மோசமான பொருளாதாரச் சரிவில் சிக்கியிருக்கும் இலங்கையில் புதிய அரசு அமைக்கப்பட்டுப் பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டாலும் இன்னும் போதுமான நிதியுதவியைப் பெற முடியாமல் தொடர்ந்து நெருக்கடியான சூழ்நிலையிலேயே தவித்து வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் இலங்கையில் பல வர்த்தகத் துறைகள் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது.
இதனால் இத்துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர சற்று கூடுதலான முதலீட்டைச் செய்யவேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இலங்கை அரசு மாட்டிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கையில் தற்போது 2 வாரம் முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது எதற்காகத் தெரியுமா..?
இலங்கை அரசு
ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான இலங்கை அரசு ஐபிஎம் அமைப்பிடம் நிதியுதவியைப் பெறப் பேச்சுவார்த்தையை துவங்கியுள்ள நிலையில், வெற்றிகரமாக இதைச் செய்து முடிக்க வேண்டும் என்ற ஓரே இலக்குடன் இலங்கை பொருளாதாரம் முழுமையாக திவாலாகாமல் தாக்குப்பிடிக்க முக்கியக் காரணமாக இருக்கும் அன்னிய செலாவணி இருப்பு அளவீட்டைத் தக்கவைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.
எரிபொருள் பயன்பாடு
இதற்காக அன்னிய செலாவணி இருப்பு அளவீட்டை அதிகம் பாதிக்கும் எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் விதமாக இரண்டு வாரம் பள்ளி, கல்லூரி மற்றும் அனைத்து அத்தியாவசியமற்ற சேவைகளை மூட உத்தரவிட்டுள்ளது, இதனால் பெரும் பகுதி மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இறக்குமதி
இலங்கை அரசு தன்நாட்டு மக்களுக்குச் தேவையான கச்சா எண்ணெய், உணவு பொருட்கள் ஆடை போன்ற அனைத்தையும் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வரும் நிலையில் அன்னிய செலாவணி இருப்பு அதிகளவில் தேவைப்படுகிறது.
ஷட்டவுன்
இந்தச் சூழ்நிலையில் டாலர் இருப்பைப் பயன்படுத்துவதை முடிந்த வரையில் கட்டுப்படுத்த முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் அரசு அலுவலகங்கள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை மட்டுமே கொண்டு இயங்கி வருகிறது. மேலும் மருத்துவமனை, துறைமுகம் ஆகியவை தொடர்ந்து இயங்கி வருகிறது.
51 பில்லியின் டாலர் கடன்
இலங்கை அரசு சுமார் 51 பில்லியின் டாலர் அளவிலான கடனை திருப்பி அளிக்க முடியாது என அறிவித்துத் திவாலாகியிருக்கும் நிலையில் புதிய கடன்களைப் பெற்று நாட்டுடன் பொருளாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான அரசு இயங்கி வருகிறது.
மக்கள் போராட்டம்
இப்புதிய அரசு பதவியேற்ற பின்பும் விலைவாசி மற்றும் அடிப்படை பிரச்சனைகள் குறையவில்லை என்றாலும் மக்கள் போராட்டம் குறைந்து உள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.