உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் பன்னாட்டு நிறுவனங்கள் பலவும் தங்களது ஆலையை அமைத்துள்ளன. தற்போது சீனாவில் நிலவி வரும் கொரோனா பதற்றத்தின் மத்தியில் பல முக்கிய நகரங்களிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் சீனாவில் உள்ள பல முக்கிய தொழிற்சாலைகளிலும் செயல்பாடுகளும் பாதிக்க தொடங்கியுள்ளது. பல நிறுவனங்களும் தங்களது உற்பத்தி பாதிக்கலாம் என அஞ்சி வருகின்றன.
சீனாவில் மந்த நிலைக்கு மத்தியில் தற்போது தான் மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில், உற்பத்தியானது மீண்டும் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபோன் உற்பத்தி ஆலை
குறிப்பாக சீனாவின் முக்கிய பிரம்மாண்ட தொழில் நகரமான செங்ஸு நகரிலும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தான் உலகின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையான ஃபாக்ஸ்கானும் அமைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று அச்சத்தால் ஊழியர்கள் பணிபுரிவதிலும் இங்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே லாக்டவுனால் ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகின்றது.
ஊழியர்கள் தப்பி ஓட்டம்
சில தினங்களுக்கு முன்பு பாக்ஸ்கான் உற்பத்தி ஆலையில் தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சிய ஊழியர்கள் பலரும், அங்கிருந்து தப்பி செல்வதற்காக மதில் சுவர்களை தாண்டி குதிக்கும் வீடியோவானது சமூக வலைதளத்தில் பரவியது. மேலும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஆங்காங்கே ஊழியர்கள் சாரை சாரையாக நடந்து செல்வதையும் பார்க்க முடிந்தது.
தினசரி $55 டாலர் போனஸ்
உலகின் ஐபோன் உற்பத்தியில் சுமார் 50% இந்த ஆலையில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஊழியர்கள் பற்றாக்குறையால் நிறுவனம் ஒரு சூப்பரான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் நிறுவனத்துடன் இணைந்து, ஆலையில் தங்கி பணியாற்றும் ஊழியர்களை ஊக்குவிக்கும் விதமாத தினசரி 55 டாலர் (இந்திய மதிப்பில் 4500 ரூபாய்க்கும் மேல்) வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
எப்போது வரையில் சலுகை
பாக்ஸ்கானின் இந்த அறிவிப்பு சீனாவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், சில தினங்களுக்கு முன்பு ஆலையை விட்டு வெளியேறிய நிலையில் வந்துள்ளது. முன்னதாக ஒரு நாளைக்கு 100 யுவான் என்று இருந்த சலுகையினை, தற்போது 400 யுவானாக அதிகரித்துள்ளது. பாக்ஸ்கானின் இந்த சலுகையானது நவம்பர் இறுதி வரையில் கிடைக்கும் என்றும் அறிக்கப்பட்டுள்ளது.
15000 யுவான் வரை
இதன் மூலம் நவம்பர் மாதத்தில் முழுவதுமாக முழு வருகை தருகின்றார்களோ அவர்களுக்கு தினசரி போனஸ் கூடுதலாக 15000 யுவான் வரையில் கூடுதலாக பெறலாம் என்றும் ஃபாக்ஸ்கான் அறிவித்துள்ளது. இதே நவம்பரில் 15 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிக்கு சென்றால் அதற்கும் தனியாக சலுகைகள் உண்டு என்றும் அறிவித்துள்ளது.
உற்பத்தி உறுதி
இது கொரோனா காலத்திலும் நிறுவனத்தின் உற்பத்தியினை உறுதி செய்யும் விதமான நிறுவனத்துடன் இணைந்து யாரெல்லாம் பணிபுரிகிறார்களோ? அவர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக நிறுவன வட்டாரங்கள் கூறுகின்றன.
சீனாவில் கொரோனா அவ்வளவு மோசமாக இல்லை. கட்டுப்படுத்த கூடிய அளவில் தான் உள்ளது. ஆக மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
பணிபுரிய விரும்பாவிட்டால்
மேலும் ஊழியர்கள் இந்த காலகட்டத்தில் பணிபுரிய விரும்பாவிட்டால், அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து வசதி உள்பட அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று நிறுவனம் தரப்பில் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆலைகளில் இருந்து வெளியேறிய ஊழியர்கள் அவர்களை தனிமைப்படுத்திக் கொள்மாறும், அவர்களை பதிவு செய்து கொள்மாறும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
உற்பத்தி பாதிக்குமா?
முன்னதாக ஒரு அறிக்கையில் நவம்பர் மாதத்தில் ஐபோன் உற்பத்தியானது 30% பாதிக்கலாம் என கணிப்புகள் வெளியான நிலையில், ஃபாக்ஸ்கான் இத்தகைய அறிவிப்புகளை கொடுத்ததிருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சில தினங்களுக்கு முன்பே பாக்ஸ்கான் நிறுவனம் தரப்பில், உற்பத்தி சரிவினைக் தடுக்க நிறுவனம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியிருந்தது. இத்தகைய அறிவிப்புகளுக்கு மத்தியில் தான் தற்போது ஊழியர்களுக்கு ஊக்க சலுகைகளை அறிவித்துள்ளது.