அட்லாண்டா: உலகின் முன்னணி கோலா தயாரிப்பு நிறுவனமான கோகோ கோலா நிறுவனம் செலவீன குறைப்பு காரணமாக தனது பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதி.
மேலும் அடுத்த சில வாரங்களில் இந்நிறுவனத்தில் இருந்து 1,000-2,000 பணியாளர்கள் நீக்கப்பட உள்ளதாகவும், மேலும் இந்த விஷயம் நிர்வாகம் மறைமுகமாக வைத்துக்கொண்டாலும், தகவல்கள் கசிந்தது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) தெரிவித்துள்ளது.
14 சதவீத வீழ்ச்சி
நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் லாபத்தில் 14 வீழ்ச்சி அடைந்ததை தொடர்ந்து, தன் செலவுகளில் இருந்து 3 பில்லியன் டாலரை குறைக்க திட்டம் தீட்டியிருந்தது. அதன் ஒரு பகுதியே இந்த பணி நீக்கம் என WSJ கூறியுள்ளது.
ஜனவரி..
ஜனவரி 8-ஆம் தேதியில், பணி நீக்கம் பற்றிய அறிக்கைகள் வட அமெரிக்க பணியாளர்களை சென்றடையும். அதே போல் ஜனவரி 15-ஆம் தேதியில் பணி நீக்கத்தின் காலக்கெடு விவரங்கள் சர்வதேச பணியாளர்களை சென்றடையும் என்றும் WSJ கூறியுள்ளது.
கார்ப்பரேட் பணியாளர்கள்
அட்லாண்டாவில் உள்ள கோகோ கோலாவின் தலைமையகம் மற்றும் உலகளாவிய வட்டார அலுவலகங்களில் இதன் தாக்கம் பலமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இங்கே 10 சதவீதத்திற்கும் அதிகமான கார்ப்பரேட் பணியாளர்கள் தங்கள் பணிகளை இழக்கலாம் என இப்பத்திரிகை கூறுகிறது.
85% பணியாளர்கள்
தன்னுடைய 130,000 பணியாளர்களில் 85% பேர்கள் நிறுவனத்தின் பாட்டில் நிரப்புதல் மற்றும் விநியோக துறைகளில் வேலை செய்கின்றனர். அதிகமான பணி நீக்கம் செய்யப்பட போவதும் இங்கே தான் என ஜர்னல் கூறியுள்ளது.
பணி இழப்பு
மறுசீரமைப்பு பணியால் வேலைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என ஏற்கனவே நிறுவனம் தன் பணியாளர்களிடம் கூறியுள்ளது; ஆனால் எத்தனை பேருக்கு வேலை பறிபோகும் என்ற கணக்கை உறுதி செய்யவில்லை என கோக் நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.
லிமோசின் டூ டாக்சி
மேலும் தன் செலவுகளையும் கடுமையாக குறைக்க கோக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதனால் நிர்வாகிகளை லிமோசின் வகை கார்களை பயன்படுத்துவதற்கு பதில் டாக்சிகளை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது. அதே போல் வால் ஸ்ட்ரீட் ஆய்வாளர்களுக்கு நடக்கும் கிறிஸ்துமஸ் பார்ட்டியையும் ரத்து செய்துள்ளது என ஜர்னல் தெரிவித்துள்ளது.
3 பில்லியன் டாலர் இலக்கு
பிப்ரவரி மாதத்தில் 1 பில்லியன் டாலராக அறிவிக்கப்பட்ட செலவு குறைப்பு இலக்கை, 2019-ல் 3 பில்லியன் டாலராக இருக்க வேண்டும் என நிர்வாகம் முடிவு செய்துள்ளது.