அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பல நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேறி வருகின்றன.
அந்த வகையில் தென்கொரியாவைச் சேர்ந்த மிகப் பெரிய எலக்ட்ரானிக் நிறுவனமான சாம்சங், இந்தியாவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இது குறிப்பாக ஸ்மார்ட்போன் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. அது மட்டும் அல்ல, சாம்சங் டிவி, சாம்சங் பிரிட்ஜ் என பல எலக்ட்ரானிக் பொருட்களையும் தயாரித்து, உலகம் முழுக்க விற்பனை செய்து வருகின்றது.
சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பு
சமீப காலமாக சீன நிறுவனங்களின் ஆதிக்கம் இந்தியாவில் அதிகமாக இருப்பதால் சாம்சங்கின் சந்தை மதிப்பு குறையத் தொடங்கியுள்ளது. எனவே மீண்டும் தனது சந்தை மதிப்பைப் பெருக்கிக்கொள்ள அதிக முதலீடு செய்யவும், இந்தியாவிலேயே அதிகமாக ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளதாக, கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான அறிக்கையில் கூறியிருந்தது.
டிவி ஆலையை மூட திட்டம்
அதே சமயம் சீனாவில் சாம்சங் நிறுவனத்துக்கான வர்த்தக வாய்ப்புகள் குறைந்துள்ளதால், இந்தியா மீது கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் நவம்பர் மாத இறுதிக்குள் சீனாவில் உள்ள ஒரே தொலைக்காட்சி ஆலையை மூட சாம்சங் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு பின்னடைவு
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார நாடான சீனாவில் இருந்து, இந்த நிறுவனம் தனது மிகப்பெரிய ஆலையை மூட திட்டமிட்டுள்ளது. சீனாவின் தியாஞ்சினில் உள்ள ஒரே ஒரு தொலைக்காட்சி ஆலையை மூட சாம்சங் முடிவு செய்துள்ளது சீனாவுக்கு பின்னடைவையே கொடுத்துள்ளது எனலாம்.
எத்தனை தொழிலாளர்கள்?
இந்த தொழில்சாலையில் 300 தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் என்று யோன் ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் சாம்சங் தரப்பில் இது குறித்து எந்த கருத்தும் கூறப்படவில்லை. ஆனால் சில தொழிலாளர்கள் மற்றும் சில உபகரணங்களும் தக்க வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கு சாதகமாகுமா?
சாம்சங் நிறுவனத்தின் இந்த முடிவு இந்தியாவுக்கும் நல்ல வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சீனாவினை அடுத்து மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தை எனில், அது இந்தியா தான். ஆக நிச்சயம் இது இந்தியாவுக்கு சாதகமாக அமையலாம் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.
சாம்சங்கிற்கு இது நல்ல காலமே
சில தினங்களுக்கு முன்பு தான் 5 ஜி சம்பந்தமான மிகப்பெரிய ஒப்பந்தத்தினை, அமெரிக்காவின் வெரிசோன் நிறுவனத்துடன், சாம்சங் போட்டுள்ளது. இதுவும் சீனாவுக்கு மிக பின்னடைவாகவே பார்க்கப் படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் சீனாவின் ஹூவாய் நிறுவனம் அமெரிக்காவின் மிகப்பெரிய ஒப்பந்ததாரராக இருந்த நிலையில், தற்போது அந்த வாய்ப்புக்கு சாம்சங் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.