வாஷிங்டன் : வரும் ஞாயிற்றுகிழமை முதல் அமெரிக்காவில், சீனாவின் பிரபல செயலிகளான டிக் டாக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு தடை செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்கா சீனாவுக்கு இடையேயான புகைச்சல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், சீனாவின் பிரபலமான வீடியோ செயலியான டிக் டாக்கினை அமெரிக்கா ஞாயிற்றுகிழமை முதல் தடை செய்துள்ளது.
முன்னதாக இந்த ஆஃப்பினைக் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்குவதாக பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால் இறுதியில் மைக்ரோசாப்ட் நிறுவனம் பின் வாங்கவே, ஆரக்கிள் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்தியது.
டிக் டாக் & வீசாட் தடை
ஆனால் தற்போது அதுவும் தாமதமாகி வரும் நிலையில் இறுதியில் தடை செய்யும் முடிவினை டிரம்ப் நிர்வாகம் கையில் எடுத்துள்ளது. சமீபத்தில் இந்த டிக்டாக் செயலியின் வாயிலாக அமெரிக்கர்களின் தகவல்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் டிக் டாக்கின் அமெரிக்கா செயல்பாட்டினை ஒரு அமெரிக்கா நிறுவனம் வாங்கினால், அதனை தடை செய்ய மாட்டோம். அப்படி இல்லையெனில் தடை செய்வோம் என 90 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டது.
ஒப்பந்தத்திற்கு மறுப்பு
இதற்கிடையில் டிக் டாக் ஆரக்கிள் நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தத்தினை ஏற்க மறுத்துள்ளார் அதிபர் டிரம்ப். ஏனெனில் இரு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தின் படி டிக் டாக் செயலியின் பெரும்பாலான பங்கு பைட்டான்ஸ் நிறுவனத்திடமே இருப்பதாகவும், அமெரிக்காவின் ஆரக்கிள் நிறுவனத்திடம் குறைந்தபட்ச பங்குகள் மட்டுமே உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆபத்து இல்லை என தெரிந்தால் மட்டுமே அனுமதி
ஆகவே இந்த ஒப்பந்தத்தினை முழுமையாக ஆய்வு செய்து, இதனால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என தெரிய வந்தால் மட்டுமே இந்த ஒப்பந்தத்துக்கு அனுமதி அளிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தேச பாதுகாப்பு விஷயத்தில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வீசாட்டுக்கும் தடை
டிக்டாக் மட்டும் அல்ல, சீன நிறுவனத்தின் மற்றொரு செயலியான வீ சாட்டுக்கும் அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள வீ சாட் பயன்பாட்டாளர்கள் மீது எந்த விதமான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது. வீ சாட் செயலிக்கு தான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர அதன் பயன்பாட்டாளர்களை குறிவைத்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தான் முக்கியம்
இதற்கிடையில் தான் வரும் ஞாயிறு முதல் டிக்டாக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்படுவதாக, அமெரிக்க வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சகம் கூறியதாவது, வரும் ஞாயிறு முதல் டிக்டாக் மற்றும் வீசாட் செயலிகளுக்கு தடை விதிக்கப்படுவதன் மூலம், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, அமெரிக்கர்களின் நலனை பாதுகாக்க, தனது ஆட்சியில் எதையும் செய்ய அதிபர் டிரம்ப் தயாராக உள்ளார் என்பதை காட்டுகிறது.
அமெரிக்காவை கடுமையாக சாடல்
இது குறித்து சீனா தரப்பில், அமெரிக்காவை கடுமையான சாடியுள்ளது. மேலும் அமெரிக்காவின் இந்த கொடுமை படுத்துதலை கைவிடவும், அமெரிக்காவின் தவறான நடவடிக்கைகளை கைவிடவும், நியாயமான மற்றும் வெளிப்படையான சர்வதேச விதிகளை கடைபிடிக்கவும் சீனா அமெரிக்காவை வலியுறுத்துகிறது என்று சீன வர்த்தக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பேச்சு வார்த்தை நடக்கும்
அதனையும் மீறி சீனா தொடர்ந்து நடவடிக்கையினை தொடர்ந்தால், சீன நிறுவனங்களின் நலன்களையும் நியாயமான உரிமைகளையும் பாதுகாக்க, சீனா தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதே வீசாட் தரப்பில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை துரதிஷ்டவசமான நடவடிக்கை என்றும் கூறியுள்ளது. எனினும் வீசாட் நீண்டகால தீர்வை அடைய அமெரிக்கா அரசாங்கம் மற்றும் பிற பங்குதாரர்களுடன் விவாதிக்கும் என்றும் கூறியுள்ளது.