சீனாவில் நிலவி வரும் பதற்ற நிலைக்கு மத்தியில், கொரோனாவால் சுமார் 1,350 பேருக்கு மேல் பலி கொண்டுள்ளது.
மேலும் சுமார் 60,000 பேருக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒரு பக்கம் தினசரி நூற்றுக்கணக்கான பேரை பலி கொண்டு வரும் இந்த கொரோனா வைரஸ், மறுபுறம் சீனாவின் பொருளாதாரம் மட்டும் அல்லாது, உலகப் பொருளாதாரத்திலும் ஒரு பங்கினை எடுத்துக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த டிசம்பர் 2019ல் கொரோனாவின் தாக்கம் வெளிபட்டதிலிருந்து, பல நூறு உயிர்களை பலி கொண்டுள்ளது. ஆனால் இன்று வரையில் இந்த வைரஸை சரி செய்ய சரியான வழிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
நெருக்கடியான நிலை
COVID - 19 என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த வைரஸால், உலக சுகாதார அமைப்பு இதனை நெருக்கடி நிலையாக எச்சரித்துள்ளது. இந்த நிலையில் இந்த கோவிட் வைரஸ் இதுவரை 40க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இது சீனா மட்டும் அல்லாது இன்னும் சில நாடுகளில் சில பேரை பலி கொண்டுள்ளது.
உலக ஜிடிபியில் 20%
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவின் பொருளாதாரத்தில் பாதிப்பு, உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 20% பங்கினை வகிக்கும் ஒரு நாட்டில், பொருளாதாரத்தில் வீழ்ச்சி எனில், அது நிச்சயம் உலகப் பொருளாதாரத்திலும் எதிரொலிக்கத்தானே செய்யும்.
உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும்
இருப்பினும் டன் மற்றும் பிராட்ஸ்ட்ரீட்டின் அறிக்கையின் படி, 2020 கோடைகாலத்திற்கு அப்பால் கொரோனா வைரஸைத் தடுப்பது தாமதமாகிவிட்டால், சீன பொருளாதாரம் உலக பொருளாதாரத்தில் சுமார் 1% புள்ளியை இழுக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இதனால் உலகப் பொருளாதாரத்தில் நிச்சயம் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
வணிக நடவடிக்கை
மேலும் இந்த கொடிய தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, ஹூபே உட்பட 19 மாகாணங்களில் வணிக நடவடிக்கைகளை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் இந்த பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட தொற்று வழக்குகளை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வணிகங்கள் பாதிக்கலாம்
டன் மற்றும் பிராட்ஸ்ட்ரீட்டின் அறிக்கையின் படி, சீனாவில் அனைத்து செயலில் உள்ள வணிகங்களில் 90% உள்ளடக்கிய 22 மில்லியனுக்கும் அதிகமான வணிகங்கள் பாதிக்கப்பட்ட மேற்கூறிய 19 மாகாணங்களில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் உலகெங்கிலும் உள்ள குறைந்தது 51,000 நிறுவனங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேரடி சப்ளையர்கள் பாதிக்கப்பட்ட இந்த டயர் 1 பகுதிகளில் உள்ளனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சப்ளையர்கள் பாதிப்பு
மேலும் சுமார் 50 லட்சம் நிறுவனங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட, டயர் 2 பகுதிகளில் சப்ளையர்களை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகளாவிய பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதப்படும் இந்த நிறுவனங்கள், எதிர்காலத்தில் நீடித்த பணி நிறுத்தம் காரணமாக தவிர்க்க முடியாத விநியோக பற்றாக்குறையை காணலாம் என்றும் கூறப்படுகிறது.
வளர்ச்சி இம்புட்டு தான்
அண்மையில் அமெரிக்காவுடனான வர்த்தக யுத்தத்தின் பாதிப்பை எதிர்கொண்டிருந்த சீனப் பொருளாதாரம், கடந்த ஆண்டிலேயே 6.1% தான் வளர்ச்சியைக் கண்டிருந்தது. இது கடந்த 2018ல் 6.8% ஆகவும், இதே 2017ல் 7% ஆகவும் குறைந்தது. இந்த சீனாவின் தொற்று காரணமாக 2019ம் ஆண்டின் இறுதியில் இருந்தே வளர்ச்சி மந்தமானது. இந்த நிலையில் நடப்பு ஆண்டில் இது இன்னும் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரம் மேலும் மெதுவான வளர்ச்சியை காணலாம்
இந்த நிலையில் இந்த தொற்று நோய்க்கு சரியான மருந்து கிடைக்காவிட்டால், பொருளாதாரம் மேலும் மெதுவான வேகத்திற்கு செல்லும். மீன் வளம், சுரங்க மற்றும் வேளாண்மை போன்ற முதன்மைத் தொழில்கள் கொரோனா தாக்கம் இருக்கும் காலங்களில் சுருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது உணவு உற்பத்திக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மந்த நிலை ஏற்படலாம்
இதே இரண்டாம் நிலை தொழில்களும் சில்லறை மற்றும் மொத்த பொருட்களின் தேவை குறைவதால் மந்த நிலையை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கோரிக்கைகளின் அடிப்படையில் ஒரு சில துணைப் பிரிவுகளைப் பொறுத்து மூன்றாம் நிலை தொழில்கள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ சாதனங்களுக்கு தேவை அதிகரிக்கலாம்
மேலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து பரவுவதால் நுகர்வோர் தேவை, அவசர மருத்துவ சேவைகள், மருத்துவ பொருட்கள் மற்றும் உணவு வினியோகங்களில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி 11 அன்றும் இந்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இதன் படி அறுவை சிகிச்சை மற்றும் டிஸ்போஷபுள் முகமூடிகள் மற்றும் கையுறைகளை ஏற்றுமதி செய்ய அனுமதித்தது.
இந்தியாவுக்கு ஏற்றுமதி வாய்ப்பு
சீனாவில் நிலவி வரும் தொற்று நோய்க்கு மத்தியிலும், நிலவி வரும் பதற்றத்திற்கு மத்தியிலும் இந்தியா உதவ முன் வந்திருப்பது மிகப்பெரிய விஷயம் என்றும் கருதப்படுகிறது. இதற்கிடையில் சீன இறக்குமதியை அதிகம் நம்பியுள்ள கென்யா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியா உதவ முடியும். மேலும் கென்யா மற்றும் நைஜீரியாவிற்கானா சீனாவின் ஏற்றுமதி முறையே 48% மற்றும் 41% என்றும் கூறப்படுகிறது.
இந்திய மருத்துவ சந்தை
இந்தியா முதல் 20 மருத்துவ சாதன சந்தைகளில் ஒன்றாகும். இது ஜப்பான், சீனா மற்றும் தென் கொரியாவுக்கு அடுத்தப்படுஇயாக ஆசியாவில் நான்காவது மிகப்பெரிய மருத்துவ சாதன சந்தையாகும். கொரொனா வைரஸ் தாக்கத்திற்கு மத்தியில் இதுவரை சீனா 11 லட்சம் முகமூடிகள் மற்றும் பாதுகாப்பு ஆடைகளை சீனாவுக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.