உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து இருக்கும் சீனாவின் முக்கியமான பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தைப் போலவே ஐரோப்பா தனது வர்த்தகம் மற்றும் வர்த்தகக் கூட்டணியைப் பெரிய அளவில் மேம்படுத்து பிரம்மாண்ட திட்டத்தை அறிவித்துள்ளது.
ஐரோப்பிய கமிஷன் வெளியிட்ட திட்டத்தின் படி சுமார் 300 பில்லியன் யூரோ அதாவது 340 பில்லியன் டாலர் அளவிலான பப்ளிக் மற்றும் பிரைவேட் இன்பராஸ்டரக்சர் முதலீடுகளை உலக நாடுகளில் செய்யத் திட்டமிட்டு உள்ளது.
சீனா பெல்ட் அண்ட் ரோடு திட்டம்
சீனா தனது பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் மூலம் பல நாடுகளில் அதிகப்படியான முதலீட்டில் பல கட்டுமான திட்டங்களைச் செயல்படுத்தி தனது நாட்டின் வர்த்தகத்தையும் வருமானத்தையும் தொடர்ந்து அதிகரித்துச் சீனா-வை தாண்டி பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதில் ஆப்பிரிக்கா மிகவும் முக்கியமானது.
ஐரோப்பா
தற்போது சீனாவை போலவே ஐரோப்பாவும் தனது வர்த்தகம் மற்றும் ஆதிக்கத்தை மேம்படுத்த உலக நாடுகளில் பெரிய அளவிலான முதலீட்டில் கட்டுமான திட்டங்களைச் செயல்படுத்த முடிவு செய்து ஆதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சீனா, ஐரோப்பா மத்தியில் அடுத்தது எந்த நாட்டில் அதிகப்படியான முதலீட்டை செய்ய வேண்டும் என்பதில் பெரும் போட்டி உருவாகும்.
குளோபல் கேட்வே
இந்த மாபெரும் குளோபல் கேட்வே திட்டத்திற்காக ஐரோப்பிய யூனியனின் ஆதாரங்களைச் சேர்த்து, உறுப்பினர் மாநிலங்கள், ஐரோப்பிய நிதியியல் அமைப்புகள், தேசிய வளர்ச்சி நிதி அமைப்புகள் என அனைத்தையும் ஒன்றிணைத்து இதன் மூலம் 300 பில்லியன் யூரோ-வை 2021 முதல் 2027 வரையில் முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது.
ஐரோப்பிய யூனியன்
மேலும் இத்திட்டத்திற்கான நிதியை ஐரோப்பிய யூனியன் நாடுகள் நேரடியாகத் தனது கஜானாவில் இருந்து முதலீடு செய்யாமல் வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வாயிலாக நிதி திரட்டி அதன் மூலம் முதலீடு செய்யப்பட உள்ளது. இதனால் ஐரோப்பிய யூனியன் நிதி சுமை பெரிய அளவில் குறையும்.
ஐரோப்பா - சீனா
ஐரோப்பிய யூனியன் குளோபல் கேட்வே திட்டம் சீனாவுக்குப் போட்டி திட்டம் என வெளிப்படையாகக் கூறவில்லை என்றாலும், இத்திட்ட வடிவத்தைப் பார்க்கும் போது சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தைப் போலத் தான் உள்ளது.
சீனா - ஜி ஜின்பிங்
சீனா தனது உலகளாவிய முதலீட்டுத் திட்டத்தைப் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் வாயிலாகச் செயல்படுத்தி வருகிறது. 2013ஆம் ஆண்டு இத்திட்டத்தை ஜி ஜின்பிங் அறிமுகம் செய்யும் போது 2020க்குள் சுமார் 139.8 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளதாக அறிவித்தார். இதில் 2020ல் மட்டும் சுமார் 22.5 பில்லியன் டாலரை சீனா முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா
சீனாவின் இந்தப் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தின் வாயிலாக ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா கண்டங்கள் உடன் சீனா செய்யும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக நிலம் மற்றும் கடல் வழி வர்த்தகத் தளத்தை மேம்படுத்தும் இன்பராஸ்ரக்சர் திட்டங்களில் சீனா முதலீடு செய்து வருகிறது.
ஏழை நாடுகள்
ஆனால் சீனா இந்த முதலீட்டுத் திட்டங்கள் மூலம் ஏழை நாடுகளைத் தொடர்ந்து சீனா தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகிறது என உலக நாடுகள் சீனாவை குறைக்கூறி வருகிறது. ஏழை நாடுகளில் இந்த மாபெரும் கட்டுமான திட்டங்களைச் செயல்படுத்தும் போது தத்தம் நாடுகளின் கடன் சுமை பெரியதாக உயரும். இதன் மூலம் சீனா பிற நாடுகளில் ஆதிக்கம் செலுத்தத் துவங்குகிறது.
விதிமுறை மீறல்
மேலும் சீனா பிற நாடுகளில் செயல்படுத்தும் திட்டம் கூட்டணி முறையில் செய்யப்பட்டாலும், இந்த ஒப்பந்தத்தில் மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் உரிமைகள் கடுமையாக மீறப்பட்டுச் செயல்படுத்தி வருகிறது எனப் பல நாடுகள் குற்றம்சாட்டி வருகிறது.