கிரிப்டோகரன்சிகள் மீது ஆரம்பத்தில் இருந்தே டெஸ்லா நிறுவனத்தின் எலான் மஸ்க் அதிக ஆர்வம் செலுத்தி வந்தார். தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி கிரிப்டோகரன்சிகள், டோஜ்காயின் குறித்து பதிவிட்டு வந்தார்.
ஆரம்பத்தில் இவரது ட்வீட்டுகளே கிரிப்டோகரன்சிகளில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய தூண்டியதாக சமூக வலைதளங்களில் கூறப்பட்டது.
இப்படி பல்வேறு கருத்துகளுக்கு மத்தியில் டோஜ்காயின் முதலீட்டாளர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு டெஸ்லா நிறுவனர் இழப்பீடு தர வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.
அடிக்கடி ட்வீட்
இதற்காக டெஸ்லா நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார். அது மட்டும் அல்ல 258 பில்லியன் டாலர் தனது இழப்பீடாக எலான் மஸ்க் கொடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.
கிரிப்டோகரன்சி சந்தையானது நல்ல உச்சத்தில் இருந்த காலக்கட்டத்தில் எலான் மஸ்க் அடிக்கடி கிரிப்டோகரன்சிகள் குறித்து பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.
காருக்கும் கட்டணமா?
ஒரு கட்டத்தில் டோஜ்காயினை தனது சில கார்களை வாங்க கட்டணமாக ஏற்றுக் கொள்ள திட்டமிட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். எலான் மஸ்கின் இந்த கருத்தினால் டோஜ்காயின் மதிப்பும் எதிர்காலத்தில் நல்ல ஏற்றம் காண வழிவகுக்கலாம் என நம்பி பலரும் அந்த சமயத்தில் முதலீடு செய்தனர்.
கேத் ஜான்சன் இழப்பு
ஆனால் கடந்த சில வாரங்களாகவே கிரிப்டோகரன்சி சந்தையில் பலத்த சரிவு ஏற்பட்டு வருகின்றது. கிரிப்டோகரன்சிகள் மூலம் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம் என கனவு கண்டவர்களுக்கு, இன்று கையில் இருந்ததும் போனதும் தான் மிச்சம். இப்படி இழப்பினை சந்தித்தவர் தான் டோஜ்காயின் முதலீட்டாளரான கேத் ஜான்சன்.
எலான் மஸ்க் மீது வழக்கு
இவர்தான் தற்போது எலான் மஸ்க் மீதும், டெஸ்லா, ஸ்பேக் எஸ்க் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார். டோஜ்காயின் என்பது பிரமிடு திட்டமாக இருந்தது. அதன் மூலம் டோஜ்காயினில் முதலீடுகளை அதிகரிக்க எலான் மஸ்க் முயன்றுள்ளார். தான் 2019ல் இருந்து டோஜ்காயினில் முதலீடு செய்து வருவதாகவும், ஆனாலும் பெரும் இழப்பினை தான் சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பலருக்கும் இழப்பு
எலான் மஸ்கின் ட்வீட்களை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்தனர், இதனால் பலருக்கும் பல ஆயிரம் கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் அதிக பாலோவர்களை கொண்டிருக்கும் எலான் மஸ்க், தொடர்ந்து கிரிப்டோகரன்சிகள் குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது, தனது ஸ்பேஸ் எக்ஸ் தனடு செயற்கைகோள் ஒன்றுக்கு கூட டோஜ்காயின் என பெயரிட்ட்டது குறிப்பிடத்தக்கது.