டெல்லி: நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின், பங்குகளை விற்க போவதாக மத்திய அரசு கூறி வருகிறது.
இந்த நிலையில் இதற்கான அனுமதியும் அண்மையில் கிடைத்தது. இப்படி ஒரு நிலையில் ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ரோஸ்நெப்ட் (Rosneft petroleum refining company) நிறுவனம் பங்குகளை ஏலம் எடுக்க ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது.
ரோஸ்நெப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இகோர் செச்சின் எண்ணெய் மந்திரி தர்மேந்திர பிரதானை சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
ரஷ்ய நிறுவனம் ஆர்வம்
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பெரும்பான்மை உரிமையாளரான பாரத் பெட்ரோலியத்தின் பங்குகளை வாங்குவதற்கு ரஷ்ய நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் அந்த ரஷ்ய நிறுவனத்தின் மூத்த அதிகாரியான இகோர் செச்சின் முதன் முதலில் இன்று காலை தர்மேந்திர பிரதானை சந்தித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மற்றவர்கள் ஆர்வம்
மேலும் தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது மத்திய அரசு பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 53% பங்குகளை வைத்துள்ள நிலையில், தற்போது பிபிசிஎல்லை வாங்க ரோஸ்நெப்ட் நிறுவனம் மட்டும் அல்ல, சவுதி அரேபியாவின் சவுதி அராம்கோ நிறுவனம், ஐக்கிய அரசு எமிராட்ஸின் ADNOC நிறுவனமும், பிபிசிஎல்லை ஏலத்தில் எடுக்க ஆர்வம் தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
ஏற்கனவே பங்கு உள்ளது
ரோஸ்நெப்ட் நிறுவனம் ஏற்கனவே 49.13% நாயரா எனர்ஜி லிமிடெட் (முன்பு எஸ்ஸார் ஆயில் லிமிடெட்) நிறுவனத்தில் பங்குகளை வைத்திருக்கிறது. நயாரா குஜராத்தின் வடிநாரில் ஆண்டுக்கு 20 மில்லியன் டன் சுத்திகரிப்பு நிலையத்தை வைத்துள்ளது. இது நாட்டில் 5,628 பெட்ரோல் பம்புகளை வைத்திருக்கிறார். இந்த நிலையில் அடுத்தப்படியாக பிபிசிஎல்லின் பங்கினையும் வாங்க ஆர்வம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பிபிசிஎல் மொத்த செயல்பாடு
எரிபொருள் சில்லறை விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்துவதில் இது ஆர்வமாக உள்ளது. நாட்டில் உள்ள மொத்த பெட்ரோல் பம்புகளில் நான்கில் ஒரு பங்கை பிபிசிஎல் கொண்டுள்ளது. தற்போது நாட்டில் 67,440 பெட்ரோல் பம்புகளை கொண்டுள்ளது. தற்போது மும்பை கொச்சின், பினா (மத்திய பிரதேசம்), நுமலிகர் (அசாம்) உள்ளிட்ட பகுதிகளில் நான்கு சுத்திகரிப்பு நிலையங்களை கொண்டுள்ளது. இது ஆண்டுக்கு 38.3 மில்லியன் டன் கொள்ளளவுடன் இயக்கி வருகிறது. இந்தியாவில் மொத்த சுத்திகரிப்பு திறனில் 15% கொண்ட 249.4 மில்லியன் டன்னாகும்.