வாஷிங்டன்: சீனாவினை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸால், உலகம் பூராவும் அச்சம் நிலவி வருகிறது என்றே கூறலாம். ஏனெனில் அந்தளவுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் சீனாவில் இதுவரை சுமார் 1,115 பேர் இறந்துள்ளதாகவும், இதே சுமார் 45,171 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் தற்போது 8,216 பேர் மிக மோசமாக இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதே 31,046 லேசான தொற்று தாக்கம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த கொரோனா வைரஸ் மக்களை மட்டும் அல்ல, பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம். சொல்லபோனால் சீனாவின் முதல் காலாண்டு ஜிடிபியில் 2% இது எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது
இந்த நிலையில் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் அமெரிக்கா பொருளாதாரம் மிகச் சிறந்த இடத்தில் உள்ளது. சொல்லப்போனால் வர்த்தக கொள்கை நிச்சயமற்ற தன்மை, உலகளாவிய வளர்ச்சி நிச்சயமின்மை உள்ளிட்ட அபாயங்களுடன் ஒப்பிடும்போது அமெரிக்க பொருளாதாரம் மிக நன்றாகவே உள்ளது என கூறியுள்ளார்.
பாதிப்பை ஏற்படுத்தலாம்
இது குறித்து அமெரிக்கா பிரதி நிதிகள் சபையில் பேசிய பவல், அமெரிக்கா பொருளாதார விரிவாக்கம், இப்போது அதன் 11 ஆவது ஆண்டில் உள்ளது. இது மிக நீண்ட பதிவாகும். பொருளாதார விரிவாக்கத்தை தொடர முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. ஆனால் சீனாவின் புதிய வெளியீடான கொரோனா வைரஸால், சீனா மட்டும் அல்லாமல் சீனாவை நெருங்கிய நாடுகளையும், அதன் வர்த்தக பங்காளிகளையும் இது பாதிக்கும் என்றும், இதன் சில விளைவுகள் அமெரிக்காவிலும் ஏற்படக் கூடும் என்றும் பவல் எச்சரித்துள்ளார்.
டிரம்பின் கொள்கைகள் நிச்சயம் உதவும்
இதே அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பின் வரிக் குறைப்புகள் மற்றும் வர்த்தக ஒப்பந்த கொள்கைகள் உள்ளிட்ட கொள்கைகள் பொருளாதாரத்திற்கு உதவுகின்றனவா? என்று பவலிடம் குடியரசு கட்சியின் ஆண்டி பார் கேட்டதற்கு நிச்சயம் உண்டு என்றும் பதில் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அதே சமயம் பற்றாக்குறை பற்றியும் எச்சரித்துள்ளாராம். இது 2020ம் ஆண்டில் 1 டிரில்லியன் டாலருக்கு அதிகாமான தொகையை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பெடரல் வங்கி கவனம்
மேலும் ஃபெடரல் வங்கி வேலைவாய்ப்பு மற்றும் நிலையான விலைகளின் இலக்குகளை அடைவதில் கவனம் செலுத்துவதாகவும் பவல் தெரிவித்துள்ளார். மேலும் தொழிலாளர் சந்தை பற்றி பேசியவர், தொழிலாளர் சந்தையில் சில சிக்கலான அறிகுறிகளை சுட்டிக் காட்டியுள்ளார். அதில் இன மற்றும் இனக்குழுக்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் உள்ளன எனவும் கூறியுள்ளார்.