கொரோனா வைரஸினால் உலகமே பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், சவுதி அரேபியாவும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது எனலாம்.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஜாம்பவான் நாடாக திகழும் சவுதி அரேபியாவின், இரண்டாவது காலாண்டில் அதன் பொருளாதார வளர்ச்சி 7% வீழ்ச்சி கண்டுள்ளது.
பரவி வரும் கொரோனா வைரஸினால், எண்ணெய் மற்றும் எண்ணெய் அல்லாத துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சவுதி பொருளாதாரம் மோசமான சரிவு
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதியின் பொருளாதாரம், இதுவரை இல்லாத அளவு மிக மோசமான வீழ்ச்சியினைக் கண்டுள்ளது. இது பரவி வரும் கொரோனா வைரஸினால், சர்வதேச எண்ணெய் தேவையானது மிகபெரிய அளவு வீழ்ச்சி கண்டதே இதற்கு முக்கிய காரணம். அதோடு உள்நாட்டு தேவையையும் இந்த கொரோனா மிக மோசமாக பாதித்துள்ளது.
துறை வாரியான வீழ்ச்சி
இதனால் சவுதியின் தனியார் துறை மற்றும் அரசுத் துறைகள் மிக மோசமான எதிர்மறையான வீழ்ச்சியை கண்டுள்ளன. இது முறையே 10.1% மற்றும் 3.5% எதிர்மறையான வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளன என்று ஜெனரல் அத்தாரிட்டி பார் ஸ்டேட்டிக்ஸ் கூறியுள்ளது. சவுதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சி முதல் காலாண்டில் 1% வளர்ச்சியினை கண்டிருந்த நிலையில், இரண்டாவது காலாண்டில் 7% வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது.
எண்ணெய் அல்லாத துறைகள் மோசமான வீழ்ச்சி
எண்ணெய் அல்லாத துறைகள் இரண்டாவது காலாண்டில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இது 8.2% வீழ்ச்சி கண்டுள்ளது. இதுவே எண்ணெய் துறையானது 5.3% வீழ்ச்சி கண்டுள்ளதாக புள்ளிவிவர ஆணையம் தெரிவித்துள்ளது. சவுதி மட்டும் அல்ல, உலக நாடுகள் அனைத்துமே இந்த இரண்டாவது காலாண்டில் பெரும் வீழ்ச்சியினை சந்தித்துள்ளன.
இந்தியாவின் சரிவு
இதே இந்தியாவினை பொறுத்தவரையில் இரண்டாவது காலாண்டில் 40 வருடங்களில் இல்லாத அளவுக்கு பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. அதுவும் 23.9% ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும் இனி வரும் காலாண்டுகளில் ஆவது இந்த சரிவிலிருந்து மீளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பொருளாதார வளர்ச்சி குறித்த நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இது அடுத்து வரும் காலாண்டு வளர்ச்சிக்கு கைகொடுக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய் தேவை அதிகரிக்கலாம்
இதே போலத் தான் சவுதியும். ஏனெனில் எண்ணெய் தேவையானது இனி வரும் காலங்களில் அதிகரிக்கலாம். அதோடு முற்றிலும் முடங்கிப் போயிருந்த விமான போக்குவரத்துகளும் இப்போது தான் படிப்படியாக தொடங்கி வருகின்றன. இதனால் இனி எண்ணெய் தேவையானது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.