இன்று நாம் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம். நினைத்த இடத்துக்குச் செல்ல முடியவில்லை. நிம்மதியாக பிடித்ததைச் சாப்பிட முடியவில்லை. நண்பர்களைச் சென்று பார்க்க முடியவில்லை.
தனிப்பட்ட முறையில் நம்மிடம் இருந்து கொரோன பறித்த விஷயங்கள் அவை. ஆனால் இன்று நம்மில் பலர் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை, நாளை இருக்குமா எனத் தெரியவில்லை. வியாபாரம் இல்லை, கூலித் தொழிலாளர்களுக்கு பிழைப்பு இல்லை.
இந்த 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் நம் கையில் சராசரியாக புழங்கிக் கொண்டிருந்த பணம் இன்று கையில் வரவில்லை. காரணம் கொரோனா. இதுவே ஒட்டு மொத்த உலகத்துக்கும் நடந்தால்..? அதற்குப் பெயர் தான் ரெசசன்.
ரெசசன்
ரெசசன் என்றால் என்ன? சுருக்கமாக, வர்த்தகம் மற்றும் தொழில் துறை நடவடிக்கைகள் சரியும் காலம் தான் ரெசசன். இரண்டு காலாண்டுகளுக்கு தொடர்ந்து ஜிடிபி சரிந்தால், அப்போது பொருளாதாரம் ரெசசனில் இருக்கிறது என்று சொல்வார்கள். இந்த ரெசசனால் என்ன ஆகும்? நம் மொழியில், வர்த்தகம் மற்றும் தொழில் துறை நடவடிக்கைகள் சரிந்தால் என்ன ஆகும்?
பயங்கர விளைவுகள்
1. தொழில் துறை வளர்ச்சி காணவில்லை என்றால் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்று பொருள்.
2. உற்பத்தி அதிகரிகக்வில்லை என்றால் பொருளுக்கான டிமாண்ட் இல்லை என்று பொருள்.
3. டிமாண்ட் இல்லை என்றால் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுத்து உற்பத்தி பெருக்க மாட்டார்கள் என்று பொருள்.
4. புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கவில்லை என்றால், மக்கள் கையில் பணம் இல்லை என்று பொருள் அல்லது பொருளாதாரத்தில் பணம் புழங்கவில்லை என்று பொருள்.
பொருளாதாரம்
1. பொருளாதாரத்தில் பணம் புழங்கவில்லை என்றால், பொருட்கள் விற்பனை அதிகரிக்காது.
2. விற்பனை அதிகரிக்கவில்லை, நுகர்வு அதிகரிக்கவில்லை என்றால், உற்பத்தியும் அதிகரிக்காது.
3. உற்பத்தி அதிகரிக்கத் தேவை இல்லை என்றால், வேலைக்கு ஆள் எடுப்பதும் குறையும் இந்த சுழற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இந்த ஒட்டு மொத்த சுழற்சியை ரெசசன் எனலாம்.
ரெசசன் பக்க விளைவுகள்
1. நிறைய ஊழியர்கள் லே ஆஃப் செய்யப்படுவார்கள்.
2. புதிய தொழில் விரிவாக்கங்கள் எல்லாம் தள்ளிப் போகும். புதிதாக கடன் வாங்க பயப்படுவார்கள்.
3. கம்பெனிகளுக்கு போதுமான வியாபாரம் நடக்காது, எனவே சம்பள உயர்வுகள் கூட மந்தமாக இருக்கும்.
4. இந்தியா போன்ற வளரும் நாடுகளில், புதிய முதலீடுகள் செய்யமாட்டார்கள்.
5. வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்கள் செலுத்த முடியாமல் தவிப்பார்கள் கடன் வாங்கி கம்பெனி நடத்துபவர்கள்.
6. அரசு கம்பெனிகளுக்கு நிறைய உதவ வேண்டி இருக்கும். அரசுக்கே வரி பற்றாக்குறை ஏற்படலாம். இப்போது அப்படி ஒரு கடுமையான ரெசசனைத் தான் உலக சந்திக்க இருக்கிறது.
ஐ எம் எஃப் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன்பே, உலக பொருளாதாரம் மந்த நிலையில் தான் இருந்தது. இப்போது இந்த கொரோனா வைரஸால் உலக பொருளாதாரம் கடுமையான ரெசசனை (Severe Recession) சந்திக்கப் போகிறது" என எச்சரித்து இருக்கிறார் சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் (IMF) தலைவர் க்ரிஸ்டாலினா ஜார்ஜிவா (Kristalina Georgieva).
அரசாங்கங்கள்
இந்த கடுமையான ரெசசனால், வளரும் நாடுகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களில், கொள்கை முடிவு எடுக்கும் அரசாங்கங்கள், மோசமான சவால்களை (Daunting Challenges) சந்திக்க வேண்டி இருக்கும் எனவும் எச்சரித்து இருக்கிறார் சர்வதேச பன்னாட்டு நிதியத்தின் தலைவர் க்ரிஸ்டாலினா ஜார்ஜிவா.
தவிர்க்க முடியாது
அதோடு, சர்வதேச பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வங்கியின் வளர்ச்சி கமிட்டி கூட்டத்தில் "இந்த 2020-ம் ஆண்டின் முதல் அரை ஆண்டில், மிகப் பெரிய பொருளாதார சரிவை தவிர்க்க முடியாது" எனவும் நெற்றியில் அடித்தாற் போல, தெளிவாக எச்சரித்து இருக்கிறார் க்ரிஸ்டாலினா ஜார்ஜிவா.