வாழ்க்கையில் சிலருக்கு அதிர்ஷ்டம் சில்லறை மளிகை கடையில் கொடுக்கும் இலவச கறிவேப்பிலை, கொத்தமல்லி போல அவ்வப் போது வந்து போகும்.
மிக சிலருக்குத் தான் அதிர்ஷ்ட தேவதை, ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு கிடைப்பது போல அள்ளிக் கொடுக்கும்.
அப்படி ஒருவரைப் பற்றித் தான் பார்க்க இருக்கிறோம். இவருக்கு தொடர்ந்து அதிர்ஷ்ட தேவதை அள்ளிக் கொடுத்துக் கொண்டு இருக்கிறது. வெங்காயம் கிலோ 25 ரூபாய்க்கு கிடைப்பது போல. அப்படி என்ன அதிர்ஷ்டம் இவருக்கு..? என்ன நடந்தது..? வாருங்கள் பார்ப்போம்.
லாட்டரி
அவர் பெயர் ரத்னாகரன் பிள்ளை. வயது 66. நம் அண்டை மாநிலமான கேரளத்தில், திருவனந்தபுரத்துக்கு அருகில் இருக்கும் கில்லிமனூரில் வசித்து வருகிறார். கடந்த ஜனவரியில் தான் இவருக்கு கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரியில் 6 கோடி ரூபாய் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நிலம்
நம் ரத்னாகரன் பிள்ளை, தனக்கு கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை 27 சென்ட் வளமான விவசாய நிலம் வாங்க பயன்படுத்தினார். இந்த விவசாய நிலம், அவர் வீட்டில் இருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளி இருந்தது. சரியாகச் சொல்ல வேண்டுமானால் திருப்பாற்கடல் ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோவிலுக்கு அருகில் இருக்கிறது.
புதையல்
கடந்த செவ்வாய்க் கிழமை (டிசம்பர் 03, 2019) தன் நிலத்தில் காய்கறி பயிரிட நிலத்தை தோண்டி இருக்கிறார். அப்போது ஏதோ ஒரு மண் பாண்டம் தட்டுபட்டு இருக்கிறது. பிரித்துப் பார்த்தால்ஆயிரக் கணக்கான, திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பழங்கால காசுகள். பெரும்பாலும் காப்பர் காசுகள்.
காவலர்கள்
ரத்னாகரனுக்கு இந்த பழங்கால காசுகளைப் பற்றி கொஞ்சம் விவரம் தெரிந்து இருந்ததால் உடனடியாக அருகில் இருக்கும் காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்திவிட்டார். காவலர்களும், மாநில தொல்பொருள் ஆய்வுத் துறையினருடன், உடனடியாக விரைந்து
வந்து அந்த புதையலை பெற்றுக் கொண்டார்களாம்.
பரிசு
பொதுவாக, இப்படி பழங்காலத்து புதையல்கள், கிடைத்தால் உடனடியாக அரசிடம் சமர்பித்துவிட வேண்டும். இல்லை என்றால் அது தண்டனைக்குரிய குற்றம். இப்போது ரத்னாகரன் தன்னிடம் கிடைத்த புதையலை முறையாக மாநில அரசுக்கு கொடுத்துவிட்டதால், அரசு ஒர் பரிசுத் தொகை கொடுக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் தொல்பொருள் துறையினர்.
2019
ஆக நம் ரத்னாகரன் பிள்ளைக்கு இந்த 2019-ம் ஆண்டை 6 கோடி ரூபாய் லாட்டரி பரிசு பெற்று தொடங்கினார். இப்போது கடைசியாக டிசம்பர் மாதத்தில் 2,500-க்கும் மேற்பட்ட பழங்கால காசுகள் கொண்ட புதையலுடன் முடித்து இருக்கிறார். அதிர்ஷ்ட தேவதை சேட்டன் கூடயே இருக்கா போலருக்கே..?