சும்மாவே இருந்தால் எப்படி சம்பாதிப்பது? சும்மா இருந்தால் என்ன செய்வது? ஜப்பானில் வசிக்கும் ஒரு நபர் சும்மாவே இருப்பதாக சம்பளம் வாங்குகின்றார்.
இதில் கொடுமை என்னவெனில் இவரின் இந்த சேவைக்கு ஓரு வாடிக்கையாளர் பட்டாளமும் இருக்கிறது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த ஷோஜி மோரிமோட்டோ என்ற நபர் புதிய சேவை முயற்சியாக, ஒரு சுய தொழிலை உருவாக்கியுள்ளார்.
என்ன வேலை?
அதன் படி அவரின் சேவைக்கு தேவைப்படுபவர்கள் அவரை வாடகைக்கு புக் செய்து கொள்ளலாம். அவர் சாப்பிடுவது, குடிப்பது மற்றும் கருத்து சொல்வதை தவிர வேறு எதுவும் செய்ய மாட்டார். கடந்த 2018ம் ஆண்டே இதற்காக ஒரு ட்விட்டர் கணக்கினை ஆரம்பித்து, அதன் மூலம் சேவையும் செய்யத் தொடங்கியுள்ளார்.
என்ன தொழில்?
மோரிமோட்டோவின் இந்த செயல் பலருக்கும் சலிப்பூட்டுவதாக இருந்தாலும், அவருக்கு ஒரு புறம் ஆதரவும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இன்று அவருக்கு 2,50,000 பேர் தொடருகின்றனர்.
ஆரம்பத்தில் இவரின் நண்பர்கள், குடும்பத்தில் எதுவுமே வேலை செய்யாமல் சும்மா இருக்கிறார் என அடிக்கடி கூறி வந்துள்ளனர். ஆனால் பின்னாளில் இதுவே இவரின் தொழிலாக மாறும் என ஒருவரும் நினைத்திருக்க மாட்டார்கள்.
என்னென்ன சேவைகள்
இவ்வாறு இவர் சேவை செய்ய தொடங்கியபோது, பலரிடம் சில வேலைகளை செய்ய முடியாது என்றும் தவிர்த்துள்ளார்.குறிப்பாக வீட்டை சுத்தம் செய்வது, துணி தேய்ப்பது, கேலி செய்வது, ஆடையின்றி போஸ் கொடுப்பது போன்றவற்றை மறுத்துள்ளார். இவர் செய்த சேவைகளில் தனியாக ஷாப்பிங் செல்பவர்களுடன் உடன் செல்வது, தனியாக பிறந்த நாள் கொண்டாடுவது, உணவகம் செல்வது என பல சேவைகளும் அடங்கும்.
கட்டணம் எவ்வளவு தெரியுமா?
இதில் நம்ப முடியாத விஷயம் என்னவெனில், இவரின் இந்த சேவையை சம்பளம் கொடுத்து பெற இதுவரையில் கிட்டத்தட்ட 3000 கோரிக்கைகள் வந்துள்ளனவாம். எனினும் இவர் ஒரு சேவைக்கு 69 பவுண்டுகள் ( இந்திய மதிப்பில் 6641 ரூபாய்) கட்டணமாக வசூலிப்பதாகவும், அதேபோல 1 நாளைக்கு 3 கோரிக்கைகள் மட்டுமே எடுத்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
கற்றுக் கொண்டது இது தான்
இவரின் சேவையில் ஹெலிகாப்டர் பயணம், தற்கொலைக்கு முயன்ற நபருடன் மருத்துவமனையில் இருந்தது உள்ளிட்ட சேவைகளும் அடக்கம். இந்த வேலையில் இருந்து நாம் யாரையும் ஜட்ஜ் செய்ய கூடாது என்றும், மனதளவில் தனியாக இருப்பவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபம் இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.