உலகின் 2வது பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி நடைமுறைப்படுத்தியும் கொரோனா தொற்றுப் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் வாயிலாகப் பொறுமை இழந்த மக்கள் சீனா அரசை எதிர்த்து நாடு முழுவதும் பல முக்கியமான நகரங்களில் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இதனால் சீனா பொருளாதாரம் நடவடிக்கைகள் முடங்கும் அபாயமும், எனர்ஜி, உணவு, உற்பத்தி பொருட்களுக்கான டிமாண்ட் குறையும் அச்சம் உருவாகியுள்ளது.
சீனா
குறிப்பாகச் சீனாவில் கச்சா எண்ணெய் விலை கடந்த டிசம்பர் மாதத்திற்குப் பின்பு பெரும் சரிவை சந்தித்துள்ளது. ஏற்கனவே மோசமாகப் பாதிக்கப்பட்டு உள்ள சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் சீனா-வில் உருவாகியுள்ள மக்கள் போராட்டம் மூலம் சீன முதலீட்டாளர்கள் கமாடிட்டி சந்தையில் அதிகளவில் விற்பனை செய்தனர்.
WTI கச்சா எண்ணெய் விலை
3 வார தொடர் தடுமாற்றத்திற்குப் பின் WTI கச்சா எண்ணெய் விலை 74 டாலருக்கு சரிந்துள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சீனாவில் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து சீன முதலீட்டாளர்கள் கமாடிட்டி சந்தையில் இருந்த முதலீட்டை மொத்தமாக வெளியேற்றத் துவங்கினர்.
லண்டன், ஷாங்காய், இந்தியா
இதன் எதிரொலியாக லண்டன், ஷாங்காய், இந்தியா சந்தையில் பேஸ் மெட்டல் குறியீடுகள் அனைத்தும் சரிவை சந்தித்தது. சீனாவின் கமாடிட்டி சந்தையான Dalian சந்தையில், காப்பர் 1.7 சதவீதம், இரும்பு தாது 2 சதவீதம், கச்சா எண்ணெய் 5.4 சதவீதம், சமையல் எண்ணெய் 3 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
கொரோனா தொற்று
சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையைப் பார்க்கும் போதும் சீன அரசின் ஜீரோ கோவிட் பாலிசி மூலம் எவ்விதமான பயனும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இதேவேளையில் இந்தக் கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாகச் சீனா அரசு பொருளாதாரம், வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக அறிவித்த அறிவிப்புகள் பயனில்லாமல் போனது.
ஜீரோ கோவிட் பாலிசி
இதேவேளையில் ஜீரோ கோவிட் பாலிசி மூலம் உற்பத்தியாளர்களின் வர்த்தகம் குறைந்துள்ளதால் நாடு முழுவதும் உலோகத்தைப் பயன்படுத்தும் அளவுகள் அதிகளவில் குறைந்துள்ளது. இதனால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவுகள் குறைந்து சீனாவின் பொருளாதார வளர்ச்சி பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
தீ விபத்து
Xinjiang பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட தீ விபத்துக்கு அரசின் கடுமையான கோவிட் கட்டுப்பாடுகள் தன் காரணம் என மக்கள் குற்றம்சாட்டிய நிலையில், தற்போது சீனாவில் பல முக்கிய நகரங்களில் மக்கள் போராட்டம் உச்சத்தைத் தொட்டு உள்ளது. இந்த மக்கள் போராட்டத்தில் பெரும்பாலானோர் முன் வைக்கப்படுவது ஜி ஜின்பிங் பதவியை விட்டு விலக வேண்டும் என்பது தான்.
ஜி ஜின்பிங்
ஜி ஜின்பிங் பல போராட்டத்திற்குப் பின்பு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 5 ஆண்டுக் கூட்டத்தில் மீண்டும் ஜி ஜின்பிங் அதிபராக அறிவிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் இதுவரையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பழைய அதிகாரிகளை மாற்றி மொத்தமும் தனக்குச் சாகமானவர்களை நியமித்தார் ஜி ஜின்பிங். இந்த நிலையில் மக்கள் போராட்டத்தால் ஜி ஜின்பிங் பதவி விலகுவாரா என்றால் பெரும் கேள்விக்குறி தான்.