கடந்த சில வாரங்களாகவே மிக பரப்பரப்பாக பேசப்பட்டு வரும் விஷயங்களில் ஒன்று இலங்கை, பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி.
தற்போது இலங்கை பாகிஸ்தானை அடுத்து நேபாளமும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக இலங்கை பாகிஸ்தானை போலவே நேபாளத்தின் அன்னிய செலாவணி கையிருப்பும் கரைந்து வருகின்றது.
கடந்த மார்ச் மாத நிலவரப்படி, நேபாளின் அன்னிய செலவாணி கையிருப்பு வெறும் 975 மில்லியன் டாலராக குறைந்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலையில் 1175 மில்லியன் டாலராக இருந்தது. ஆக இதற்கிடையிலான 7 மாத காலகட்டத்தில் மட்டும் 200 மில்லியன் டாலர் அன்னிய செலாவணி குறைந்துள்ளது கவனிக்கதக்கது.
அன்னிய செலாவணி குறையாமல் இருக்க நடவடிக்கை
பொதுவாக அன்னிய செலாவணி என்பது ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு அம்சமாகும். இந்த விகிதம் ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்யும்போது அன்னிய செலாவணி கையிருப்பு குறையத் தொடங்குகிறது. அந்த வகையில் மேற்கோண்டு அன்னிய செலாவணி குறையாமல் இருக்க, நேபாளம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.
எதற்கெல்லாம் தடை
நேபாள அரசு சொகுசு கார்கள், ஆல்கஹால், புகையிலை மற்றும் பல சொகுசு பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. இது அன்னிய செலாவணி குறையாமல் இருக்க வழிவகுக்கும்.
நேபாள அரசின் இந்த அறிவிப்பில் அவசரகால வாகனங்கள் தவிர மற்ற வாகனங்களை இறக்குமதி செய்ய முடியாது. மேலும் 600 டாலர்களுக்கு மேல் விலையுள்ள மொபைல் போன்கள், ஆல்கஹால், புகையிலை பொருட்கள், பெரிய எஞ்சின் மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய முடியாது.
எப்போது முதல் நடைமுறை
இந்த தடை நடவடிக்கையானது ஜூலை நடுப்பகுதி வரையில் நடைமுறைக்கு வரும் இந்த தடையானது, இந்த ஆண்டில் இறுதியில் முடிவடையலாம்.
இதனுடன் பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், வைரங்கள் இறக்குமதி செய்வதையும் தடை செய்கிறது.
முக்கிய நிதி ஆதாரம்
இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் இல்லாமல், கிட்டதட்ட எல்லாவற்றையும் இறக்குமதி செய்யத் தேவையான வெளிநாட்டு நாணய கையிருப்பு, இன்னும் சில மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தில் வெளி நாட்டின் நாணயத்தின் முக்கிய ஆதாரங்கள் சுற்றுலா, வெளி நாட்டு ஊழியர்களிடமிருந்து பணம் அனுப்புதல் மற்றும் வெளி நாட்டு உதவி தான். கடந்த சில ஆண்டுகளாகவே கொரோனாவின் காரணமாக முடங்கியுள்ளது.
சுற்றுலா பயணிகளின் வருகை சரிவு
ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகள் வழக்கமாக இமயமலை நாட்டிற்கு வருகை தருகிறார்கள். ஆனால் கொரோனா வைரஸ் தொற்று நோய்களின் போது சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வீழ்ச்சி கண்டது. இது மேற்கொண்டு நேபாளத்திற்கு அழுத்தத்தினை கொடுத்தது.
வேலை நேரம் குறைப்பு
மேற்கொண்டு அதிகரித்து வரும் எண்ணெய் விலையானது நேபாளின் வெளி நாட்டு இருப்பில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இப்பிரச்சனையை கட்டுக்குள் வைக்க நேபாள் அரசு ஐந்தரை நாட்களில் இருந்து, 5 நாட்களாக வேலை நாட்களை குறைத்துள்ளது. எனினும் தற்போது கொரோனாவின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. மேலும் நாட்டில் இருந்த பணியாளர்கள் வெளி நாட்டிற்கு மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளனர்.