கிரிப்டோகரன்சிகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தனது ஆதரவினை அளித்து வருகின்றார். அடிக்கடி தனது ட்விட்டர் பக்கத்தில் கிரிப்டோகரன்சிகள் குறித்து பாசிட்டிவ்வான கருத்துகளை பகிர்ந்து வந்துள்ளார்.
குறிப்பாக டோஜ்காயின் குறித்து பல ட்வீட்களில் பகிர்ந்துள்ளார். இவரின் ட்வீட்டுகள் கிரிப்டோகரன்சிகளில் முதலீட்டாளர்களை முதலீடு செய்ய தூண்டியதாக சர்ச்சை இருந்து வருகின்றது.
இப்படி பல்வேறு கருத்துகளுக்கு மத்தியில் தான், டோஜ்காயின் முதலீட்டாளர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இழப்பீடு தர வேண்டும் என, எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அடிக்கடி ட்வீட்
வழக்கு தொடர்ந்ததோடு மட்டும் அல்ல, தனக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு, எலான் மஸ்க் 258 பில்லியன் டாலர்களை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாகவே கிரிப்டோகரன்சி சந்தையில் பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது. கிரிப்டோகரன்சிகள் மூலம் கோடிக்கணக்கில் லாபம் பார்க்கலாம் என நினைத்தவர்களுக்கு, செய்த முதலீடும் சேர்ந்து போய்விட்டது என்பது பலரின் மத்தியிலும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.இப்படி இழப்பினை சந்த்தித்தவர் தான் டோஜ்காயின் முதலீட்டாளரான கேத் ஜான்சன்.
எதற்காக எலான் மஸ்க் மீது வழக்கு
இவர்தான் தற்போது எலான் மஸ்க் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். டோஜ்காயின் என்பது பிரமிடு திட்டமாக இருந்தது. அதன் மூலம் டோஜ்காயினில் முதலீடுகளை அதிகரிக்க எலான் மஸ்க் முயன்றுள்ளார். தான் 2019ல் இருந்து டோஜ்காயினில் முதலீடு செய்து வருவதாகவும், ஆனாலும் பெரும் நஷ்டத்தினை மட்டுமே கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏராளமானவர்கள் நஷ்டம்
எலான் மஸ்கின் ட்வீட்களை நம்பி ஏராளமானோர் முதலீடு செய்துள்ளனர். பலருக்கும் பல ஆயிரம் கோடி டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. தனது ட்விட்டர் பக்கத்தில் அதிக பாலோவர்களை கொண்டிருக்கும் எலான் மஸ்க், தொடர்ந்து கிரிப்டோகரன்சிகள் குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் கேத் ஜான்சனின் வழக்கும் வந்துள்ளது.
டோஜ்காயினுக்கு மீண்டும் ஆதரவு
எலான் மஸ்க் தொடர்ந்து கிரிப்டோகரன்சிகளுக்கு தனது ஆதரவினை அளிக்கும் விதமாக, தனது ஸ்பேஸ் எக்ஸ்-ல் உள்ள செயற்கைகோள் ஒன்றுக்கு கூட டோஜ்காயின் என பெயரிட்டது குறிப்பிடத்தக்கது.
இப்படி பலத்த ஆதரவினை கொடுத்து வரும் எலான் மஸ்க், கேத் ஜான்சன் வழக்கு தொடர்ந்து சில தினங்களே ஆன நிலையில், தற்போது மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து டோஜ்காயினுக்கு எனது ஆதரவு உண்டு என பதிவிட்டுள்ளார்.