அமெரிக்கா வழங்கும் H-1B விசாவில் சுமார் 75 சதவிகித விசாக்களை இந்தியர்கள் தான் பெற்றுக் கொள்கிறார்கள்.
இந்த கொரோனா வைரஸால், எல்லா தரப்பு மக்களும் பல தரப்பட்ட பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. ஆனால் H-1B விசா இந்தியர்கள் மட்டும், வேறு ஒரு விதமான மன அழுத்தத்துக்கும், சிரமங்களுக்கு ஆளாகிக் கொண்டே இருக்கிறார்கள்.
H-1B விசா இந்தியர்கள், என்ன மாதிரியான பிரச்சனைகளைச் சந்திக்கிறார்கள்? என்ன ஆகிறது அவர்களுக்கு? என்பதை விரிவாகப் பார்ப்போம்.
வேலை காலி
முதல் மற்றும் மிகப் பெரிய அடியே, தற்போது அமெரிக்காவில் H-1B விசா வாங்கி வேலை பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியர்களை தடாலடியாக லே ஆஃப் செய்யப்படுகிறார்கள். வேலை இழந்த இந்தியர்களே கூட "இது மிகவும் சிரமமான விஷயம் தான், ஆனால் நான் கம்பெனியை நடத்தினால் கூட இப்படி ஒரு முடிவைத் தான் எடுப்பேன்" என்கிறார்கள்.
ஏன் H-1B விசாதாரர்கள்
அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்க ஊழியர்களை தற்காலிகமாக சம்பளம் கொடுக்காத விடுமுறையில் வைத்துக் கொள்ள முடியும் அல்லது அமெரிக்க ஊழியர்களின் பணி நேரத்தை குறைத்துக் கொள்ள முடியுமாம். ஆனால் H-1B விசாதாரர்களை அப்படி வைத்துக் கொள்ள முடியாதாம். இது H-1B விசாதாரர்கள், அதிகம் லே ஆஃப் செய்யப் பட ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள்.
வேலை இழப்பு உதவி
H-1B விசாதாரர்களைத் தான் லே ஆஃப் செய்கிறார்களா? அமெரிக்கர்களின் நிலை என்ன? என்றால் மிகவும் மோசமாகத் தன இருக்கிறது. இதுவரை அமெரிக்காவில் சுமார் 16.6 மில்லியன் பேர் (1.66 கோடி) பேர் வேலை இழப்புக்கான உதவிகளைப் பெற அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்றால் நிலைமை எவ்வளவு கடுமையாக இருக்கிறது என புரியும். ஆக ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் நிலைமை சரி இல்லை.
H-1B இந்தியர்கள்
ஒரு பக்கம் H-1B விசா இந்தியர்கள் தங்கள் வேலையை இழந்து விடுகிறார்கள் என்றால் மறு பக்கம், அந்த கம்பெனி வழங்கும் ஹெல்த் இன்சூரன்ஸையும் இழந்து விடுவார்கள் என்கிறது Huffington post பத்திரிக்கை. இதில் இன்னொரு கொடுமையான விஷயம் என்ன என்றால், H-1B விசாதாரர்கள் அமெரிக்க மத்திய அரசின் Medicaid திட்டத்தின் கீழும் சிகிச்சை பெற முடியாதாம்.
72,000 டாலர்
ஒருவேளை ஒரு நபர் ஹெல்த் இன்சூரன்ஸ் இல்லாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு அமெரிக்க மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டால், சுமாராக 72,000 டாலர் செலவழிக்க வேண்டி இருக்கும் என வாசிங்டன் போஸ்ட் பத்திரிகைக்கை கணித்து இருப்பதாக Huffington post மேற்கோள் காட்டுகிறது. ஆக, அமெரிக்காவில் சம்பாதித்ததை எல்லாம், அமெரிக்க மருத்துவமனைகளுக்கு கொடுத்துவிட்டு வீட்டுக்கு விமானம் ஏற வேண்டி வரலாம்.
அமெரிக்கா ஹாட் ஸ்பாட்
தற்போது உலகிலேயே அதிக அளவில் கொரோனா வைரஸ் போட்டு பிளந்து கொண்டிருக்கும் நாடு அமெரிக்கா. அமெரிக்காவில் இதுவரை 4.68 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 16,650 பேர் மரணித்து இருக்கிறார்கள். இந்த பங்கர நோய் பரவிக் கொண்டிருக்கும் காலத்தில் நம் H-1B விசா இந்தியர்களுக்கு ஹெல்த் இன்சூரன்ஸ் அல்லது மெடிகெய்ட் வசதியை இழந்தால் என்ன ஆவார்கள்?
60 நாள் தான் கெடு
இதை விட பெரிய கொடுமை என்ன என்றால், ஒரு H-1B விசாதாரர், ஒரு வேலையில் இருந்து நீக்கப்பட்டால், அவர் அடுத்த 60 நாட்களுக்கும் இன்னொரு முழு நேர வேலையைத் தேடிக் கொள்ள வேண்டும். அதோடு வேலை இழந்தவர்களுக்கான சலுகைகளையும் (Unemployment Benefit) பெற முடியாது என்கிறது Huffington Post பத்திரிகை. அப்படி வேலை இல்லையா... பொட்டி படுக்கை எல்லாம் கட்டிக் கொண்டு ஊர் பக்கம் வந்து சேர வேண்டியது தான் ஒரே வழியாம்.
150 அழைப்புகள்
அமெரிக்காவிலேயே மனித வள மேம்பாட்டுத் துறை கம்பெனியை நடத்திக் கொண்டிருக்கும் டான் நந்தன் (Dan nandan) என்பவர் H-1B விசாதாரர்களின் சிரமங்களைச் சொல்கிறார். "முன்பு எல்லாம், H-1B விசாதாரர்கள், மாதம் 2 - 3 பேர் தான் வேலை கேட்டு அழைப்பார்கள். ஆனால் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 150 H-1B விசாதாரர்கள், வேலை கேட்டு அழைத்து இருக்கிறார்கள்" என பகீர் கிளப்புகிறார்.
20 - 25% பேர் காலி
அமெரிக்காவில் H-1B மூலம் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களில், சுமாராக 20 - 25 சதவிகிதம் பேர், இந்த கொடிய கொரோனா வைரஸ் பெரும் தொற்று நோயால், தங்களின் வேலையை இழக்க அதிக வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார் என்றால் அமெரிக்க பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை புரிந்து கொள்ள முடிகிறது.
பிரச்சனைகள் பட்டியல்
1. H-1B விசாதாரர்கள் லே ஆஃப் செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது, அப்படி லே ஆஃப் செய்யப்பட்டால் நிறுவனங்கள் வழங்கிக் கொண்டிருக்கும் ஹெல்த் இன்சூரன்ஸ் வசதி கிடைக்காது.
2. H-1B விசாதாரர்கள் மத்திய அரசின் மெடிகெய்ட் (Medicaid) திட்டத்திலும் பலன் அடைய முடியாது.
3. அரசின் வேலை இழந்தவர்களுக்கான சலுகைகளையும் பெற முடியாது.
4. அடுத்த 60 நாட்களுக்குள் இன்னொரு வேலையை தேடிக் கொள்ள வேண்டும். ஆனால் கொரோனா கோரத்தால் அடுத்த 2 மாத காலத்துக்குள் இன்னொரு நல்ல வேலையில் சேர்வது தற்போதைக்கு மிக மிகச் சிரமம்.
பெட்டிஷன்
இந்த பிரச்சனையை எதிர்த்து, 60 நாட்களாக இருக்கும் கெடு காலத்தை 180 நாட்களாக அதிகரிக்கச் சொல்லி, வெள்ளை மாளிகையில் ஒரு பெட்டிஷன் போட்டு இருக்கிறார்களாம். இந்த பெட்டிஷனுக்கு சுமார் 45,000 கையெழுத்துக்கள் கிடைத்து இருக்கிறதாம். இது வரும் ஏப்ரல் 18, 2020-க்குள் 1,00,000 கையெழுத்துக்களாக அதிகரிக்க வேண்டும். அப்போது தான் வெள்ளை மாளிகை ஏதாவது பதில் கொடுக்கும்.
அந்த பெட்டிஷனைக் காண இந்த் அலிங்கை க்ளிக் செய்யவும்
அமெரிக்க அரசுக்கு ஒரு வேண்டுகோள்
அமெரிக்கர்களின் உயிரைக் காக்க, இந்தியாவிடம் இருந்து ஹைட்ரோகுளோரோகுவின் (hydrochloroquine) மருந்துகளை வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் அங்கு இருக்கும் இந்தியர்களுக்கு உதவ முடியாது என்றால் என்ன நியாயம்? அமெரிக்கன், இந்தியன் என பாகுபாடு பார்க்கும் நேரமல்ல இது, மனிதர்களை அரவணைத்து பாதுகாக்க வேண்டிய வரலாற்றுத் தருணம் இது. அதை ட்ரம்பும், அமெரிக்க அரசும் புரிந்துகொள்வார்கள் என நம்புவோம்.