பெய்ஜிங் : அமெரிக்கா சீனா இடையே நடந்து வரும் வர்த்தகப் போரால், சீனாவின் பொருளாதார வளர்ச்சி 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி குறைந்துள்ளது.
சீனாவில் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டான ஜூலை - செப்டம்பர் மாதங்களில், அந்த நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் வெறும் 6 சதவிகிதமாக சரிந்துள்ளது. இதே நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இது 6.2 சதவிகிதமாக இருந்துள்ளது.
கடந்த 1993ம் ஆண்டுக்குப் பின் சீனா, இந்த அளவுக்கு ஜிடிபி வளர்ச்சியில் பின்தங்கியுள்ள நிலையில், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 6 சதவிகிதம் முதல் 6.5 சதவிகிதம் வரை இருக்கும் என அந்த நாடு கணித்திருந்த நிலையில் இந்த சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் நிலைக்கு வர்த்தகப் போர்தான் காரணமா?
ஒரு புறம் அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் வர்த்தக போரால், இந்த இரு நாடுகள் மட்டும் அல்லாது. உலக நாடுகளும் பெருத்த சரிவைக் கண்டுள்ளன. எனினும் இந்தியா போன்ற நாடுகள் இதில் மிகப் பாதிக்கப்பட்டுள்ளது உண்மையே. எனினும் இந்த வர்த்தகப்போரால் அதிகம் பாதிக்கப்பட்டது சீனாவே. உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் பொருளாதார மந்த நிலை, உற்பத்தி பாதிப்பு, வேலையின்மை, வேலையிழப்பு அந்த நாட்டினை ஆட்டி படைத்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக போரால் வர்த்தகர்கள் பாதிப்பு
மெதுவான வளர்ச்சி கண்டு வரும் சீனாவின் மெதுவான பொருளாதார வளர்ச்சி குறைவால், அந்த நாட்டில் உள்ள வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதோடு, உலக நாடுகளில் உள்ள பல நிறுவனங்களும், வர்த்தகர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது பொருட்களின் தேவையை குறைத்துள்ளது என்றும், குறிப்பாக அயர்ன் மற்றும் தாதுக்கள், இது தவிர இன்னும் சில கமாடிட்டி பொருட்கள் தேவையை குறைத்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இதனால் இதனை சப்ளை செய்யும் பிரேசில், ஆஸ்திரேலியா மற்றும் சில நாடுகளை இந்த மந்த நிலை பாதித்துள்ளது என்றும் கூறலாம்.
பொருளாதாரம் நிலைத் தன்மையுடன் இருக்கிறது
ஜிடிபி குறைந்தாலும், மறுபுறம் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரம் நிலைத்தன்மையுடன் உள்ளது என்றும், மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2018ம் நிதியாண்டில் சீனாவின் ஜிடிபி வளர்ச்சி 6.8 சதவிகிதமாக இருந்தது எனவும், நடப்பு நிதியாண்டில் வர்த்தக போரால் உள்நாட்டு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்திலிருந்தே தலை தூக்கி வரும் இப்பிரச்சனை தற்போதைக்கும் முடிவுக்கு வரப்போவதாகவும் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது.
வர்த்தகம் பாதிப்பு
அமெரிக்கா சீனா பிரச்சனையால் சீனாவின் தொழிற்துறை உற்பத்தி, முதலீடுகள், நுகர்வோரின் வாங்கும்திறன் ஆகியவை குறைந்திருப்பது அந்நாட்டின் உள்நாட்டு வர்த்தகத்தை வெகுவாக பலவீனப்படுத்தியுள்ளது என்றும் கூறப்படும் நிலையில், அமெரிக்கா சீனாவில் இருந்து அமெரிக்கா நிறுவனங்களை வெளியேறுமாறும், மேலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதித்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் பல பெரு நிறுவனங்கள் கூட சீனாவில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் சீனாவின் வர்த்தகம் பெரும் தள்ளாட்டம் கண்டுள்ளது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே.
புதிய வரிவிதிப்பினால் தாக்கம் அதிகம் இருக்கும்
ஏற்கனவே விதிகப்பட்ட வரி விதிப்பினால் கதி களங்கி போயுள்ள சீனா, தற்போது மீண்டும் டிசம்பர் 15ம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய கூடுதல் வரி விதிப்பு 2020ல் சீனாவின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது. மேலும் கடந்த ஆகஸ்ட் மாதமே 75 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்போவதாக சீனா கூறியது. இந்த நிலையில் 10% மற்றும் 5% என இரு பிரிவுகளில் கூடுதல் வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது. இதில் 10% வரியானது செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், 5% வரி அதிகரிப்பானது டிசம்பர் 15 முதல் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.
என்ன தான் தீர்வு?
நீண்ட காலமாக இரு நாடுகளும் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியும் இதுவரை ஒரு சுமூகமான தீர்வு இதுவரை எட்டப்படவேயில்லை. இந்த நிலையில் இப்போதைக்கு இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்படவும் வாய்ப்பில்லை எனவும், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரை எந்த ஒப்பந்தமும் போடப்பட வாய்ப்பில்லை எனக் தகவல்கள் கூறுகின்றன. ஆக இன்னும் சீனா மட்டும் அல்ல மற்ற நாடுகளின் நிலையும் எங்கே போய் முடியுமோ தெரியவில்லை. அதிலும் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் ஏற்கனவே பலத்த சரிவை சந்தித்துள்ள நிலையில், இன்னும் இந்த பிரச்சனை என்ன ஆகுமோ தெரியவில்லை. எப்படி எனினும் உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தாலே மட்டுமே இதை சரி செய்ய முடியும் என்றும் சில அறிக்கைகள் கூறுகின்றன.