புனே: இந்தியாவில் ஐடி சார்ந்த வேலைகளைச் செய்பவர்களில் பெரும்பாலான ஊழியர்களுக்கு அமெரிக்காவின் ஆன் சைட் என்கிற கனவு இருந்து கொண்டே இருக்கும்.
அப்படிப்பட்ட அமெரிக்க பயணத்துக்கு, குறிப்பாக ஐடி துறையில் ஆன்சைட் செல்ல இந்த H1B விசாக்களை வாங்க வேண்டி இருக்கிறது.
பாரக் ஒபாமா பதவிக்குப் பின் எப்போது ட்ரம்ப் வந்தாரோ அன்றில் இருந்து இந்தியர்களுக்கு இந்த H1B விசா கிடைப்பதில் இருக்கும் சிக்கல்களும் பிரச்னைகளும் பல மடங்கு அதிகரித்துவிட்டது.
புதிய வழிமுறைகள்
இந்திய ஐடி நிறுவனங்களை அதிகம் பாதிக்கும் இந்த H1B விசா வழங்கும் வேலைகளை, அடுத்தடுத்த ஆண்டுகளில் எப்படி வழங்க வேண்டும் என்கிற விதிகளை மாற்றும் வேலையில் கடைசி கட்டத்தில் இருக்கிறது அமெரிக்க அரசு. கடந்த வாரத்தில் தான், அமெரிக்காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி துறை வழங்கிய வழிமுறைகளை ஆய்வு செய்து முடித்துவிட்டதாகச் சொன்னது அமெரிக்க அரசுத் தரப்பு. புதிய வழிமுறைகள் படி, ஒரு ஐடி நிறுவனம் யாருக்கு ஸ்பான்சர் செய்து அமெரிக்கா அனுப்ப இருக்கிறதோ அந்த நிறுவனம் எந்த வித விசா கட்டணங்களையும் செலுத்த வேண்டாம்.
கட்டணம் வேண்டாம்
கட்டணம் செலுத்தாமல் நிறுவனங்கள் பதிவு செய்து கொள்ள வழி வகை செய்கிறது புதிய வழிமுறைகள். அதன் பின், ஏற்றுக் கொண்ட விண்ணப்பங்களில், லாட்டரி முறையில் H1B விசாக்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்களாம். H1B விசா வழங்கும் நடைமுறைகள் வெளிப்படைத் தன்மையோடு இல்லை எனவும், H1B விசா வழங்கும் நடைமுறைகள் அமெரிக்க ஐடி நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாகவும் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் வருத்தங்களைச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
இந்திய தரப்பு
சமீப காலங்களாக இந்திய ஐடி நிறுவனங்கள் அதிக அளவில் H1B விசாக்களுக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்படுவதைப் பார்க்க முடிந்தது. ட்ரம்போ அமெரிக்கர்களுக்கு வேலைகளில் முன்னுரிமை கொடுக்கச் சொல்லிக் கொண்டு இருக்கிறார். இந்த சிக்கல்களுக்கு மத்தியில் தான் அமெரிக்க ஹோம் லேண்ட் செக்யூரிட்டி துறை இந்த புதிய வழிமுறைகளை வகுத்திருக்கிறார்களாம். குறிப்பாக H1B விசாக்களுக்கான கட்டணங்களையும் அதிகரிக்கப் போகிறார்களாம். இதுவரை H1B விசா கட்டண விவரங்கள் பொது வெளியில் சொல்லப்படவில்லை.
கருத்துக் கேட்பு
இந்த புதிய வழிமுறைகள் முழுமையாக உறுதி செய்யப்பட்ட பின் வரும் ஏப்ரல் 2020 முதல் அமல்படுத்தப்படலாம் என்கிறார்கள் அமெரிக்க தரப்பினர்கள். இந்த புதிய விசா வழிமுறைகள் அமல்படுத்தப்படுவதற்கு முன் பொது மக்களின் கருத்துக்கள் கேட்கப்படும் எனவும் சொல்லி இருக்கிறார்கள் அமெரிக்க குடியுரிமைத் துறை அதிகாரிகள். அமெரிக்க குடியுரிமைத் துறையினர் H1B விசா சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கருத்துக்களைக் கேட்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார் குடியுரிமை சட்ட நிறுவனமான Law companies Quest நிறுவனத்தின் நிர்வாக கூட்டாளி பூர்வி சோதானி.