லார்ட்ஸ்: வரும் மே 30, 2019 முதல் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. இந்த உலக கோப்பைக்கான இறுதிப் போட்டி 14 ஜூலை 2019 அன்று நிறைவடைகிறது.
இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு நான்கு மில்லியன் டாலர் பரிசுத் தொகையாக அறிவித்திருக்கிறார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 28 கோடி ரூபாய்.
இறுதிப் போட்டியில் தோற்கும் அணிக்கு இரண்டு மில்லியன் டாலர் பரிசுத் தொகை அறிவித்திருக்கிறார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 14 கோடி ருபாய்.
இரண்டு அரை இறுதி ஆட்டத்தில் தோற்ரு வெளியேறும் அணிக்கு தலா எட்டு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகையாக அறிவித்திருக்கிறார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் தலா 5.6 கோடி ரூபாய்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கெடுக்கும் நாடுகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று நேரடியாக மோதிக் கொள்ளும். அப்படி மோதி வெற்றி பெறும் ஒவ்வொரு லீக் மேட்சுக்கும் 40,000 டாலர் பரிசுப் பணத்தைப் பெறுவார்கள். இந்திய ரூபாய் மதிப்பில் 28 லட்சம் ரூபாய்.
அதே போல ஒரு அணி லீக் போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் கட்டத்துக்கு அடி எடுத்து வைத்தால் ஒரு லட்சம் டாலர் பரிசுத் தொகை பெறுவார்கள். அது இந்திய ரூபாய் மதிப்பில் 70 லட்சம் ரூபாய்.
இப்படி ஐசிசி அமைப்பு தன் உலகக் கோப்பை போட்டிகளுக்கு மொத்தமாக 10 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை அறிவித்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக இந்திய ரூபாய் மதிப்பில் 70 கோடி ரூபாய்.
அதற்குள் இந்திய ரசிகர்கள் கோப்பையை ராசியப்பன் பாத்திரக் கடையில் கொடுத்து இந்தியாவின் பெயரை பதிக்குமாறு சொல்கிறார்கள். அதோடு அந்த இறுதிப் போட்டி வெற்றியாளருக்கான பரிசுத் தொகை 28 கோடி ரூபாயையும் இந்திய அணியின் பெயருக்கு பார்சல் செய்யச் சொல்லி கலாய்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் தான் இந்தியாவின் பிசிசிஐ மற்றும் ஐசிசி அமைப்புகளுக்கு இடையில் வரிச் சலுகைகள் கிடைக்காததால் பரிசுத் தொகை சம்பந்தமாக காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
ஐசிசி எவ்வளவோ முறை இந்திய வருமான வரித் துறையிடம் கேட்டும், பரிசுத் தொகைக்கு வரி விலக்கு கொடுக்க முடியாது எனச் சொல்லி விட்டது. அதனால் தான் இந்தியாவில் இருந்து ஃபார்முலா ஒன் பந்தயமே ரத்து செய்யப்பட்டு வேறு நாட்டில் நடத்தினார்கள்.
வரும் 2021 டி20 உலகக் கோப்பை மற்றும் 2023 ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை போன்ற போட்டிகளை இந்தியாவில் நடத்த இருக்கிறது ஐசிசி. ஆனால் இப்போது வரை பரிசுத் தொகைக்கான வரியைச் செலுத்தாமல் இருப்பதற்கான அனுமதியைக் கொடுக்கவில்லை இந்திய வர்மான வரித் துறை.
ஒருவேளை இந்திய வருமான வரித் துறை பரிசுத் தொகைக்கான பணத்துக்கு வரி செலுத்தியே ஆக வேண்டும் என அடம் பிடித்தால் பிசிசிஐ தன் சொந்தக் காசில் வரி செலுத்த வேண்டி இருக்கும் என பிரச்னை அடுத்த கட்டத்தை அடைந்திருக்கிறது.