டெல்லி: கொரோனா பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல மொமெண்டில் இருக்கிறது சீனா. இதுவரை 900 பேர் உயிர் இழந்து இருக்கிறார்கள்.
எனவே சீனா மேலும் சீரியஸாக கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் வேலையில் இறங்கி இருக்கிறது.
கொரோனா வைரஸால், சீனாவில் உயிர் இழப்பு மட்டும் ஏற்படவில்லை, வியாபார இழப்பும் ஏற்பட்டு இருப்பதாகச் சொல்கிறார்கள். அப்படி கொரோனா வைரஸால் என்ன பொருளாதார இழப்புகளைச் சீனா சந்திக்கிறது..? இந்தியாவுக்கு இதில் என்ன லாபம்..? வாருங்கள் பார்ப்போம்.
வியாபாரங்கள்
செராமிக், ஹோம்வேர், ஃபேஷன் சார்ந்த பொருட்கள், ஃபர்னிச்சர்கள், டெக்ஸ்டைல்கள், பொறியியல் சார்ந்த பொருட்கள் என பல பொருட்களை வாங்க, திடீரென இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறார்கள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள். ஏன் இந்த திடீர் திருப்பம் என்றால் கொரோனா என்கிறார்கள்.
விசாரணை
கடந்த 10 நாட்களாக, மேலே சொன்ன பொருட்களை தயாரிக்கும் மற்றும் ஏற்றுமதி செய்யும், இந்திய நிறுவனங்கள் மற்றும் இந்திய ஏற்றுமதியாளர்களிடம், பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறதாம். பெரும்பாலும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இருந்து தான் அதிக விசாரணைகள் வந்து கொண்டு இருக்கிறதாம்.
நோ சீனா
சீனாவில் கொரோனா வைரஸ் சிக்கல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், அங்கு அன்றாட வாழ்க்கையே பெரிய அளவில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. உணவகங்கள், மால்கள், ஹோட்டல்கள், உற்பத்தி ஆலைகள், அலுவலகங்கள் என பல இடமும் ஊழியர்கள் இல்லாமல் வெறிச் சோடி கிடக்கின்றன.
வேறு நாடு
இந்த நேரத்தில் ஏற்றுமதிக்கு சீனாவில் ஆர்டர் கொடுத்துவிட்டு அதிக நாட்கள் காத்திருப்பதற்கு பதிலாக, இந்தியா போன்ற வேறு நாடுகளிடம் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என நம் பக்கம் திரும்பி இருக்கிறார்களாம் இறக்குமதி செய்யும் நாடுகள். எனவே தான் திடீரென இந்தியாவுக்கு அதிக ஏற்றுமதி விசாரணைகள் வந்து கொண்டு இருக்கிறதாம்.
50 புதிய கணக்குகள்
கடந்த 7 நாட்களில் சுமார் 50 புதிய ஏற்றுமதி கணக்குகள் தொடங்கப்பட்டு இருப்பதாக, இந்தியாவின் கை வேலைப் பொருட்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (Export Promotion Council for Handicrafts) இயக்குநர் ராகேஷ் குமார் சொல்லி இருக்கிறார். குறிப்பாக டெக்ஸ்டைல், ஃபேஷன், ஃபர்னிச்சர் போன்ற பொருட்களுக்கு புதிய கணக்கைத் தொடங்கி இருக்கிறார்களாம்.
சிவிசாமா 2020
உலக அளவில் செராமிக் கண்காட்சி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. Cevisama 2020 என்பது தான் அந்த கண்காட்சியின் பெயர். இந்த கண்காட்சியில் கலந்து கொண்ட 55 இந்திய நிறுவனங்களுக்கு, ஏற்றுமதி தொடர்பாக நிறைய விசாரணைகள் வந்து கொண்டு இருக்கிறதாம்.
நோ சீனா
எப்போதும் செராமிக் வியாபாரத்தில் சர்வதேச அளவில் கலக்கும் சீனா இந்த முறை கொரோனா பாதிப்பால் பெரிய அளவில் கலந்து கொள்ளாததால், இந்த முறை இந்திய நிறுவனங்களுக்கு ஜாக் பாட் அடித்து இருக்கிறதாம். குறிப்பாக vitrified tiles ஏற்றுமதியில் இந்தியாவும் சீனாவும் அவ்வளவு போட்டி போடுமாம். இப்போது தனியாக இந்தியா கால் பதிக்க ஒரு நல்ல வாய்ப்பாம்.
மற்ற துறைகள்
சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து மட்டும் சுமாராக 10 கோடி ரூபாய்க்கு டெக்ஸ்டைல் ஆர்டர்கள் வந்து இருப்பதாக டெக்னோ க்ராஃப்ட் என்கிற நிறுவனம் சொல்லி இருக்கிறது. டெக்ஸ்டைலோடு, ரசாயனம், பொறியியல் தொடர்பான பொருட்கள், மரைன் பொருட்கள் போன்ற துறைகளின் ஏற்றுமதியும் அதிகரிக்கும் என்கிறது இந்திய ஏற்றுமதி சம்மேளனம் (FIEO).
ஜாலி இந்தியா, கோபத்தில் சீனா
கொரோனாவைப் பார்த்து உலகமே அஞ்சி நடுங்கினாலும், கொரோனாவை பிசினஸ் பார்ட்னர் போல ஆக்கிக் கொண்டு, ஏற்றுமதி வியாபாரத்தில் கல்லா கட்டத் தொடங்கி இருக்கிறது இந்தியா. ஆக தன் வியாபாரத்தை இந்தியா தட்டிக் கொண்டு போகிறது என சீனாவுக்கு கொஞ்சமாவது கடுப்பாகாதா என்ன..?