சீனாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.
ஏன் இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன காரணம்? ஏற்கனவே சில நாடுகள் சீன தொலைத் தொடர்பு நிறுவனங்களை தடை செய்துள்ள நிலையில், தற்போது கனடாவும் இந்த லிஸ்டில் இணைந்துள்ளது.
இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் சேவை அளிப்பதால், சீனா நெட்வொர்க் சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பல நாடுகள் தடை
ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள், சீனாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனத்தினை தடை செய்துள்ளன. இது அந்தந்த நாடுகளின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக மேற்கண்ட நாடுகள் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
கனடா அரசு தடை
இதற்கிடையில் கனடாவின் தொலைத் தொடர்பு துறை அமைச்சர் பிராங்கோயில் பிலிம் கூறுகையில், சீன தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஹூவாய், மற்றும் இசட்டிஇ ஆகியவற்றின் 5ஜி மற்றும் 4ஜி வயர்லெஸ் வசதிகளுக்கு கனடா அரசு தடை செய்துள்ளது.
இணைய சேவையை முடக்கணும்
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், அதன் நெட்வொர்க் சேவைகள் உள்ளன. அதனால் ஏற்கனவே இந்த வசதியை பெற்றுள்ள கனடா நிறுவனங்கள் தங்களது இந்தச் சேவையை முடக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனங்களீன் தொலைத் தொடர்பு சாதனங்களை அகற்ற, ஜூன் வரையில் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
4ஜி சாதனங்கள் அகற்றப்படணும்
மேலும் தற்போதுள்ள 4ஜி நெட்வொர்க்கின் உபகரணங்கள் வரும் 2027ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும் அறிவித்துள்ளது. எனினும் இதற்காக அரசு தரப்பில் இருந்து எந்த நிதியும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் கருத்து என்ன?
5ஜி நெட்வொர்க்கில் சேவையினை அதிகம் நம்பியிருக்கும் நேரத்தில், கனடா அரசின் இந்த முடிவானது மிகச் சரியானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
அதேசமயம் சீனாவின் செய்தித் தொடர்பாளர், சீன நிறுவனங்களை ஒடுக்க கனடா அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.