சவுதி அரேபியாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களில் ஒன்று சவுதி அராம்கோ. சொல்லப் போனால் உலகின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனம், என்றே சொல்லலாம்.
உலகில், கடந்த 2016 - 2018 வரை உற்பத்தி செய்யப்பட்ட கச்சா எண்ணெய்யில் சுமார் 12 சதவிகிதம் சவுதி அராம்கோவின் உபயம் தான் என்றால் எவ்வளவு பெரிய நிறுவனம் என பார்த்துக் கொள்ளுங்களேன்.
கடந்த சில வருடங்களாக, இந்த சவுதி அராம்கோ நிறுவனம், தன்னுடைய பங்குகளை, சவுதி அரேபியாவின் டாசி (TASI - Tadawul All Share) பங்குச் சந்தைகளில் பட்டியலிடுவதைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தது. இப்போது வேலையில் இறங்கி இருக்கிறது.
மதிப்பு
சவூதி அராம்கோ நிறுவனம் தான் உலகத்திலேயே அதிக லாபம் சம்பாதிக்கும் நிறுவனம். இதை சவுதி அராம்கோ நிறுவனம் வெளியிட்ட நிதி நிலை அறிக்கைகள் தெளிவாகச் சொன்னது. இந்த செய்தி வெகு ஜன மக்கள் மத்தியில் கூட பிரபலம் அடைந்தது. உலகத்திலேயே அதிக லாபம் சம்பாதிக்கும் நிறுவனத்தின் ஐபிஓ, சவுதி அரேபியாவின் பங்குச் சந்தைகளில் வருகிறது என்றால் சூடு பிடிக்காதா என்ன..?
பழைய மதிப்பு
நான்கு வருடங்களுக்கு முன்பே, சவுதி அராம்கோ நிறுவனம் ஐ பி ஓ வழியாக பணம் திரட்டுவது குறித்துப் பேசியது. அப்போது, சவுதி அராம்கோ நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் 2 ட்ரில்லியன் டாலர் (2 லட்சம் கோடி டாலர்) வரை இருக்கலாம் எனச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் நிறுவன தரப்பினர்கள்.
புதிய மதிப்பு
ஆனால் வங்கிகளோ, சவுதி அராம்கோவின் சந்தை மதிப்பு, 2 லட்சம் கோடி டாலர் எல்லாம் இருக்காது. சுமாராக 1.5 லட்சம் கோடி டாலர் வரை இருக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். அப்படி வங்கிகள் சொன்ன கணக்குப் படி பார்த்தால் கூட ஆப்பிள், அமேசான் நிறுவனத்தை விட சுமார் 0.5 லட்சம் கோடி டாலர் அதிக சந்தை மதிப்பு கொண்டது சவுதி அராம்கோ.
40 பில்லியன் டாலர் ஐ பி ஓ
இப்போது சவுதி அராம்கோ நிறுவனம் தன்னுடைய 1 - 2 சதவிகித பங்குகளை வெளியிட்டு அதிகபட்சமாக 40 பில்லியன் டாலர் வரை திரட்ட இருக்கிறார்களாம். இதில் 25 பில்லியன் டாலருக்கு மேல் சவுதி அராம்கோ நிதி திரட்டினாலே போதும், அது உலகின் மிகப் பெரிய ஐ பி ஓ என்கிற பெயரை தட்டிப் பறித்து விடும்.
இதுவரை ஐ பி ஓ
கடந்த 2014-ம் ஆண்டு தான் சீனாவின் இ காமர்ஸ் நிறுவனமான, அலிபாபா 25 பில்லியன் டாலருக்கு ஐ பி ஓ வெளியிட்டு உலகின் மிகப் பெரிய ஐ பி ஓவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டது என்பதை இங்கு குறிப்பிட வேண்டி இருக்கிறது. சவுதி அராம்கோவின் ஐ பி ஓ வெளி வரட்டும் பிறகு யார் பெரிய ஐ பி ஓவை வெளியிட்டார்கள் என பார்த்துக் கொள்ளலாம்.
டாசி கொடுமை
இத்தனை புஜ பல பராக்கிரமங்கள் உடன் ஐ பி ஓ வெளியாக இருக்கும், சவுதி அராம்கோ நிறுவன பங்குகளை வாங்க, சவுதி மக்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த தயாரிப்பு வேலையின் ஒரு அங்கமாக, சவுதி அரேபியாவின் டாசி பங்குச் சந்தையில் முதலீடு செய்து வைத்திருக்கும் பணத்தை எல்லாம் விற்று எடுத்துக் கொண்டு இருக்கிறார்களாம். இதனால் கடந்த மே 2019 முதல் இன்று வரை டாசி சந்தை சுமார் 20 சதவிகிதம் சரிவு கண்டிருக்கிறதாம்.