டெல்லி: எச்-1பி விசா நடைமுறையில் அதிக கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால், இந்தியாவிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைக் காட்டிலும் அமெரிக்காவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கே அதிக அளவில் இழப்பு ஏற்படும் என்று இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைப்பான நாஸ்காம் அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
H-1B Visa முறையில் அதிக கட்டுப்பாடுகளை விதித்து அதன் மூலம் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்களின் வேலை வாய்ப்பை தடுத்து அதை அமெரிக்க இளைஞர்களுக்கு வழங்குவதால் அந்நிறுவனங்களின் வளர்ச்சியை பாதிக்கச் செய்வதோடு பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடும் என்றும் நாஸ்காம் எச்சரித்துள்ளது.
ஒருவேளை, இல்லை இல்லை, இந்திய தகவல் தொழில்நுட்ப இளைஞர்களின் சேவை எங்களுக்கு தேவையில்லை, நாங்கள் எங்கள் நாட்டு இளைஞர்களை மட்டுமே அமெரிக்க நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தி அழகு பார்ப்போம் என்று நீங்கள் நினைத்தால், அது கொள்ளிக்கட்டையை எடுத்து தன் தலையிலேயே சொறுகிக்கொள்வது போல் ஆகும் என்றும் நாஸ்காம் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
கண்ணை உறுத்திய எச்-1பி விசா
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் உயர் கல்வியை முடித்து டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற தகவல் தொழில்நுட்பத்துறை நிறவனங்களின் பணியாற்றி பின்னர் எச்-1பி விசா பெற்று அமெரிக்கா சென்று பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களைக் காட்டிலும் சற்று அதிகமாகவே இருந்தது. இது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் கண்ணை உறுத்தவே அதில் கட்டுப்பாடுகளை கொண்டு வரத் தொடங்கினார்.
நான் முடிவு பண்ணிட்டேன்
எச்-1பி விசா மறுக்கப்படுவதற்கு ட்ரம்ப் சொன்ன சொத்தைக் காரணம், இந்தியர்களால் தான் எம்மக்களுக்கு உருப்படியான எந்த வேலையையும் எங்களால் தர முடியவில்லை. எனவே உங்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பினை தட்டிப் பறித்துதான் எம்மக்களுக்கு வேலை அளிப்பதற்கு நான் முடிவெடுத்துவிட்டேன். ஏனென்றால், ஒரு வாட்டி நான் முடிவு பண்ணிட்டேன்னா, எம்பேச்ச நானே கேக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு அதிரடி காட்ட ஆரம்பித்தார்.
50 சதவிகிதம் மறுப்பு
ட்ரம்பின் இந்த அதகள நடவடிக்கையால் கடந்த 5 ஆண்டுகளில் எச்-1பி விசா வழங்குவது கிட்டத்தட்ட 21 சதவிகிதமாக குறைந்துவிட்டது. 2017ஆம் ஆண்டில் மட்டுமே சுமார் 43957 விண்ணப்பங்களுக்கும், 2018ஆம் ஆண்டில் 22429 விண்ணப்பங்களுக்கும் விசா மறுக்கப்பட்டுள்ளன. இதில் கொடுமையான விசயம் என்னவென்றால் 2017ஆம் ஆண்டைக் காட்டிலும் 2018ஆம் ஆண்டில் தான் சுமார் 50 சதவிகித விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இந்திய ஐடி நிறுவனங்கள் பாதிப்பு
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்துறையில் 2ஆம் இடத்தில் உள்ள இன்ஃபோசிஸ் அதிக அளவில் தன் ஊழியர்களை எச்-1பி விசாவில் அமெரிக்காவுக்கு அனுப்பி வருகிறது. ஆனால் ட்ரம்ப் அதிபரான பின்பு, கடந்த 2017-18ஆம் ஆண்டில் மட்டுமே இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 2122 எச்-1பி விசா விண்ணப்பங்களும், முதலிடத்தில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் 1896 விண்ணப்பங்களும், காக்னிசன்ட் நிறுவனத்தின் 32 சதவிகித விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சவக்குழி ரெடி பண்ணுங்க
இந்நிலையில் இந்தியர்களுக்கு தொடர்ந்து எச்-1பி விசா மறுக்கப்படுவது குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய நாஸ்காம் அமைப்பு, இந்தியர்களின் எச்-1பி விசா நிராகரிக்கப்படுவது என்பது அமெரிக்க அதிபர் அவருடைய கையாலேயே அமெரிக்க நிறுவனங்களுக்கு சவக்குழி தோண்டி புதைப்பதற்கு வழி செய்வது போல் உள்ளது என்று மறைமுகமாக எச்சரித்துள்ளது.
பன்னாட்டு அங்கீகாரம்
எச்-1பி விசா என்பது இந்திய தகவல் தொழில்நுட்பத்துறை இளைஞர்களின் திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம். இந்த அங்கீகாரம் என்பது பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் சேர்ந்து வழங்கியது என்பதையும் நாஸ்காம் சுட்டிக்காட்டியுள்ளது. உள்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை தரவுகளை சேமிப்பதற்காக, திறமையான ஆட்கள் அமெரிக்காவில் இல்லாததால் தான் வெளிநாடுகளில் இருந்து எச்-1பி விசாவில் அமெரிக்கா வந்து வேலையை திறமையாக முடித்துக்கொடுக்கிறார்கள்.
வர்த்தகப் போரை அதிகரிக்கும்
நிலைமை இப்படி இருக்கையில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறேன் பேர்வழி என்று எச்-1பி விசாவில் கைவைத்து 10 முதல் 15 சதவிகிதம் வரையிலும் தொடர்ந்து நிராகரிப்பது என்பது ஆபத்தான விசயம் என்றும் நாஸ்காம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. நாஸ்காம் வெளியிட்ட இந்த அறிக்கையானது ஏற்கனவே அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்றுவரும் வர்த்தகப் போரை மேலும் சூடாக்கும் வகையில் அமைந்துள்ளது.
நாஸ்காம் அதிருப்தி
எச்-1பி விசா தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதால் இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ போன்ற நிறுவனங்களின் ஆண்டு வருவாய் படிப்படியாக சரிந்து வருகிறது. மேற்கண்ட நிறுவனங்களின் முகமாக பார்க்கப்படும் நாஸ்காம் வெளியிட்டுள்ள இந்த அதிருப்தி அறிவிப்பானது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
உத்தரவு வரவில்லையே
எச்-1பி விசாக்களுக்கான அனுமதியை அதிகரிப்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். ஆனால் இது குறித்து முறையான அறிவுப்பு எதுவும் மேலிடத்தில் இருந்து எங்களுக்கு கிடைக்கவில்லை. அதிகாரபூர்வ அறிவிப்பு வந்த பின்பே இது குறித்து தெளிவான் முடிவை எடுக்க முடியும் என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.
மறைமுக எச்சரிக்கை
ஒருவேளை, இல்லை இல்லை, இந்திய தகவல் தொழில்நுட்ப இளைஞர்களின் சேவை எங்களுக்கு தேவையில்லை, நாங்கள் எங்கள் நாட்டு இளைஞர்களை மட்டுமே அமெரிக்க நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்தி அழகு பார்ப்போம் என்று நீங்கள் நினைத்தால், அது கொள்ளிக்கட்டையை எடுத்து தன் தலையிலேயே சொறுகிக்கொள்வது போல் ஆகும். அதோடு, கூடவே அமெரிக்க நிறுவனங்களின் வளர்ச்சியையும், லாபத்தையும் கெடுத்துவிடும். மேலும் அதனால் ஏற்படும் இழப்புகளும் அதிகமாக இருக்கும் என்றும் நாஸ்காம் மறைமுகமாக அமெரிக்காவை எச்சரித்துள்ளது.
வருவாய் இழப்பு ரூ.10.44 லட்சம் கோடி
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் பெரும்பாலான வருவாய் என்பது வடஅமெரிக்க சந்தையை மட்டுமே நம்பியுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் என்பது சுமார் 10.44 லட்சம் கோடி ரூபாய் ஆகும். ஒருவேளை அமெரிக்க பிடிவாதமாக H-1B Visa நடைமுறையை மேலும் இறுக்கினால் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்படும் என்பது மட்டும் திண்ணம்.