சாம் பேங்க்மேன்-ஃபிரைட் உருவாக்கிய FTX நிறுவனம் உலகின் 2வது பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளமாக உயர்ந்தது. இதன் மூலம் இவருடைய சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் 26.5 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்தது.
ஆனால் கடந்த மாதம் FTX நிறுவனம் திவாலானதாகச் சாம் பேங்க்மேன்-ஃபிரைட் அறிவித்த நிலையில், இத்தளத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் பணத்தைத் திரும்ப எடுக்க முடியாமல் போனது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் சாம் பேங்க்மேன்-ஃபிரைட், FTX நிறுவனத்தில் செய்த பல்வேறு மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவை விட்டு வெளியேறி பஹாமாஸ்-ல் தங்கி வந்த சாம் பேங்க்மேன் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து பஹாமாஸ் நீதிமன்றம் அவருக்குப் பெயில் வழங்கவும் மறுத்தது.
FTX நிறுவனம்
FTX நிறுவனத்தின் நிறுவனரான சாம் பேங்க்மேன்-ஃபிரைட் 2017ல் உருவாக்கிய Alameda Research என்னும் நிறுவனத்திற்கு FTX கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்தில் இருந்து சாம் பேங்க்மேன்-ஃபிரைட் ரகசியமாக வாடிக்கையாளர்கள் முதலீடு செய்த பணத்தைத் தொடர்ந்து எடுத்து வந்துள்ளார்.
சாம் பேங்க்மேன்
இப்படி யாருக்கும் தெரியாமல் சாம் பேங்க்மேன்-ஃபிரைட் சுமார் 10 பில்லியன் டாலர் தொகையை ரகசியமாகத் தனது Alameda Research நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதை எப்படிச் செய்துள்ளார் தெரியுமா..?
Alameda Research கணக்கு
2020 ஆம் ஆண்டு மத்தியில் FTX நிறுவனத்தின் தலைமை இன்ஜினியரும் இந்தியருமான நிஷாத் சிங் அதன் வர்த்தகத் தளத்தின் சாப்ட்வேர் கோடு-ல் சில மாற்றங்களைச் செய்துள்ளார். சாம் பேங்க்மேன்-க்கு சொந்தமான Alameda Research நிறுவனத்திற்குச் சிறப்புச் சலுகை அளிக்கும் வகையில் சாப்ட்வேர் கோடு மாற்றப்பட்டு உள்ளது.
கடன், சொத்து, விற்பனை
இந்த மாற்றம் மூலம் Alameda Research நிறுவனம் FTX வர்த்தகத் தளத்தில் இருந்து அளவில்லாமல் கடன் வாங்கவும், பினைய அளவை தாண்டியும் கடன் பெறும் உரிமையை அளித்துள்ளது. இதன் மூலம் கடந்த 2 வருடமாகப் பல பில்லியன் டாலர் தொகை FTX வர்த்தகத் தளத்தில் இருந்து Alameda Research கணக்கிற்குச் சென்றுள்ளது.
திருட்டு வேலை
இதேபோல் கடன் வாங்கி Alameda Research நிறுவனம் வாங்கிய கிரிப்டோ சொத்துக்களின் மதிப்பு குறைந்தால் விற்பனை செய்யும் முறையை ஆட்டோமேட்டிக் செய்யப்பட்டு உள்ளது. சொல்லப்போனால் Alameda Research நிறுவனம் வாங்கிய சொத்துகளை விற்பனை செய்யக் கூடாது. இப்படிப் பல மில்லியன் டாலர் பணத்தைத் திருடியுள்ளார் சாம் பேங்க்மேன்.
SEC ஆய்வு
இந்த மோசடி வேலைகள் அனைத்தையும் அமெரிக்காவின் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான SEC ஆய்வு செய்து உறுதி செய்துள்ளது. மேலும் அமெரிக்க அரசு தரப்பில் சுமார் 8 குற்றச்சாட்டுகளைச் சாம் பேங்க்மேன் செய்ததாக அறிவித்து அவரைக் கைது செய்து அமெரிக்காவிற்குக் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறது.
சாம் பாங்க்மேன்-ஃபிரைட் கைது
அமெரிக்க அரசின் உத்தரவின் படி பஹாமாஸ் காவல்துறையின் திங்கள்கிழமை மாலை 6:00 மணிக்குப் பிறகு பஹாமாஸில் உள்ள Nassau பகுதியில் அமைந்துள்ள அல்பானி என்னும் இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் சாம் பாங்க்மேன்-ஃபிரைட் கைது செய்யப்பட்டார்.
ஜாமீன் மறுப்பு
சாம் பாங்க்மேன் கைதுக்குப் பின்பு செவ்வாய்க்கிழமை அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பில் சாம் பேங்க்மேன்-ஃபிரைட் செய்தது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய நிதி மோசடிகளில் ஒன்று எனக் குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோல் பஹாமாஸ் நீதிமன்றத்தில் சாம் பாங்க்மேன் ஜாமின் கேட்ட நிலையில் அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதனால் விரைவில் சாம் பேங்க்மேன் பஹாமாஸ்-ல் இருந்து அமெரிக்கா கொண்டு செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.