முகமத் பின் சல்மான் ... இந்தப் பேரைக் கேட்டாலே சவூதி அரேபியாப் பாலைவனம் முழுவதும் அதிர்கிறது. முகமத் பின் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத் என்னும் முழுப் பெயர் கொண்ட முகமத் பின் சல்மான் தான் சவூதி அரேபியாவின் தற்போதைய பட்டத்து இளவரசர்.
சவூதி அரேபியாவின் அரசரும் தன்னுடைய தந்தையுமான கிங் சல்மானைப் பின்னாலிருந்து இயக்கும் சக்தியாக இருப்பவர் இளவரசர் முகமத் பின் சல்மான்.
சூப்பர் பவா் நாடாகச் சவூதி
மதப் பழமைவாதமும், எண்ணைய் வளமும் மண்டிக் கிடக்கும் சவூதி அரேபியாவைத் தன்னுடைய முற்போக்கான சீர்திருத்த நடவடிக்கைகளின் மூலமாகச் சூப்பர் பவா் நாடாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் இளவரசர் சல்மான். அரசியல், பொருளாதாரம், மதம் சார்ந்த சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் முகமத் பின் சல்மான் உலகத்துக்குச் சொல்லும் செய்தி இதுதான்... 2030ஆம் ஆண்டுக்குள் சவூதி அரேபியாவை உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுள் ஒன்றாக மாற்றுவது என்பதுதான் அச்செய்தி.
பெண் சுதந்திரம்
மதம்சார்ந்த கண்காணிப்பாளர்களின் (Religious Police) அதிகாரத்தைக் குறைத்தது, பெண்களைப் பொது இடங்களில் வாகனம் ஓட்ட அனுமதித்தது, பெண்கள் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கும் இசை நிகழ்ச்சிகளை நடத்தவும் அனுமதி, விளையாட்டுப் போட்டிகளை நேரடியாகக் கண்டுகளிக்க அனுமதி, அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எனப் பெண்ணுரிமைப் போராளியாகவே இளவரசர் சல்மான் மாறிவிட்டார்.
எதிர்ப்புகளே இல்லை..
வளைகுடா நாடுகளின் நவீன வரலாற்றை முன்னெடுத்துச் செல்லும் நாயகனாகத் திகழும் இளவரசர் சல்மானின் செயல் வேகத்தில் அவரை எதிர்ப்பவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் அல்லது ஒதுங்கிக் கொள்கின்றனர்.
முதலீட்டுச் சந்தை
MBS எனச் சுருக்கமாக அழைக்கப்படும் முகமத் பின் சல்மான், சர்வதேச முதலீட்டாளர்களின் கவனத்தைச் சவூதி அரேபியாவை நோக்கித் திருப்பி விடுவதில் முழுக் கவனம் செலுத்தி வருகிறார். பெட்ரோலிய வளத்தை மட்டுமே சார்ந்திருக்கும் சவூதியின் பொருளாதாரத்திற்குப் புதுப் பொலிவூட்ட மெனக்கெட்டுச் செயலாற்றுகிறார்.
முத்தாய்ப்பான உரை
"இசுலாம் போதிக்கும் அன்பு, அமைதி, சகிப்புத்தன்மையுடன் கூடிய சகோதரத்துவ உணர்வுடன் வாழ சவூதி அரேபியக் குடிமகன்கள் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர்." என்னும் வகையில், கடந்த ஆண்டில் ரியாத் நகரில் நடைபெற்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் கூடியிருந்த மாநாட்டில் இளவரசர் சல்மானின் முத்தாய்ப்பான உரை அவருடைய மனப்பக்குவத்தைக் காட்டுவதாய் அமைந்திருந்தது.
மதத் தீவிரவாத எதிர்ப்பு
"சவூதி மக்கள் தொகையில் 70% -க்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். அடுத்த 30 ஆண்டுகளுக்கு எதிர்மறைச் சிந்தனைகளோடு போராடிக் கொண்டிருந்தால் இவர்களின் வாழ்வில் ஒளியேற்ற முடியாது. இன்றே, இப்பொழுதே அவற்றை அழித்து ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்." என அதிரடியாக மதத் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியவர் இளவரசர் சல்மான்.
ஊழல்வாதிகள்
அதிகாரம் மிக்க மதகுருக்கள், அமைச்சர்கள், அரச குடும்பத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது 100 பில்லியன் டாலர் அளவுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவர்களை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்ததன் மூலம் தன்னுடைய துணிச்சலையும் அரசியல் தந்திரத்தையும் ஒருசேர நிரூபித்துள்ளார் இளவரசர்.
ராணுவக் கூட்டணி
இவருடைய ராணுவ நடவடிக்கைகள், மத்திய கிழக்கு நாடுகளில் குழப்பத்தையும் பதைபதைப்பையும் ஏற்படுத்தின. இசுலாமிய நட்பு நாடுகள் சிலவற்றோடு சேர்ந்து தீவிரவாதத்திற்கு எதிரான இராணுவக் கூட்டணியை அமைத்தார். இக்கூட்டணி மூலம், ஏமன் மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் மீது ராணுவத் தாக்குதல் தொடுத்தார். கத்தார் மீது பொருளாதாரத் தடை விதித்து அந்நாட்டைத் தனிமைப்படுத்த முயற்சித்தார். இது போன்ற நடவடிக்கைகளால் இவர்மீது மனித உரிமை மீறல்கள் தொடர்பான புகார்கள் அடுக்கடுக்காய் குவிந்து வருகின்றன.
இளம் தலைவர்
1985 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி பிறந்த இவர், ரியாத் நகரில் உள்ள கிங்சவூத் பல்கலைக் கழகத்தில் சட்டப்படிப்பு பயின்றார். கருப்புநிற தாடியும், தலைமுடியை மறைத்த பாரம்பரிய ஆடையுடன் எப்பொழுதும் வலம் வரும் இவருக்கு இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இளவரசர் பட்டம்
2017 ஆம் ஆண்டு ஜீன் 21 ஆம் நாளில் சவூதியின் பட்டத்து இளவரசராக முடிசூட்டப்பட்டார். அதுவரை பட்டத்து அரசராக இருந்த அவருடைய சகோதரர் முகமத் பின் நயீப் அப்பதவியிலிருந்து இறக்கப்பட்டார். இளவரசர் சல்மான் மன்னருக்கு அடுத்து இரண்டாம் நிலையில் அதிக அதிகாரம் படைத்தவராக உள்ளார்.
மதப் பழமைவாதம்
மதப் பழமைவாதம் மிகுந்த சவூதி அரேபியாவில் சமூகம், அரசியல், பண்பாடு, வாழ்க்கை முறை, பெண்ணுரிமை சார்ந்து நவீன மாற்றங்களைப் புகுத்துவது சற்றுக் கடினமான காரியம்தான்.
ஆனால் மதவாதிகளின் புலம்பல்களைப் பொருட்படுத்தாமல் பெரிய அளவிலான எதிர்ப்புகள் ஏதுமின்றி முன்நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார் இளவரசர் சல்மான்.
சினிமா
பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதித்ததோடு 35 ஆண்டுக்கு முன் திரையரங்குகள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையையும் நீக்கினார் இளவரசர் சல்மான். ஆணும் பெண்ணும் இணைந்த கொண்டாட்டங்களுக்கும் சவூதியில் இப்பொழுது வழி பிறந்திருக்கிறது என்றால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.
மதப் பழமைவாதிகளின் தொகுப்புக்கு மாற்றாக, இறைத் தூதர் முகமத் நபி அவர்களின் பொன்மொழிகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பதற்காக இஸ்லாமிய மையம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார் இளவரசர் சல்மான்.
ஊழல் எதிர்ப்பு
ஊழல் எதிர்ப்புக் கமிஷனின் தலைவராக உள்ள சல்மான், தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி மிக உயர்நிலையில் உள்ளவர்களையும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளார்.
அச்சம்
இப்படி நாட்டின் மிகப்பெரும் அதிகார மையமாக உருவெடுத்துள்ள இளவரசர் சல்மானின் நடவடிக்கைகள், விரும்பத்தகாத எதிர்விளைவுகளை ஏற்படுத்தி நாட்டின் ஸ்திரத்தன்மைக்குப் பாதிப்பு வந்துவிடும் என்கின்ற அச்ச அலைகள் சவூதியில் எழாமல் இல்லை.
இளவரசர் சல்மானின் தன்னிச்சையான செயல்பாடுகளும் ராணுவ பலம் கொண்டு பிற நாடுகளை அச்சுறுத்த நினைப்பதும் சவூதி அரேபியாவுக்கு எதிர்வினையாக அமையக்கூடும் என்கின்ற பயம் முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இளம் அதிகாரிகளுக்குப் பொறுப்பு
கடந்த பிப்ரவரி மாதம், திடீரெனத் தரைப்படை மற்றும் விமானப் படையைச் சேர்ந்த உயரதிகாரிகளை நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாகத் தனக்கு விசுவாசமுள்ள இளம் அதிகாரிகளுக்கு அப்பொறுப்புகளை வழங்கி பாதுகாப்பு துறையைப் புதுமைப்படுதினார் இளவரசர் சல்மான்.
ஓரே இலக்கு
"தொலைநோக்குத் திட்டம் 2030" என்கின்ற அறைகூவலோடு சவூதி அரேபியாவின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு சமூகம் மற்றும் பொருளாதார மாற்றங்களை முன்னெடுத்துச் செல்கிறார் இளவரசர் சல்மான்.
இளவரசர் சல்மான்
நாட்டின் பாதுகாப்பு அமைச்சராகவும், பொருளாதார வளர்ச்சிக் கவுன்சிலின் தலைவராகவும் உள்ள இளவரசர் சல்மான் தான் நினைத்ததை நடத்திக் கொண்டிருக்கிறார்.
Aramco எண்ணெய் நிறுவனம்
சவூதி அரேபியா அரசின் மிகப்பெரும் எண்ணெய் நிறுவனமான Aramco என்னும் கம்பெனிக்குச் சொந்தமான 5% பங்குகளைப் பொதுமக்கள் வாங்குவதற்கு ஏற்ற வகையில் வெளியிடுவதற்கு இளரசர் சல்மான் திட்டமிட்டுள்ளார். அத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் உலகின் மிகப் பெரும் பங்கு வெளியீட்டு நடவடிக்கையாக அது அமையும்.
இப்படியாக இளவரசர் சல்மானின் அதிரடிகள் சரவெடியாய்த் தொடர்கின்றன.