ரஷ்யா உக்ரைன் இடையேயானா பிரச்சனையானது பல வாரங்களாக தொடர்ந்து நீடித்து வருகின்றது. ரஷ்யாவின் தொடர் தாக்குதலை எதிர்த்து துளியும் தளராமல் உக்ரைன் போராடி வருகிறது.
இதற்கிடையில் பல்வேறு சவால்களையும், பொருளாதார பிரச்சனைகளையும் இவ்விரு நாடுகளும் எதிர்கொண்டுள்ளன.
குறிப்பாக இப்போருக்கான செலவினங்கள் மத்தியில், இவ்விரு நாடுகளும் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து வருகின்றன.
இருமடங்குக்கும் மேல் செலவு
இது குறித்து தி மாஸ்கோ டைம்ஸ் செய்தியறிக்கையில், கடந்த மாதத்தில் ரஷ்யா தினசரி 300 மில்லியன் டாலர்களை போருக்குகாக செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது இந்த போருக்கு முந்தைய பாதுகாப்பு செலவில் இருமடங்கிற்கும் மேலாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஒரு நாள் செலவு
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியதில் இருந்தே ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு துறைக்காக, ரஷ்ய அரசு கூடுதலாக செலவு செய்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் ரஷ்ய அரசு பாதுகாப்புக்காக மட்டும் 9.2 பில்லியன் டாலர் செலவினை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது ஒரு நாளைக்கு 308 மில்லியன் டாலர்கள் செலவு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு செலவினம்
குறிப்பாக கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ரஷ்யாவின் பாதுகாப்பு செலவினங்கள், கொரோனாவுக்கு முந்தைய காலத்தினை விட இருமடங்கு அதிகரித்துள்ளது. இது கடந்த ஜனவரி மாதத்தில் 3.4 பில்லியன் டாலராகும். இதே ஜனவரி - ஏப்ரல் 2022 காலகட்டத்தில் 24.6 பில்லியன் டாலர் பாதுகாப்பு செலவினங்களுக்கு செலவிடப்பட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.
செலவு
அந்த எண்ணிக்கை கல்விக்காக செலவிடப்படும் தொகையை விட மூன்று அதிகமாகும். சுகாதாரத்திற்காக செலவிடப்படும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது. சுற்றுசூழல் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்திற்காக செலவிடப்படும் தொகையை விட 10 மடங்கு அதிகமாகவும் உள்ளது.
செலவு அதிகரிப்பு
ஏற்கனவே ரஷ்யாவின் பொருளாதாரம் சரிவினைக் கண்டு வரும் நிலையில், ரஷ்யாவின் - உக்ரைன் இடையேயான பதற்றத்தின் மத்தியில் பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில் அரசுக்கு கிடைக்கும் வருவாய் விகிதமும் சரிவினைக் கண்டுள்ளது. இந்த நிலையில் செலவினமும் அதிகரித்துள்ளது.