அமெரிக்காவில் பராக் ஒபாமா அதிபராக இருக்கும் போது அமெரிக்காவிற்கு முறையற்ற வகையில் குடியேறிய குழந்தைகளின் நலன் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்த டாகா என அழைக்கப்படும் Deferred Action for Children Arrival திட்டம் நிறைவேற்றப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் குழந்தைகளாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு இங்க வேலை செய்யும் உரிமை கொடுக்கப்பட்டது.
இதன் வாயிலாகப் பல ஆயிரக்கணக்கான இந்தியர்களும் பிற நாட்டவர்களும் நன்மை அடைந்தனர். இத்தகைய திட்டத்தைத் தான் டொனால்டு டிரம்ப் முழுமையாக நீக்க உத்தரவிட்டுள்ளார். அதுமட்டும் அல்லாமல் குடியேறிவர்களைத் தற்போது அமெரிக்காவை விட்டு வெளியேற்றவும் முடிவு செய்துள்ளது டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு.
இந்தியர்கள்
டாகா திட்டத்தின் வழியாக முறையா அமெரிக்காவிற்குள் குடியேறிய பல ஆயிரக்கணக்கான இந்தியர்களின் குழந்தைகள் தற்போது சிறந்த கல்வியுடன், பல துறைகளில் பணியாற்றி வருகிறார்.
இந்தக் கல்வியும், பணியும் கிடைத்து அமெரிக்காவில் சிறப்பான வாழ்க்கையை அமைத்துள்ள பல இந்திய குழந்தைகளுக்கும் முக்கிய அஸ்திவாரமாக விளங்கியதே இந்த டாகா திட்டம் தான்.
ஜெப் செஷன்ஸ்
இந்நிலையில் ஒபாமா ஆட்சியில் அமெரிக்காவில் இருக்கும் பிற நாட்டு மக்கள் அதிகளவில் வரவேற்பை பெற்ற இந்த டாகா திட்டம் வருகிற மார்ச் 2018 உடன் முழுமையாக நீக்கப்பட உள்ளது என அமெரிக்க அட்டார்னி ஜெனரல் ஜெப் செஷன்ஸ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
8,00,000 பேர்
இத்திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 8,00,000 பேர் பயன் அடைந்துள்ளனர். அதுமட்டும் அல்லாமல் இத்திட்டத்தின் கீழ் புதிய விண்ணப்பங்களைப் பெறுவதையும் செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தியுள்ளது டிரம்ப் அரசு.
இத்திட்டம் 2012ஆம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
20,000 இந்தியர்கள்
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 20,000 இந்தியர்கள் வேலை செய்ய அனுமதி பெற்று இருக்கலாம் என South Asian Americans Leading Together என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
வெளியேற்றம்
இத்திட்டத்தை முழுமையாக நீக்கப்பட்டதன் மூலம் இந்த 8,00,000 பேர் அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்படலாம் எனச் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்தச் செய்திகள் இந்தியர்கள் மத்தியில் பெரிய மன வருத்தம் அளித்துள்ளது.
கட்டுப்பாடுகள்
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்ய 15 ஜூன் 2012 ஆம் தேதியில் 31 வயதிற்குக் குறைவாக இருக்க வேண்டும். அதேபோல் 16 வயதிற்கு முன்னரே அமெரிக்கா வந்திருக்க வேண்டும். இல்லையெனில் 2007 முன்னதாகவே வந்திருக்க வேண்டும் என்பது டாகா திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்ய அடிப்படை தகுதிகளாகும்.
இத்திட்டத்தின் கீழ் நன்மை அடைந்தவர்கள் தற்போது 15 முதல் 36 வயதுடையவர்களாக இருப்பார்கள்.
டிரம்ப்
அமெரிக்க நாட்டின் அதிபராகப் பதவியேற்றிய நாள் முதல் டொனால்டு டிரம்ப் அமெரிக்கா அல்லாத பிற நாட்டவர்களை வெளியேற்றுதிலும், இவர்களின் கையில் இருக்கும் வேலைவாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு அளிக்க வேண்டும் என்று எண்ணத்துடன் பிற நாட்டவர்களுக்குச் சாதகமாக இருக்கும் அனைத்து திட்டத்தையும் நீக்கி வருகிறார் டிரம்ப்.
இதில் அதிகம் பாதிக்கப்படுவது இந்தியர்கள் என்பது தான் சோகமான விஷயம்.