உலகின் மதிப்பு மிக்க நிறுவனங்களில் ஒன்றான பைட்டான்சின், டிக் டாக் ஆப் எவ்வளவு பிரபலம் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்தியாவின் கடைக் கோடி கிராமம் முதல் கொண்டு, இந்தியாவின் முன்னணி மெட்ரோ நகரங்களில் உள்ள இளைஞர்கள் வரை இதற்கு பலரும் அடியாகியிருந்தனர்.
குழந்தை முதல் வயதான பாட்டிகள் வரை தங்களது திறமைகளை டிக்டாக் மூலம் காட்டி வந்தனர்.
இப்படியொரு ஆப்பினை பாதுகாப்பு அம்சம் கருத்தி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் தடை செய்தன. தடைசெய்யப்பட்ட இந்த செயலிகள் சிலருக்கு பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், பலருக்கு வருவாயை கொடுக்கும் ஒரு சாதனமாகவும் இருந்து வந்தது. எனினும் பாதுகாப்பு கருதி எனும் போது தடை செய்வதில் தவறு ஏதும் இல்லையே என்பதே பலரின் வாதமாக இருந்தது. .
வணிக விரிவாக்கம்
இந்த பைட்டான்ஸ் நிறுவனமானது உலகின் மிகப்பெரிய ஸ்டார்டப் நிறுவனமாக இருந்தது. இதன் வணிகமும் பல முன்னணி சமூக வலைதளங்கான பேஸ்புக் உள்ளிட்ட அம்சங்களுக்கு சவால் விடும் அளவுக்கே இருந்தது. இந்த நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் முடக்கப்பட்டிருந்தாலும், தற்போது அதன் தலைமையமான சீனாவின் வணிகத்தினை விரிவுபடுத்த தொடங்கியுள்ளது.
கடும் சர்ச்சைகள்
இதற்கிடையில் ஏற்கனவே பல சர்ச்சைகளுக்கு மத்தியில் சிக்கித் தவித்து வரும், சீனாவின் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் ஜாம்பவான் ஆன அலிபாலா மீது பல மோனோபோலி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால் அலிபாபா நிறுவனம் சீன அரசின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. இது பல கட்ட விசாரனைகளுக்கு பின்னர் அலிபாபா நிறுவனத்தின் முறையற்ற வர்த்தகம் பற்றியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அலிபாபாவுக்கு போட்டி
இப்படியொரு இக்கட்ட நிலையில் தான் சரியான நேரம் என அலிபாபாவின் இடத்தினை பிடிக்க பல நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் பைட்டான்ஸ் நிறுவனம் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் மீது தனது பார்வையினை திருப்பியுள்ளது. இதற்காக பைட்டான்ஸ் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியில் அமர்த்தியுள்ளதாக தெரிகிறது.
வீடியோக்கள் மூலம் விற்பனை
இது நீண்டகால ஈ-காமர்ஸ் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் அலிபாபாவின் இடத்தினை, சற்று ஆக்கிரமித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளது எனலாம். பைட்டான்ஸ் நிறுவனம் அதன் குறுகிய வீடியோக்கள் மற்றும் லைவ் ஸ்ட்ரீம்கள் மூலம் நுகர்வோருக்கு தங்களது பொருட்களை விற்பனை செய்ய முயற்சி செய்து வருகின்றது.
2020ல் விற்பனை
ஏற்கனவே இந்த ஸ்டார்டப் நிறுவனத்தின் தாக்கம் அலிபாபாபா மற்றும் JD.comல் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிறுவனம் 26 பில்லியன் டாலர் மதிப்பிலான மேக் அப், துணி வகைகள், மற்ற உற்பத்தி பொருட்களையும் தனது ஆப் மூலமாக விற்பனை செய்துள்ளது. இது வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக பயனாளிகள்
நடப்பு ஆண்டில் உள்நாட்டு விளம்பரத்தில் பாதிக்கும் மேல் பைட்டான்ஸ் மூலம் விளம்பரப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்த ஷார்ட் வீடியோ பிளார்ட்பார்ம் ஏற்கனவே அதிக பார்வையாளர்களை கொண்டுள்ளது. ஆக இதனால் விளம்பரங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அலிபாபாவுக்கு சிக்கல் தான்
பைட்டான்ஸின் விரிவாக்கம், மேற்கொண்டு ஆன்லைன் வணிகத்தினை ஊக்குவிக்கப் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பல சிக்கலில் தவித்து வரும் அலிபாபாவுக்கு, இது மேற்கொண்டு சிக்கலைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அலிபாபா போன்ற தளங்களில் விளம்பரத்திற்கு அதிக கட்டணம் கொடுக்க வேண்டிய நிலையில், இங்கு குறைவான கட்டணம் கொடுத்தாலே போதுமானதாக இருக்கலாம் என்பதே பலரின் ஈர்ப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.