பெய்ஜிங்: கொரோனா என்ற வார்த்தையை கேட்டாலே மக்களை இன்னும் எவ்வளவு காலத்திற்கு தான் படுத்தி எடுக்கப் போகிறாதோ தெரியவில்லை. இது இப்படி எனில் மறுபுறம் இந்த வைரஸினை தோற்றுவித்த சீனா தற்போது இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறது.
ஆனால் மற்ற உலக நாடுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.
இன்று இந்தியாவில் எப்படி உற்பத்தி முடக்கம் அடைந்ததோ, அன்று அதேபோல் தான் சீனாவில் முடங்கியது. இந்த நிலையில் அங்கும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களும் முடக்கப்பட்டன.
விற்பனை முடக்கம்
இதனால் சீனாவிலும் லாக்டவுன் காலத்தில் வாகன விற்பனைகள் முடங்கின. சீனா வாகன விற்பனை நிறுவனங்களும் பெரும் விற்பனை வீழ்ச்சியினை கண்டன. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்திய வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஒரு வாகனங்களை கூட விற்பனை செய்யவில்லை என்று அறிவித்தன, இதனைப் போல் தான் அப்போது சீனாவிலும் ஒரு நிலை நீடித்து வந்தது.
இயல்பு நிலைக்கு திரும்பும் சீனா
இதற்கிடையில் தற்போது சீனா கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு இருக்கும் அதே நேரத்தில், உலகின் மிகப்பெரிய கார் சந்தையான சீனாவில் கார் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கார் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளது என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம்.
விற்பனை சரிவு தான்
இது குறித்து வெளியான செய்தியில் சீனா வாகன உற்பத்தியாளர் சங்கம் (China Association of Automobile Manufacturers), சீனாவின் பயணிகள் கார் விற்பனையானது கடந்த ஏப்ரல் முதல் 25 நாட்களில் விற்பனை கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, 1.6 சதவீதம் குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் விற்பனை லாக்டவுன் காலத்தோடு ஒப்பிடும்போது மீண்டும் நல்ல வளர்ச்சி கண்டது.
எவ்வளவு விற்பனை?
போர்டு மற்றும் மஸ்டாவுடன் கூட்டு நிறுவனங்களைக் கொண்ட சோங்கிங்கை தளமாகக் கொண்ட சோங்கிங் சாங்கன் ஆட்டோமொபைல் (Chongqing Changan Automobile) நிறுவனம் கடந்த மாதம் 1,59,557 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. எனினும் இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 32 சதவீதம் வீழ்ச்சி என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
விற்பனை பரவாயில்லையே
சாங்கன் உடனான போர்டு வென்சர் 20,465 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 38.3 சதவீதம் அதிகம் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இதே ஜூலி ஆட்டோமொபைல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் (Geely Automobile) நிறுவனம் கடந்த மாதம் 1,05,468 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகவும், இது 2 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனை
இதே ஜெனரல் மோட்டார்ஸின் முக்கிய கூட்டு நிறுவனமான SAIC மோட்டோ கார்ப் நிறுவனம் 1,11,155 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகவும் இது 13.6 சதவீதம் அதிகம் என்றும் தெரிவித்துள்ளது.
போர்டு நிறுவனமும் பங்குகளை வைத்திருக்கும் ஜேஎம்சி கடந்த மாதம் 28,028 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது சுமார் 7.8% அதிகமாகும்.
டாப் விற்பனையாளர்
இதே சீனாவின் முக்கிய வாகன நிறுவனமான SAIC மோட்டார் நிறுவனம் கடந்த மாதம் 4,33,000 வாகனங்களை விற்றுள்ளதாகவும், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 0.5% அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதே வோக்ஸ்வேகன் குழுமம் கடந்த மாதம் சீனாவில் ஆண்டுக்கு ஆண்டு சாதகமான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.