பாகிஸ்தான்: நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இன்று வரை பொருளாதாரம் நிலை பெற்றதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்த அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தலையை பிய்த்துக் கொள்கிறார்.
பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய வழி முறைகளைச் செயல்படுத்த எத்தனித்துக் கொண்டு இருக்கிறார். ஆனால் பெரிய மாற்றங்கள் நடந்ததாகத் தெரியவில்லை.
பாகிஸ்தான் பொருளாதார பிரச்னையில் ஒரு பெரிய சோதனையாக ஒரு லிட்டர் பாலின் விலை சுமாராக 140 பாகிஸ்தானிய ரூபாய்க்கு விற்பனை ஆகி இருக்கிறது. அதுவும் மொஹரம் பண்டிகை அன்றே இந்த கொடுமை பாகிஸ்தானில் நடந்தேறி இருக்கிறது.
மதிப்பு
இந்தியாவின் ஒரு ரூபாய் என்பது 2.18 பாகிஸ்தானிய ரூபாய்க்குச் சமம். ஆக பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பாலின் விலை 140 ரூபாய் என்றால் இந்தியாவில் சுமார் 65 ரூபாய். இதில் வருத்தப்பட வேண்டிய ஒரு கூடுதல் விஷயம் என்னவென்றால் பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலையே 113 ரூபாய் தான். ஒரு லிட்டர் டீசலின் விலை 91 ருபாய் தானாம். ஆனால் பச்சைக் குழந்தைகள் எல்லாம் குடிக்கும் ஒரு லிட்டர் பாலின் விலை மட்டும் 140 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆகி இருக்கிறது.
கராச்சி
பாகிஸ்தானின் கராச்சி பகுதி முழுக்க ஒரு லிட்டர் பாலின் விலை சுமாராக 120 முதல் 140 ரூபாய் வரை தேவையைப் பொறுத்து விற்பனை ஆனதாம். அதற்கு மொஹரம் பண்டிகை அன்று ஏற்பட்ட கூடுதல் தேவை எனவும் கராச்சி பகுதியில் பால் விற்பனை செய்யும் கடை உரிமையாளர்கள் சொல்லி இருக்கிறார்கள். பொதுவாக மொஹரம் பண்டிகை அன்று நடக்கும் புனித ஊர்வலத்தில் பங்கேற்பவர்களுக்கு பழச்சாறு, பால், குளிர்ந்த நீர் போன்றவைகளைக் கொடுப்பது வழக்கமாம். அதனால் தான் பாலின் தேவையும் அதிகரித்து இருக்கிறதாம்.
வாடிக்கையாளர்
நாங்கள் ஒவ்வொரு வருடத்தின் மொஹரம் பண்டிகை காலத்திலும் புனித ஊர்வலம் வரும் மக்களுக்கு பால் கொடுப்பது வழக்கம். இந்த முறை பாலின் விலை அதிகரித்தாலும் பரவாயில்லை என கூடுதலாக செலவு செய்து பால் கொடுத்தோம். என் வாழ்நாளில் ஒரு லிட்டர் பாலின் விலை இந்த அளவுக்கு அதிகரித்து நான் பார்த்ததே இல்லை எனச் சொல்லி வருத்தப்படுகிறார் அந்த பாகிஸ்தானியர்.
94 ரூபாய் தான்
கராச்சியில் பால் விலையை காட்டுப்பாட்டில் வைக்க வேண்டிய அதிகாரி இஃப்திகர் சல்வானி இந்த பால் விலை ஏற்றத்தைக் குறைக்கவோ அல்லது தடுக்கவோ எந்த வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என புகார்கள் எழுந்து இருக்கின்றன. கராச்சி நகரத்தில், அதிகாரபூர்வமாக ஒரு லிட்டர் பாலின் விலை 94 ரூபாய்க்கு தான் விற்க வேண்டுமாம். ஆனால் 140 ரூபாய்க்கு மேல் எல்லாம் விற்கப்பட்டு இருக்கிறது என்றால் அரசு என்ன செய்து கொண்டிருந்தது எனத் தெரியவில்லை..!