இலங்கையில் பல மாதங்களாகவே இல்லாத பிரச்சனைகளே இல்லை எனலாம். பொருளாதாரம், கடன், பணவீக்கம், விலைவாசி தொடங்கி, அரசியல் வரையில் அசாதாரணமான சூழலே இருந்து வருகின்றது.
ஆரம்பத்தில் கடன்,பொருளாதாரம் என தொடங்கிய பிரச்சனை, பின்னர் ஒரு நாட்டின் அதிபர் மாளிகையையே சூறையாடிய காட்சிகளை பார்க்க முடிந்தது.
இப்படி பல இக்கட்டான பிரச்சனைகளுக்கு மத்தியில் இருந்து வரும் இலங்கைக்கு, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் உதவிக் கரம் நீட்டினாலும், தற்போது வரையில் இலங்கையில் பொருளாதார சரிவு என்பது மிக மோசமான சரிவினைக் கண்டுள்ளது.
இக்கட்டான சூழலில் பட்ஜெட்
இன்றும் இலங்கையில் விலைவாசி, அத்தியாவசிய பொருட்களுக்கான பற்றாக்குறை, கடன் பிரச்சனை என பலவும் மக்களை வாட்டி வதைத்து வருகின்றன. இத்தகைய சூழலில் அரசின் கையில் பெரியளவில் நிதியும் இல்லை. பெரும் நிதிப்பற்றாக்குறை உள்ளது. இந்த சமயத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வெறும் வார்த்தைகளால் கூறி விட முடியாது.
முக்கியத்துவம் வாய்ந்த பட்ஜெட்
சுமார் 22 மில்லியன் மக்கள் வசிக்கும் இலங்கை சந்திக்காத பிரச்சனையே இல்லை என்ற நிலையில், பொருளாதாரம் என்பதை பற்றி யோசிக்கவே நேரமில்லை எனலாம். எனினும் இலங்கையில் இன்று தாக்கல் செய்யப்படவிருக்கும், பட்ஜெட் 2023 என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அரசியல் ரீதியாகவும் முக்கிய பட்ஜெட்
இது இலங்கையில் மட்டும் அல்ல, பல்வேறு உலக நாடுகளும் இதனை கவனித்து வருகின்றன. ஜனாதிபதியாக ஐக்கிய தேசிய கட்சி சார்பிலான ஒருவர் தலைமையில் 29 வருடங்களுக்கு பின்னர் சமர்பிக்கப்படும் பட்ஜெட் ஆகும். ஆக பொருளாதார ரீதியாக மட்டும் அல்ல, அரசியல் ரீதியாகவும் அவர்கள் தங்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள, எந்த மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க போகிறார்கள் என்பது அரசியல் கட்சியினரிடையேயும் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களிலும் ஒன்றாக உள்ளது.
மோசமான நிலையில் தலைவரான ரணில்
இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த நிலையில், பதவிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவினால், நிதியமைச்சர் என்ற முறையிலும் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது.
இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் போதிய நிதி என்பது இலங்கையின் கையில் இல்லாத நிலையில், அதற்காக அரசு என்ன செய்ய திட்டமிட்டுள்ளது என்பதும் பெரும் கேள்வியாக உள்ளது.
எதிர்பார்ப்பு
குறிப்பாக சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா? குறிப்பாக இலங்கையின் முக்கிய தொழில் என்பதே கைத்தொழில் சம்பந்தப்பட்டது தான். ஆக அவர்களுக்கு ஏதேனும் ஆதரவு இருக்குமா? இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகளும் இருந்து வருகின்றன.
என்னென்ன அறிவிப்புகள்?
1948 பிறகு மோசமான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை, பல்வேறு சீர்திருத்தங்களுக்கு மத்தியில் இந்த பட்ஜெட்டினை தாக்கல் செய்யவுள்ளது. இதில் கடனை மறுசீரமைப்பு செய்யவும், வருமானத்தை அதிகரிக்கவும் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செலவு குறைப்பு நடவடிக்கையும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களின் எதிர்பார்ப்பு
தற்போது இலங்கையில் 70%க்கும் அதிகமான குடும்பங்கள் அரசிடம் ஆதரவை எதிர் நோக்கி இருக்கின்றன. நடப்பு ஆண்டில் இங்கிலாந்தின் பொருளாதாரம் 8% என்ற அளவுக்கு சரிவினைக் காணலாம் என ஆய்வுகள் மதிப்பிட்டுள்ளன. இந்த பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்திற்கும், அரசியலையும் மேம்படுத்தலாம்.
உலக வங்கி கணிப்பு
இலங்கையின் பொருளாதாரம் நடப்பு ஆண்டில் 9.2% ஆகவும், 2023ம் ஆண்டில் 4.2 ஆகவும் சரியலாம் என உலக வங்கி கணித்துள்ளது. 22 மில்லியன் அடங்கிய இலங்கையில் கொரோனாவின் காரணமாக பொருளாதாரம் மிக மோசமான சரிவினைக் கண்டது. நாட்டின் மிக முக்கியமான வணிகமாக இருந்த சுற்றுலா மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதனால் வருவாய் பெரும் சரிவினைக் கண்டது.
அன்னிய செலவாணி சரிவு
அதோடு தவறான நிர்வாகம் காரணமாக பொருளாதாரம் இன்னும் கடுமையாக பாதிக்கப்பட்டது. அன்னிய செலவாணி என்பது மிக மோசமான சரிவினைக் கண்டது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வந்தது. வேகமாக உயர்ந்து வரும் பணவீக்க பிரச்சனையால் மக்கள் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொண்டனர்.
நுகர்வும் சரிவு
அதிகரித்து வரும் விலைவாசி காரணமாக நுகர்வும் சரிவினைக் கண்டது. வேலையின்மை விகிதம் என்பதும் அதிகமாக காணப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக நிறுவனங்களின் வளர்ச்சி என்பது மோசமான சரிவினைக் கண்டது. தனி நபர் மற்றும் பெரு நிறுவன வருமான வரி விகிதத்தினை இந்த சூழலில் 24%ல் இருந்து, 30% ஆக அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.