உலகம் முழுக்க தனது கோரத்தாண்டவத்தினை காட்டி வரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வரும் மக்கள், அதிலிருந்து எப்போது தான் முழுவதும் மீளப்போகிறார்களோ என்ற உணர்வு ஒரு புறம் இருந்தாலும், அது சரியாகும் போது ஆகட்டும், நாம் நம் வேலையை பார்க்கலாம் என்ற மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மக்கள்.
ஏனெனில் கொரோனா தனது கோரத்தாண்டவத்தினை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர, இன்று வரையிலும் குறைந்தபாடில்லை. ஆக இன்னும் எத்துணை காலத்திற்கு தான் படுத்தி எடுக்கப் போகிறதோ தெரியவில்லை.
இது இப்படி எனில் மறுபுறம், இந்த வைரஸினை தோற்றுவித்த சீனா இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டு இருக்கிறது. எனினும் மற்ற உலக நாடுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.
வாகன விற்பனை புத்துயிர்
சீனாவில் கொரோனா காரணமாக முடங்கி போன வர்த்தகமானது தொடர்ந்து புத்துயிர் பெற்றுக் கொண்டு இருக்கிறது. இதனை தெளிவுபடுத்தும் விதமாகத் தான் சீனா வாகன விற்பனைகள் மீண்டும் நான்காவது மாதமாக புத்துயிர் பெற்றுள்ளது. தொடர்ந்து நான்காவது மாதமாக விற்பனையை அதிகரித்துள்ளதாக சீனா உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன விற்பனையானது அதிகரிப்பு
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கொரோனா லாக்டவுன் காரணமாக வாகன விற்பனையானது பெரும் வீழ்ச்சியினை கண்டன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் கடந்த ஜனவரி, பிப்ரவரி மார்ச் வரையில் வாகன விற்பனையானது பெரும் வீழ்ச்சியினை கண்டது. எனினும் கடந்த 4 மாதங்களாக விற்பனையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இயல்பு நிலைக்கு திரும்பும் சீனா
தற்போது சீனா கொஞ்சம் கொஞ்சமாய் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டே வருகிறது. உலகின் மிகப்பெரிய கார் சந்தையான சீனாவில் கார் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது, சீன வாகன நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல, சர்வதேச கார் நிறுவனங்களுக்கும் நல்ல விஷயம் தான். உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில், பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டுள்ளது என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணமாகும்.
ஜூலை மாதத்தில் விற்பனை அதிகரிப்பு
சீனாவில் கடந்த ஜூலை மாதத்தில் வாகன விற்பனையானது 16.4% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது தொடர்ச்சியான நான்காவது மாத ஏற்றமாகும்.
இதுவே மே மாதத்தில் வாகன விற்பனையானது 14.5% அதிகரித்திருந்தது. இதுவே ஜூன் மாதத்தில் விற்பனையானது 11.6% ஏற்றத்துடனும் காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இல்லாத அளவு ஏற்றம் கண்டுள்ளது.
எவ்வளவு விற்பனை?
சீனாவின் வாகன விற்பனையாளர்கள் ஜூலை மாதத்தில் 2.11 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக சீனா உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் ஒட்டுமொத்த சந்தையில் கால் பகுதியைக் கொண்ட லாரிகள், வேன்கள் மற்றும் பிற வணிக வாகனங்களின் விற்பனை 59.4% அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதே பயணிகளின் வாகன விற்பனையானது 8.5% அதிகரித்தும் காணப்படுகிறது.
NEVs வாகன விற்பனை
இதே புதிய எரிசக்தி வாகனங்களின் (NEVs) விற்பனை 19.3% அதிகரித்து, 98,000 வாகனங்களாக அதிகரித்துள்ளது. இது தொடர்ச்சியாக 12 மாதங்களாக சரிவில் உள்ள வாகன விற்பனையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.
ஜூலை மாதத்தில் விற்பனை வளர்ச்சியினை பதிவு செய்த வாகன உற்பத்தியாளார்கள் கிரேட் வால் மோட்டார், ஜீலி ஆட்டோமொபைல் மற்றும் டொயோட்டா மோட்டார் கார்ப் ஆகியவை இதில் அடங்கும்.
வாகன விற்பனை குறையும்
எனினும் இந்த ஆண்டு சீனாவின் வாகன விற்பனை 10% முதல் 20% வரை குறையும் என்றும் ஆட்டோ உற்பத்தியாளர் சங்கம் கடந்த மாதம் கூறியது.
சீனா தற்போது புத்துயிர் பெற்று வரும் நிலையில், மற்ற நாடுகள் பின்னடைவையே சந்தித்து வருகின்றன. அதிலும் தற்போது மற்ற நாடுகளுடன் நிலவி வரும் பதற்றத்திற்கு மத்தியில், பொருளாதாரத்தினை மீண்டு வருவது நல்ல விஷயமே.