன உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு எவ்விதமான லாபமும் இல்லை என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
ஐபோன் விற்பனை சரிவு
சீனா அரசின் நடவடிக்கையாலும், தவறாகப் பரப்பப்பட்ட கருத்தாலும் சீனாவில் ஐபோன் விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் ஆப்பிள் சிஇஓ டிம் குக் 2016ல் நேரடியாகச் சீனாவிற்குச் சென்று பிரச்சனையைச் சுமுகமாக முடிக்கத் திட்டமிட்டார்.
சிஇஓ டிம் குக்
சீன அரசு 2016 காலகட்டத்தில் ஆப்பிள் பே, ஐகிளவுட், ஆப் ஸ்டோர் மீது குற்றச்சாட்டுகளை நீக்க ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ நேரடியாகச் சீனா அரசு அதிகாரிகளிடம் பேசத் துவங்கினார். இதன் வாயிலாக அரசு அமைப்புகளையும், அரசு அதிகாரிகளையும் சமாதானப்படுத்தி உள்ளார் டிம் குக்,
Didi - ஆப்பிள் முதலீடு
சீனா அரசு மற்றும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் மத்தியிலான நட்புறவை மேம்படுத்தவே, சீனாவின் மிகப்பெரிய டாக்ஸி சேவை நிறுவனமான Didi Chuxing-ல் ஆப்பிள் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டைச் செய்தது.
டிம் குக் முக்கியச் சந்திப்பு
இந்த முதலீட்டைத் தொடர்ந்து டிம் குக் உடன் ஆப்பிள் நிறுவனத்தின் சிஓஓ-வான ஜெப் வில்லியம்ஸ், அரசு விவகாரத் துறை அதிகாரி லிசா ஜாக்சான் ஆகியோர், சீன அரசின் உயர் அதிகாரிகளைச் சீன கம்யூனிஸ்ட் பார்டியின் தலைமையிடமான Zhongnanhai பகுதியில் சந்தித்தனர்.
275 பில்லியன் டாலர் ஒப்பந்தம்
உயர்மட்ட அதிகாரிகள் நிறைந்த இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் 5 ஆண்டுத் திட்டமாக ஆப்பிள் நிறுவனம் சுமார் 275 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தைச் சீன அரசுடன் கையெழுத்திட்டது.
ஆப்பிள் கொடுத்த உத்தரவாதம்
இந்த ஒப்பந்தத்தில் ஆப்பிள் நிறுவனம் சீன அரசுக்கு பல உத்தரவாதங்களைக் கொடுத்துள்ளது. அதில் முக்கியமாக ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு அதிகப்படியான கருவிகளைச் சீன நிறுவனங்களிடம் வாங்குவது, சீன சாப்ட்வேர் நிறுவனத்துடன் ஒப்பந்தம், சீன பல்கலைக்கழகத்துடன் கூட்டணி, சீன டெக் நிறுவனங்களில் நேரடி முதலீடு ஆகியவை முக்கியமானதாகும்.
இந்தியா
இந்த ரகசிய ஒப்பந்தம் குறித்த ஆவணங்களை நேரடியாகப் பார்த்து உறுதி செய்து தி இண்டிபென்டன்ட் பத்திரிக்கை தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் இந்த 5 ஆண்டு ஒப்பந்தம் முடிந்த பின்பு ஆப்பிள் தனது உற்பத்தி தளத்தைச் சீனாவில் இருந்து தற்போது இந்தியா மட்டும் இதர தென் ஆசிய நாடுகளுக்கு மாற்றி வருகிறது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications