அமெரிக்காவும் சீனாவும் கிட்டத்தட்ட எலியும் பூனையும் அடித்துக் கொள்வது போல சண்டை போடத் தொடங்கி இருக்கிறார்கள். எப்போது பார்த்தாலும் சண்டை, எதற்கு எடுத்தாலும் சண்டை எனப் போய்க் கொண்டு இருக்கிறது.
சமீபத்திலும், இப்படி ஒரு சண்டையை தொடங்கி இருக்கிறது அமெரிக்க தரப்பு. அமெரிக்கா தொடங்கிய வாய்ச் சண்டைக்கு, சமீபத்தில் சீனா பொளேர் பதில் கொடுத்து இருக்கிறது.
இந்த முறை சண்டையில் கார்ப்பரேட் கம்பெனிகள் பெயரையும் இழுத்துவிட்டு இருக்கிறது அமெரிக்கா. அப்படி என்ன புது சண்டை போட்டு இருக்கிறார்கள்?
அட்டர்னி ஜெனரல்
கடந்த வியாழக் கிழமை அமெரிக்க அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் (William Barr) தான் இந்த முறை சீனாவை ஒரண்டைக்கு இழுத்து இருக்கிறார். "உலக பொருளாதாரத்தின் உச்சத்தைத் தொடவும், அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளவும், சீனா தன் பொருளாதார தாக்குதல்களைத் தொடங்கி இருக்கிறது" எனப் பேசி இருக்கிறார்.
சிஸ்கோ மீது குற்றச்சாட்டு
அமெரிக்க கார்ப்பரேட் கம்பெனிகள் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து வேலை செய்ய விரும்புகிறார்கள் என குற்றம்சாட்டி இருக்கிறார். அமெரிக்காவின் சிஸ்கோ போன்ற டெக் கம்பெனிகள் தான், சீனாவின் மிகப் பெரிய Firewall-ஐ கட்டமைக்க உதவியது எனச் சொல்லி இருந்தார் அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார்.
சிஸ்கோ தரப்பு
ஆனால் அதை சிஸ்கோ நிறுவனம் மறுத்து இருக்கிறது. உலகில் எல்லா நாடுகளுக்கும் சப்ளை செய்யும் அதே பொருட்களைத் தான் சீனாவுக்கும் சப்ளை செய்கிறோம் எனச் சொல்லி இருக்கிறது. யூசர்களை தடை செய்யும் (Blocking Access) அல்லது யூசர்களை கண்காணிக்கும் (Surveillance of User) விதத்தில் எந்த ஒரு கஸ்டமைஸ் செய்யப்பட்ட சாதனங்களையும் சீனாவுக்கு சப்ளை செய்யவில்லை என விளக்கம் கொடுத்து இருக்கிறது சிஸ்கோ.
ஆப்பிளும் தப்பிக்கவில்லை
ஆப்பிள் நிறுவனம் தன் ஐக்ளவுட் டேட்டாக்களில் ஒரு பகுதியை சீனாவில் இருக்கும் சர்வருக்கு மாற்றும் முடிவை கடுமையாக எதிர்த்து இருக்கிறார் வில்லியம். இப்படி சீனாவில் இருக்கும் சர்வருக்கு ஐக்ளவுட் டேட்டாக்களை மாற்றுவதால், சீனா அரசால் மெயில், டெக்ஸ்ட் மெசேஞ் போன்ற வாடிக்கையாளர்கள் விவரங்கள் சீன அரசுக்கு எளிதாக கிடைக்கும் எனக் குற்றம்சாட்டி இருக்கிறார். அதோடு, சீனாவில், க்வார்ட்ஸ் (Quartz) செய்தி அப்ளிகேஷனை, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
சீனா மீது தாக்குதல்
உச்சகட்டமாக "சீன கம்யூனிஸ்ட் கட்சி, அமெரிக்க மக்களின் வாழ்கை முறைக்கு மட்டும் அச்சுறுத்தலாக இல்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சி ஒட்டு மொத்த அமெரிக்க மக்களின் உயிருக்கும், அடிப்படை வாழ்கைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதை, அமெரிக்க மக்கள், முன்பை விட அதிகமாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்" எனச் சொல்லி ஒரே போடாக போட்டு இருக்கிறார் வில்லியம் பார்.
அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்
அதோடு அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார் நின்றாரா என்றால் இல்லை. மனித உரிமைகள் பிரச்சனை, வேவு பார்ப்பது, பொருளாதார தாக்குதல்களை நடத்துவது என சீனா மீது இன்னும் பல குற்றச்சாட்டுகளை தன் பேச்சில் முன் வைத்து சீனாவை துவைத்து எடுத்துவிட்டார் எனலாம்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள்
வில்லியம் பார் சீனா மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் போக, பல காலமாகவே, சீனா அறிவு சார் சொத்துக்களை (Intellectual Property) திருடுவதாகவும் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகிறது அமெரிக்கா. சீனாவும் மறுத்துக் கொண்டு இருக்கிறது. அதோடு, இந்த 2020-ல் இருந்து, கொரோனா வைரஸ் பிரச்சனைக்கும் சீனா தான் காரணம் என குற்றம்சாட்டிக் கொண்டு இருக்கிறது. இத்தனை காரசாரமாக வாதங்களை முன் வைத்தால் சீனா என்ன வேடிக்கை பார்க்குமா..?
சீனா பதிலடி
"அமெரிக்காவில் சிலர் சீனாவை ஒரு போட்டியாளராகக் கூடப் பார்ப்பதில்லை. சீனா மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சொல்லி, சீனாவை தாக்குகிறார்கள். சீனாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடுகிறார்கள்" என பதில் சொல்லி இருக்கிறார் சீன வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் பேச்சாளர் ஹு சுன்யிங் (Hua Chunying).
பிரேக் பிடிக்கிறோம்
மேலும் பேசிய சீன வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தின் பேச்சாளர் ஹு சுன்யிங் (Hua Chunying). " அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவு முறையை காலி செய்ய, அமெரிக்கா அக்சிலரேட்டரை அழுத்திக் கொண்டு இருக்கிறது. சீனா தான் பிரேக் அடித்துக் கொண்டு இருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறார்.
பொறுப்பே இல்லை
"சில அமெரிக்க அரசியல்வாதிகளுக்கு பொறுப்பே இல்லை. அவர்கள் சீனாவை ஒரு இலக்காக மாற்ற, என்ன எல்லாம் சொல்ல வேண்டுமோ அதை எல்லாம் சொல்வார்கள். உலகம் ஏற்கனவே அமெரிக்கா என்ன செய்யும், எப்படி கவனத்தை திசை திருப்பும் எனப் பார்த்து இருக்கிறது. அவர்கள் தங்கள் அறிவை இழக்கும் இடத்தில் இருக்கிறார்கள்" என பொளேர் பதில் கொடுத்து இருக்கிறார் ஹி சுன்யிங்.