ஏதென்ஸ்: கிரீஸ் தனது நிதி நெருக்கடியை குறைக்கவும், புதிய நிதியுதவி பெறவும் புதிய வரித் திட்டங்களை அந்நாட்டு பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ரா அறிவித்துள்ளார்.
திங்கட்கிழமை ஏதென்ஸ் நகரில் ஐரோப்பிய கவுன்சில், சென்டரல் வங்கி மற்றும் ஐரோப்பிய அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த முக்கியக் கூட்டத்தில் 11 பக்க அறிக்கையைச் சமர்ப்பித்தார் பிரதமர் அலெக்ஸிஸ் சிப்ரா.
அந்த அறிக்கையில் அடுத்தச் சில ஆண்டுகளுக்கு கிரீஸின் பொருளாதார நிலைப்பாடு குறித்தும், நிதி திரட்டுவதற்கான திட்டங்கள் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
ஒய்வுதியம்
மக்களுக்கு அளிக்கப்படும் ஒய்வுதியத்தைக் குறைக்க மறுத்த கிரீஸ் அரசு, ஒய்வுதிய பிடித்தத்தில் சில முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.
இதன் படி ஒய்வுதிய தொகையில் தேசிய சுகாதாரத்திற்கான பிடித்தத்தை 4 சதவீதத்தில் இருந்து 5% ஆக உயர்த்தியுள்ளது. அதேபோல் உப பென்ஷன்களில் சுகாதார பிடித்தத்தை 5% ஆகவும், சமுகப் பாதுகாப்புக்காக 3.5% பிடித்தத்தையும் அறிவித்துள்ளது.
வாட் வரி
கிரீஸ் அரசு வாட் வரியை 3 நிலைகளில் விதிக்கிறது 23%, 13% மற்றும் 6%. இந்நிலையில் ஐரோப்பிய கவுன்சில் அறிவுரைப்படி 23% வரி விதிக்கப்படும் வாட் வரியில் சேவைகள் எண்ணிக்கையைக் கிரீஸ் உயர்த்தியுள்ளது.
அதேபோல் மின்சாரம், ஹோட்டல், உணவு பொருட்களின் மீது விதிக்கப்படும் 23% வரியை 13% ஆகக் குறைத்துள்ளது.
மேலும் மருந்து மற்றும் புத்தகங்களின் மீது விதிக்கப்படும் 13% வரியை 6% சதவீதமாக அறிவித்துள்ளது.
பணக்காரர்களின் மீதான வரி
50,000 யூரோகளுக்கும் அதிகமாகச் சம்பாதிக்கும் மக்களுக்கான தேசிய ஒற்றுமைக்கான வரி 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கார்பரேட் மற்றும் ஆடம்பர வரி
1. 500,000 யூரோக்களுக்கும் அதிகமாக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களின் மீது 12 சதவீத வரி
2. நீச்சல் குளங்கள், விமானம், ஆடம்பர கார்கள் மற்றும் தனியார் படகுகள் ஆகியவற்றின் மீதான வரியை உயர்த்தியுள்ளது.
3. சூதாடும் ஸ்லாட் மெஷின்களின் மீதான வரியும் கிரீஸ் உயர்த்தியுள்ளது.
தனியார்மயமாக்கல்
கிரீஸ் அரசு வைத்துள்ள நிறுவன பங்குகளின் விற்பனை செய்வதன் மூலம் அதிகளவிலான நிதி திரட்ட முடிவு செய்துள்ளது. இதன் படி கிரீக் டெலிகாம் நிறுவனத்திலிருந்து முழுமையாக பங்கு விலக்கம் செய்கிறது.
பாதுகாப்புத் துறை
பாதுகாப்பு துறைக்குச் செலவிடப்படும் தொகையை 200 மில்லியன் யூரோ வரை குறைக்கத் திட்டமிட்டுள்ளது கிரீஸ்.
பிற திட்டங்கள்
அரசு பத்திரங்கள் விற்பனை, புதிய முதலீடுகள் பெறுவதன் மூலம் நாட்டின் நிதி நெருக்கடி அளவை குறைக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது கிரீஸ்.