உக்ரைன் - ரஷ்யா போரை தொடர்ந்து உலகம் முழுவதும் கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் விலை மிக வேகமாக அதிகரித்தது. போருக்கு முன்பு வரை உலகின் 10 சதவீத கோதமையை ஏற்றுமதி செய்யும் நாடாக உக்ரைன் இருந்து வந்தது. எனவே போர் தொடங்கிய உடன் உலகம் முழுவதும் கோதுமை விலை உயர்ந்தது. இந்தியாவும் கொதுமை உற்பத்தி சரிந்ததன் காரணமாக ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
இந்நிலையில் உக்ரைனில் இருந்து துருக்கி, ஐநா உதவியுடன் கருங்கடல் வழியாக உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வெள்ளிக்கிழமை ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தம் முடியும் வரை உக்ரைனின் ஒடேசா துறைமுகம் மீது எந்த தாக்குதலை நடத்த மாட்டோம் என ரஷ்யாவும் ஒப்புக்கொண்டது. ஆனால் அதை 24 மணி நேரத்தில் ரஷ்யா மீறியுள்ளது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் உலக நாடுகளிடையில் அதிருப்தியை தெரிவித்துள்ளன.
ஏவுகணை தாக்குதல்
தானிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இன்னும் 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில், ரஷ்யா ராணுவம் குரூஸ் ரக ஏவுகணைகளை ஓடெசா துறைமுகம் மீது ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலினால் ஒடெசா துறைமுகத்தின் சில பகுதிகள் பாதிப்பு அடைந்தாலும் உணவு சேமிப்பு கிடங்குகள் போன்ற பகுதிகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைன் அரசு விளக்கம்
மேலும் ஒடெசா துறைமுகம் மீது ரஷ்யா ஏவிய இரண்டு ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் தடுத்து வானிலேயே வெடிக்கச் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு ஐநா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலத்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
150 நாட்களாகத் தொடரும் போர்
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து 150வது நாளாக நடைபெற்று வருகிறது. போர் ஆரம்பித்த ஒரு வாரத்தில் முடிந்து விடும், ஒரு மாதத்தில் முடிந்துவிடும் என கூறப்பட்டு வந்த நிலையில் 150 நாளை தொடர்ந்து போர் நடைபெற்று வருவது உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. என்னவே உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஒப்பந்தம்
ஐநா - உக்ரைன் - துருக்கி - ரஷ்யா இடையில் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து உணவுப் பொருட்கள் துருக்கி உதவியுடன் கருங்கடல் வழியாக ஏற்றுமதி செய்ய முடியும். இந்த ஒப்பந்தம் காலம் முடியும் வரை ரஷ்யா எந்த தாக்குதலையும் இந்த வழியில் செல்லும் சரக்கு கப்பல்கள் மீதும் நடத்தக்கூடாது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை 24 மணி நேரத்தில் ரஷ்யா மீறியுள்ளது.
ரஷ்யா விளக்கம்
தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தை ரஷ்யா மீறிச் செயல்பட்டால் அதனால் ஏற்படும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறைக்கு ரஷ்யா தான் காரணம் என உலக நாடுகள் சாடி வருகின்றன. தற்போது ஏற்பட்டு வரும் உணவு பற்றாக்குறைக்கு நாங்கள் உக்ரைன் மீது நடத்தி வரும் போர் மட்டும் காரணம் அல்ல. அமெரிக்கா, யு.கே உள்ளிட்ட நாடுகள் எங்கள் மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையும் தான் காரணம் என ரஷ்யா தரப்பு கூறிவருகிறது.
ஐநா
ஐநா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், உக்ரைனிலிருந்து தானியங்கள், பிற வேளாண் அத்தியாவசிய பொருட்களை ஏற்றுமதி செய்ய அனைத்து தரப்பினரும் உறுதி அளித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தால் உலகம் முழுவதும் ஏற்பட்டு வரும் உணவு பற்றாக்குறை நெருக்கடி குறையும். ஏழை எளிய மக்கள் பட்டினியைப் போக்க முடியும். ரஷ்யா, அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.