உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்பு உக்ரைன் NATO அமைப்பில் அதிகாரப்பூர்வமாக இல்லையென்றாலும், அமெரிக்கா , பிரிட்டன், ஐரோப்பா உட்பட அனைத்து முன்னணி பொருளாதார நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாக நிற்கிறது.
இந்த நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலும் பிற வழிகளில் உக்ரைன்-க்கு ஆதரவாக இருக்கும் நாடுகளைக் கட்டம் கட்டி அடித்து வருகிறது.
ரஷ்யா கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரிட்டன்-ஐ தனது கச்சா எண்ணெய் வளத்தை வைத்துப் பாதிப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது உணவுப் பொருட்களை ஆயுதமாகப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
ஐரோப்பா
ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் கச்சா எண்ணெய், எரிவாயு-க்கு ரஷ்யாவை மட்டுமே நம்பி பல வருடங்களாக இயங்கி வந்த நிலையில் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைக்குப் பின்பு கச்சா எண்ணெய் ஏற்றுமதியை மொத்தமாக நிறுத்தியது.
நார்டு ஸ்ட்ரீம் பைப்லைன்
எரிவாயு விநியோகத்தை நார்டு ஸ்ட்ரீம் பைப்லைன் வாயிலாக ஏற்றுமதி செய்து வந்த நிலையில் பராமரிப்புப் பணிகள் என்ற பெயரில் மொத்தமாக நிறுத்தி வைத்துள்ளது மட்டும் அல்லாமல் எரிவாயு-வை வெறுமென எரித்து வருகிறது ரஷ்யா.
விளாடிமிர் புதின்
விளாடிமிர் புதின் தலைமையிலான ரஷ்ய அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது, குறிப்பாக எரிவாயு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாகப் பல தொழிற்சாலை மூடப்பட்டு உள்ளது, உற்பத்தி பாதித்துள்ளது, வர்த்தகம்,வேலைவாய்ப்பு என அனைத்தும் பாதிப்படைந்து உள்ளது.
பணவீக்கம், வட்டி விகிதம்
இதோடு ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் காரணத்தால் ஐரோப்பிய மத்திய வங்கி அதன் பென்ச்மார்க் வட்டி விகிதம் ஜீரோவுக்குக் கீழ் இருந்த நிலையில் அடுத்தடுத்து உயர்த்தி வருகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சியும் சரிந்து வருகிறது.
ஆயுதம்
ஐரோப்பா-வின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க எப்படி ரஷ்யா தனது எரிபொருள் வளத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியதோ அதேபோல் தற்போது உணவுப் பொருட்களை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக அமெரிக்க உயர் அதிகாரி ரஷ்யா-வை குற்றம் சாட்டியுள்ளார்.
உணவு பொருட்கள் பற்றாக்குறை
ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய பின்பு உலகளவில் நிலவிய உணவுப் பொருட்கள் பற்றாக்குறை பிரச்சனையைத் தீர்க்க துருக்கி மற்றும் ஐநா முன்னிலையில் 2022 ஜூலை மாதம் ரஷ்யா - உக்ரைன் மத்தியில் உக்ரைன் தானியங்களைக் கப்பல் வாயிலாக உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி பெற்றது.
ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் மூலம் உக்ரைன் நாட்டின் தானியங்களை உலக நாடுகளுக்குக் கப்பல் வாயிலாக ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டது, ஆனால் தற்போது கிரிமியா-வில் நடந்த டிரோன் அட்டாக் காரணம் காட்டி ரஷ்யா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக முடிவு செய்து ஏற்றுமதியைத் தடை செய்ய முடிவு செய்துள்ளது.
டிரோன் அட்டாக்
சனிக்கிழமை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் இருக்கும் கருங்கடல் படையின் மூலம் செய்யப்பட்ட டிரோன் அட்டாக்கிற்கு உக்ரைன் ராணுவம் தான் காரணம் எனக் கூறி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை முதல் உக்ரைன் நாட்டின் முக்கிய விளை பொருட்களான கோதுமை, பார்லி உட்படப் பல்வேறு தானியங்களின் ஏற்றுமதிக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.
அமெரிக்கா குற்றச்சாட்டு
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா எடுத்துள்ள முடிவு முற்றிலும் மூர்க்கத்தனமானது என்று கூறினார், இதோடு அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறுகையில் ரஷ்யா உணவை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது எனக் குற்றம்சாட்டினார்.