ஏன் திடீரென குவைத் அரசு இந்த அதிரடி முடிவை எடுத்து இருக்கிறது. அப்படி என்ன எல்லாம் ஷட் டவுன் ஆகப் போகிறது. என்ன காரணம் என்பதைத் தான் விரிவாகப் பார்க்கப் போகிறோம்.
குவைத் அரசு ஒரு குட்டி எண்ணெய் வள அரசு. உலகத்தையே அலற விட்டுக் கொண்டிருக்கும், கொரோனா வைரஸ் இந்த குட்டி நாட்டையும் விட்டு வைக்கவில்லை.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கத் தான் குவைத் அரசு இந்த திடீர் அதிரடி முடிவை எடுத்து இருக்கிறது. சரி எதற்கு எல்லாம் பூட்டு போட்டு இருக்கிறார்கள்..?
விமான சேவை
குவைத்தில் இருந்து மற்ற நாடுகளுக்கோ அல்லது மற்ற நாடுகளில் இருந்து குவைத் நாட்டுக்கோ வரும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்து இருக்கிறார்கள். இந்த ரத்து மார்ச் 13, 2020 வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வர இருக்கிறதாம். ஆனால் இந்த ரத்து சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது. பயணிகள் விமானங்களுக்கு மட்டும் தானாம்.
குவைத் மக்கள்
அதே போல குவைத் மக்களை, குவைத் நாட்டுக்கு அழைத்து வரும் பயணிகள் விமானங்களுக்கும் தடை இல்லை என அரசு தரப்பில் இருந்தே செய்திகள் வந்து இருக்கிறது. அதோடு சந்தைகளில், உணவகங்களில், க்ளப்களில் மக்கள் கூடக் கூடாது என்றும் சொல்லி இருக்கிறது குவைத் அரசு.
2 வார விடுமுறை
இதனைத் தொடர்ந்து கொரோன வைரஸ் பரவலைத் தடுக்க, ஊழியர்களுக்கு 2 வாரம் முழு விடுமுறை கொடுத்து இருக்கிறது குவைத் அரசு. ஊழியர்களுக்கான விடுமுறை மார்ச் 12, 2020 வியாழக்கிழமை தொடங்கி மார்ச் 26, 2020 வியாழக்கிழமை வரை இருக்குமாம். அதற்குப் பின் மீண்டும் பணிக்கு அழைப்பார்களா அல்லது விடுமுறை நீடிக்குமா என்பதை அரசு முடிவு செய்யும்.
குவைத்தில் கொரோனா
இந்த குட்டி எண்ணெய் வள நாட்டில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமாராக 72-ஐத் தொட்டு இருக்கிறது. குவைத்தைச் சுற்றி உள்ள சவுதி அரேபியா, ஈராக், ஈரான் ஆகிய நாடுகளில் கொரோனா பரவி இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே தான் குவைத் அரசு தன்னை பாதுகாத்துக் கொள்ள இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.
கொரோனா கோரம்
அல்ஜசீரா பத்திரிகைச் செய்தியின் படி, கத்தாரில் 262 பேர், பஹரைனில் 77 பேர், ஈரானில் 9,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஈரானின் முக்கிய தலைவர்களுக்கே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் சுமார் 354 பேர் இந்த கொரோனாவால் மரணம் அடைந்து இருக்கிறார்கள்.